Thursday, December 30, 2010

Saturday, December 25, 2010

Tuesday, December 21, 2010

மச்சங்களும் அதன் பலன்களும்

நானும் ஜோசியமும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன். ஆனால் அதில் சொல்வதற்கு நிறைய இருப்பதால் இப்பொழுது நேரமில்லை. எனவே மச்சத்தை மட்டும் எழுதி இருக்கிறேன்.

நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும், நிறத்தினை கொண்டும் வடிவங்களை கொண்டும் இனம் பிரித்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

கருப்பு மச்சம், சிகப்பு மச்சம், பச்சை மச்சம் என்பவை பொதுவாக காணப்படுவதாகும். இதில் சங்கு வடிவம், பிறை வடிவம், சக்கர வடிவம் என வடிவ அமைப்பிலும் முடியுள்ள மச்சம் என அமைப்பிலும் பகுக்கப்பட்டுள்ளது.

கண்களால் காணமுடியாதவண்ணம் மச்சமிருப்பின் யோகமாகும். அதில் முடி இருந்தால் அதிர்ஷ்டமே.

மச்சங்கள் பொதுவில் ஆண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் பெண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் அளிக்கும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சோதிட சாஸ்திரத்தில் இந்த மச்சத்திற்கும் சாமுத்திரிகா லட்சணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் பல நேரங்களில் இந்த இரண்டு அம்சத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டது உண்டு. உயரமானவர்கள், குட்டையானவர்கள், குண்டானவர்கள், ஒல்லியானவர்கள், நெற்றியில் ரேகைகள், கண்கள், நமது சாதாரண பார்வைக்கு தெரியும் மச்சங்கள், முடி, கூந்தல் அமைப்புகள் இவை அனைத்தையும் வைத்து நட்சத்திரம் அல்லது ராசியை கிட்டத்தட்ட நெருங்கி விடுவேன். ரத்த வகை, குணாதியங்களை கண்டறிந்த பின்பு எனக்கு கைரேகை பார்ப்பது என்பது அல்வா சாப்பிடுவதை போல. ஏனெனில் என்னை டெஸ்ட் பண்னத்தான் எதிராளி வந்திருக்கிறான் எனபதைக்கூட கண்ணையும் நெற்றி ரேகையையும் வைத்து கண்டுபிடித்துவிடுவேன்.

கீழ்கண்ட மச்ச பலன்கள் கிட்டத்தட்ட சரியானவை. அவரவர்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ளவும். சிகை பலன்களை தனிப்பதிவாக தருகிறேன். காத்திருக்கவும்.

பெண்களுக்கான மச்ச பலன்
நெற்றி நடுவே - புகழ், பதவி, அந்தஸ்து வாய்க்கும்
நெற்றி வலதுபுறம் - தைரியம், பணிவு இல்லாத போக்கு இருக்கும்
நெற்றி இடதுபுறம் - அற்பகுணம், முன்கோபியாவாள்
மூக்கின் மேல் - செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு, பெண்களால் அவமானம் உண்டாகும்
மூக்கின் நுனி - வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் - ஒழுக்கம், உயர்ந்த குணம் (கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவளாய் இருப்பாள்)
மேல் வாய் பகுதி - அமைதி, அன்பான கணவர் கிடைக்கு
இடது கன்னம் - வசீகரம், விரும்பியதை அடைவாள்
வலது கன்னம் - படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் (இரத்த கொதிப்பு வரும்)
வலது கழுத்து - பிள்ளைகளால் யோகம்
நாக்கு - வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் - கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் - சொத்து சேர்க்கை, தயாள குணம் இருக்கும்
தலை - பேராசை, பொறாமை குணம் கொண்டவள்
தொப்புளுக்கு மேல் - யோகமான வாழ்க்கை (கணவன் அதிருஷ்டசாலி)
தொப்புளுக்கு கீழ் - மன அமைதியின்மை, பொருள் நஷ்டம் (கணவன் துரதிருஷ்டசாலி)
தொப்புள் - ஆடம்பரம், படாடோபம்
வயிறு - நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு, குறி - ராஜயோக அம்சம், உயர்பதவிகள் (நிர்வாகத்திறமை)
இடது தொடை - தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், முடிவெடுப்பதில் குழப்பம்
வலது தொடை - ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை, தலைக்கணம்
புட்டங்கள் - சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை (தலைமை பொறுப்புக்கு ஏற்றவள்)


ஆண்களுக்கான மச்ச பலன்
புருவங்களுக்கு மத்தியில் - நீண்ட ஆயுளை கொண்டவன்
நெற்றியின் வலது புறம் – தனயோகம் கொண்டவன்
வலது புருவம் – திருமணத்திற்கு பின் / மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) - திடீர் அதிர்ஷ்டம் வரும்
வலது கண் - நண்பர்களால் உயர்வான்
வலது கண் வெண்படலம் - புகழ், ஆன்மீக நாட்டம் கொண்டவன்
இடது புருவம் - ஏற்ற, இறக்கமான வாழ்க்கை / செலவாளி
மூக்கின் மேல் - சுகபோக வாழ்க்கை கொண்டவன்
மூக்கின் வலதுபுறம் - நினைத்ததை அடையும் அம்சம் கொண்டவன்
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு / பெண்களால் அவமானம் வரலாம்
மூக்கின் நுனி - ஆவணம், கர்வம், பொறாமை, தலைக்கணம்
மேல், கீழ் உதடுகள் - அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) - செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம் (இவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்)
வலது கன்னம் - வசீகரம், தயாள குணம் கொண்டவன்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு இருக்கும்
வலது காது நுனி - சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி - தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே - பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை - திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் - சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு - ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு - பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு - பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு, குறி - திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை, தாம்பத்ய சுகம்
புட்டம் - அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு வரும்

Monday, December 20, 2010

ஈசன் – விமர்சனம்

சசிகுமார் – இந்த ஒரு வார்த்தைக்காகவே நம்பி போன என்னை மாதிரி எத்தனையோ பேர்களை – அடப்போப்பா..

சரக்கு டம்ளர்குள்ள ஊத்துற ஒயினை வேற ஆங்கிள்ல கிராபிக்ஸ் பண்ணி டைட்டில்ல போடும்போது என்னமோ சொல்லப்போறார்னு பார்த்தால் கடைசி வரை சரக்கு கடைக்குள்ளேயே படத்தை எடுத்து முடிச்சிருக்கிறார்.

கதை – என்ன கதை? ஒரு காலத்திலே விஜய்யோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ரெகுலராக எடுத்துக்கிட்டு இருந்த மொக்கை கதைதான். அக்காவை கொன்னவங்களை தம்பி பழி வாங்குறான். ஆவ்வ்வ்வ்....

ஒரே ஆறுதல் இசையும், கேமிராவும். பைக் விபத்தில் அடிபடும் கோணத்தில் கண்களில் இருந்து வரும் ரத்தம் சிலிர்ப்பு. மத்த எல்லா சீன்களும் கடுப்பு. ஒவ்வொரு முறையும் பப், பார்ன்னு காட்டும்போது ரெகுலர் குடிகாரங்ககூட அட போய்யான்னு சொல்றது தியேட்டர்குள்ளேயே கேட்குது.

ஹீரோவும் கிடையாது, ஹீரோயினும் கிடையாது. காமெடிக்கு... எல்லாருமே கிட்டத்தட்ட காமெடியன் தான். க்ரைம் நாவல்களில் ராஜெஷ்குமார் ஸ்டைலில் சில வெவ்வேறு தளங்களில் அத்தியாயத்துக்கு அத்தியாயம் கதை பயணிக்கும், கடைசியில் 3 தளங்களையும் ஒரே அலை வரிசையில் இணைப்பார். அந்த டெக்னிக்கை இயக்குநர் ஓவர் வன்முறையோடு, சொல்லி இருக்கிறார்.

புழுதி பறக்கும் மதுரைத் தெருக்களில் நின்று, சுப்பிரமணியபுரம் கதை சொன்ன சசிகுமார், இந்த முறை சென்னையின் பளபளப்பான கட்டிடங்களையும் கனவுலகம் போன்ற நட்சத்திர ஹோட்டல்களையும் பப்களையும் சுற்றிக் கதைக் களத்தை அமைக்கிறார். பின்னிரவு பார்ட்டிகள், அவற்றில் உல்லாசம் தேடும் இளசுகள், போதையில் அமிழும் பெண்களைத் துரத்தும் பையன்கள் என்று தொடங்கும் கதை மெல்ல மெல்ல விரிந்து அரசியல் களத்துக்கு இடம் பெயர்கிறது. தெய்வநாயகம் (ஏ.எல். அழகப்பன்) என்னும் சக்தி வாய்ந்த அமைச்சரின் பையன் செழியன் (வைபவ்). அமைச்சரின் வலிமையைப் பயன்படுத்தி வைபவும் அவன் நண்பர்களும் இஷ்டத்துக்கும் ஆட்டம் போடுகிறார்கள். ரேஷ்மா (அபர்ணா) என்ற பெண்ணை ஒரு பப்பில் பார்க்கும் செழியன் அவள்மீது காதல் கொள்கிறான். விரைவிலேயே அவளும் காதல்வயப்படுகிறாள். (நல்லவேளை டூயட் எல்லாம் கிடையாது)

இதற்கிடையில் ஒரு காண்டிராக்ட் விஷயமாக அமைச்சருக்கும் பெரிய தொழிலதிபருக்கும் முட்டிக்கொள்கிறது. அந்தத் தொழிலதிபரின் பெண்தான் ரேஷ்மா. இந்த விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணை வைத்தே தொழிலதிபரை வழிக்குக் கொண்டுவர அரசியல்வாதி திட்டமிடுகிறார். சாமர்த்தியமாகக் காய் நகர்த்தும் அமைச்சருக்கு இதில் வெற்றி கிடைக்கிறது. திருமணம் என்ற உற்சாகத்தில் செழியன் மிதக்கும்போது எதிர்பாராமல் தாக்கப்படும் அவன், மர்மமான முறையில் காணாமல் போகிறான்.


அமைச்சர் ஆவேசம் கொண்டு அவனைத் தேட போலீஸ் கமிஷனரை ஏவுகிறார். நேர்மையான அதிகாரியான துணை கமிஷனர் சங்கையாவிடம் செழியனைக் கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. சங்கையாவின் புலனாய்வு வெற்றி அடையும் சமயத்தில் தன் பையனின் கதியை அறியும் அமைச்சரால் ஆபத்து வருகிறது. செழியனின் கதி என்ன, அவனை யார் தாக்குவது? அதன் பின்னணி என்ன? யார் ஈசன்? சங்கையாவுக்கும் அமைச்சருக்குமான மோதலில் வெல்வது யார்? இதுதான் கதை.

சங்கையாவாக சமுத்திரகனி. சூப்பர் நடிப்பு. உடல் மொழியும் அசத்தல். அந்த சின்னப்பையன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அபினாயா இந்த படத்துக்கு பெரிசா தேவையில்லை. சென்னையின் இரவு வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என எண்ண வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சசி இயக்குனராக ஜெயிக்க இன்னும் நல்ல கதை வேண்டுமே!

வன்முறை அதிகம். ஒரு முறை பார்க்கலாம்.

Saturday, December 18, 2010

ஆழ்ந்த அனுதாபங்கள்

நண்பர்களே!

ஒரு துக்க செய்தி.

நமது சீனியர் நண்பரும் எல்.பி.தர்மராஜின் அண்ணனுமான திரு.எல்.பி.மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. 40 வயதுதானிருக்கும்.

அன்னாரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம்.

Tuesday, December 14, 2010

மிஸ்டரின் அட்டூழியங்கள்!

எல்லா வீட்டு த‌ங்க‌ம‌ணிக‌ளின் புல‌ம்ப‌ல்க‌ள்...

=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...


=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...



=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு.


=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.


=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...


=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...


=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!


=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...


=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...


=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..


=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...


=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.


=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...


=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

Thursday, December 9, 2010

செருப்பு

தலைப்பை பார்த்ததும் நெற்றியை சுருக்குபவர்களே பலர். ஆனால் இந்த செருப்பினை பற்றி நிறைய நாட்கள் நான் மனதில் நினைத்தது உண்டு. என்னடா செருப்பை பற்றிய ஒரு தலைப்பில் கட்டுரையா என நினைக்கும் நண்பர்களே! பரதன் காலத்திலும் சிண்ட்ரெல்லா கதையிலும் இப்படி பல இடங்களில் செருப்பின் மகத்துவமும் முக்கியமும் இருந்திருக்கிறது.

ஒருவரை கேவலப்படுத்த வேண்டுமெனில் அனைவரும் சொல்லும் வாக்கியம் செருப்பு பிஞ்சிடும் ஜாக்கிரதை என்பதுதான்.

மிகச்சின்னசிறு வயதில் நான் செருப்பெல்லாம் போட்டிருந்தேனா என்று எனக்கு சரிவர நினைவில்லை. ஆனால் செருப்பினை முதன் முதலில் ஆவலுடன் பார்த்தது பஞ்சாயத்து ஸ்கூலில் அரசாங்கம் இலவசமா கொடுத்த ஒரு ஜோடி தோல் செருப்புதான். வெள்ளை சட்டையும் காக்கி டவுசரும் கூட இந்த செருப்புதான் அனேகரின் அடையாளங்கள். ராணி மெய்யம்மை வந்ததிற்கு பிறகு கட்டாயமாக நான் ஷுவிற்கு மதமாற்றம் ஆகிவிட்டாலும் கூட செருப்பின் மீது எனக்கு ஒரு காதல் இருந்து கொண்டே இருந்தது.

உயர் நிலை பள்ளி வாழ்க்கையில் ஷூவை நம்மில் அனேகரும் விரும்பவில்லை. சமயம் கிடைக்கும் நேரம் எல்லாம் கழற்றி வைத்து விடுவோம். முதலில் லெதர் ஷூ பிறகு அதிலும் பிளாஸ்டிக் வந்து சேர்ந்தது. சுதர்சன் முதலில் கழுவும் வகையில் பிளாஸ்டிக்கா இல்லை ரப்பரா என தெரியாத நிலையில் ஒரு ஷூவை வாங்கி வந்து 9 வது படிக்கும் போது காண்பித்தான். அதை பார்த்து எல்லோரும் அதே போல் வாங்கிக்கொண்டோம். கிரிக்கெட் விளையாடும் போது கூட யாரும் ஷூ போட்டுக்கொண்டதில்லை. செருப்புதான்.

10 வது முடித்ததும் நான் செட்டி நாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் டிப்ளமோ சேர்ந்தேன். முதன் முதலில் எனக்கென்று சில பொருட்கள் வாங்குவதற்கா காரைக்குடி பஜாருக்கு போனேன். நம்ப மாட்டீர்கள். நான் முதலில் வாங்கியது எனக்கென ஆசையாய் ஒரு குவாடிஸ் டைப் செருப்புதான். சரவணனும் கதிரேசன் மாமாவும் குவாடிஸ் டைப்தான் போட்டிருப்பார்கள். எனவே அதே போல் தேடியலைந்து வாங்கினேன். ஆனால் தோல் செருப்பு என்பது ரொம்ப நாள் எனக்கு ஒத்து வரவில்லை. தினமும் சைக்கிளில் 6 கிமீ போய் படிக்க வேண்டி இருந்ததால் செருப்பு அடிக்கடி பிய்ந்து விடும். அதனால் அதற்கப்புறம் ரப்பர் செருப்பையே போட்டு வந்தேன். படித்து முடித்து முதன் முதலில் கரூரில் வேலைக்கு சேர்ந்து நான் வாங்கிய 750 ரூபாய் சம்பளத்தில் அப்பாவிற்கு ஒரு வேஷ்டியும் எனக்கு ஒரு செருப்பையுமே முதன் முதலில் வாங்கினேன். 100 ரூபாய்க்கு ஒரு செருப்பு என்பதே அப்பொழுதெல்லாம் ஒரு கனவாக இருந்தது.

பின்பு படிப்படியாக வேலைக்கு போக ஆரம்பித்து எனக்குள்ளே பணம் சேரும்பொழுதெல்லாம் நான் வாங்கும் பொருளில் முதலில் செருப்பே இருக்கும்.

என்னதான் வாசலிலேயே கழற்றிவிடக்கூடியதாக இருந்தாலும் என்னைப்பொருத்தவரை செருப்பு மிக அந்தஸ்தானதே.