Sunday, September 26, 2010

ஊர்களும் – பேர்களும்

வழக்கில் மறுவிவிட்ட தமிழ் பெயர்கள் (சில நெட்டில் சுட்டவை)

பொழில்வாய்ச்சி - பொள்ளாச்சி
குளித்தண்டலை - குளித்தலை
கோவ நாயக்கன் புத்தூர் – கோவன் புத்தூர் - கோயம்புத்தூர்
சென்னப்ப நாயக்கன் பட்டினம் – சென்னை
ஹேமில்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் பாலம் – பார்பர்ஸ் பிரிட்ஜ்
கருவூர் – கரூர்
ஸ்ரீவலம்வந்தபுரி – சீவலப்பேரி
சோழன் உவந்தான் – சோழவந்தான்
மயிலாடுதுறை – மாயவரம்
சிராப்பள்ளி – திருச்சிராப்பள்ளி
வடவழி - வடவள்ளி, கோவை
சுந்தரபாண்டிய நல்லூர் – சூரலூர் – சூலூர்
அரும்புக்கோட்டை – அருப்புக்கோட்டை
சித்தர் அன்னவாயில் – சித்தன்னவாசல்
இட்டவி (மாவை இட்டு அவி) – இட்டலி – இட்லி
கைகடிப்பட்டிணம் – கடியப்பட்டிணம் (முட்டம்)
சிங்கம்பிடாரி – சிங்கம்புணரி
ஆன் பொருணை நதி – அமராவதி ஆறு
உப்பு இட்ட மங்களம் – உப்பிடமங்கலம்
கால் நாடு காத்தான் – கானாடுகாத்தான்
ஒப்பிலா அப்பன் – உப்பிலியப்பன்
திருஎவ்வுள் – திருவள்ளூர்
பண்டாரெட்டிப்பாளையம் – பண்டாரெட்டி – பண்ணுருட்டி- பண்ருட்டி
சுழியல் – திருச்சுழியல் – திருச்சுழி
திருவரங்கம் – ஸ்ரீரங்கம்
தூற்றிக்குடி – தூத்துக்குடி
வீரச்சாலை – விரையாச்சிலை – விராச்சிலை
சாலை கூடி – சாயல்குடி
கூவலூர் – கூகலூர்
பழம் நீ – பழனி
ஆரைக்கல் - நாமக்கல்
தில்லைவனம் – சிதம்பரம்
கடம்பவனம் – மதுரை
வேணுவனம் – திருநெல்வேலி
ஆர்க்காடு – ஆற்காடு (ஆத்தி மரங்கள் நிறைந்த காடு)
ஏரிக்காடு – ஏற்காடு (ஏரிகள் நிறைந்த காடு)
பைம்பொழில் – பம்புளி (குற்றாலம்)
திருவிடைச்சுரம் – திருவடிசூலம்
கஞ்சிவரம் – காஞ்சிபுரம்


இன்னும் உங்களுக்கு தெரிந்தவைகளை இடுகையில் இடலாம்

Sunday, September 19, 2010

முரண்பாடுகள்

நான் பாலிடெக்னிக் படித்த காலத்தில் என்னுடன் கல்யாணசுந்தரம் என்றொருவன் படித்தான். இருவரது பெயரும் ’க’ வில் வருவதால் அனேகமாக எல்லா கிளாஸ்களிலும் என் பேட்ச்சிலேயே இருபபான். பெரிய படிப்பாளி என்று சொல்ல முடியாது. நானும் அந்த கேட்டகிரிதான். எனவே ஒப்பீட்டளவில் அவனை இந்த விவாதத்தில் எடுத்துக்கொள்கிறேன். அய்யர் வீட்டு பையன். சிறந்த வாய்த்துடுக்கானவன். யாரிடமும் பேசி ஜெயிக்க வல்லவன். பல அரியர்கள் வைத்திருந்தான். ஷோக்காளி. நாங்களெல்லாம் அங்கே ரூம் எடுத்து தங்கி படித்துவந்தவர்கள். ஆனால் கலயாணமோ அதே ஏரியாக்காரன் என்பதால் வீட்டிலிருந்து தான் வருவான். எங்களை விட அவனுக்கு உள்ளூரில் தெரிந்த முகங்கள் அதிகம். இருப்பினும் லூட்டி அடிப்பதில் அனைவரையும் மிஞ்சினான். கண்டிப்பாக வாழ்க்கையில் இவன் சிரமப்படுவான் என நான் நினைத்தது உண்டு. ப்ராஜெக்ட் சமயங்களில் கூட காப்பி அடித்தே பாஸ் செய்தான். நாங்கள் இருவருமே படிப்பை முடிக்கும் சமயம் ஓரிரு அரியர்களுடன் தான் வெளியே வந்தோம்.

அதன் பிறகு இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் மிகவும் சிரமப்பட்டு எனது அரியரான கணிதத்தை கிரி அண்ணாவிடம் ட்யூசன் போய் படித்து பாஸ் செய்தேன். அதன் ரிசல்ட் வரும் சமயம் மார்க் ஷீட் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது அவனை பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே நல்ல கலராக இருக்கும் அவன் இன்னும் பாலீஷாக இருந்தான். கூலிங் கிளாஸ் வேறு. கெட்டப்பே மாறி இருந்தான். அவனை தூரத்தில் பார்த்தபோதே அவன் கண்டிப்பாக இம்முறையும் பெயிலாகி இருப்பான் என நினைத்தேன். ஆனால் அவன் 5 பேப்பரையும் ஒரே ஸ்ட்ரோக்கில் பாஸ் செய்திருந்தான். கொஞ்சல் கூட அலட்டலே இல்லாமல். சரி... வெட்டி ஆபீசராக இருந்திருப்பான்.. அதனால் படிக்க நேரம் கிடைத்திருக்கும் என நினைத்து அவனிடம் போய் பேசினேன். பெரிய அதிர்ச்சி என்னவெனில் அவன் அசோக் லைலாண்ட் (ஓசூர்) கம்பெனியில் சொல்லிக்கொள்ளும்படியான உத்தியோகத்தில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தான். இது எப்படி சாத்தியம் என குழம்பினேன். அவனுடன் நான் 2 மணி நேரங்கள் அன்று செலவிட்டேன். எந்த கருத்திற்கும் எதிர் வாதம் செய்யும் அவன் எப்படி செட்டில் ஆனான்? அவனுக்கு உதவிகள் எப்படி கிடைத்தது. இத்தனைக்கும் அந்த கம்பெனியில் அவனுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. நண்பர்களும் கிடையாது. எப்படிடா அந்த வேலை உனக்கு கிடைத்தது என கேட்டேன். அவன் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு பயோடேட்டாவை தயார் செய்து பல காப்பிகள் எடுத்து பேப்பரில் வரும் விளம்பரங்களை பார்த்து அப்ளை செய்து கொண்டே இருந்தானாம். ஓசூரில் லைலாண்ட் கம்பெனியில் தினக்கூலி அடிப்படையில் ஒரு வேலை கிடைக்க உற்சாகமாக கிளம்பிவிட்டான். அங்கு போயும் சும்மா இருக்கவில்லை. இவனது எதிர்மறையான எண்ணங்களின் விளைவாக எல்லோரிடமும் உத்தியோகம் சம்பந்தமாக முரண்பாடான கேள்விகளை எழுப்ப நீண்ட நாட்களாக அவர்களால் கண்டறிப்படாமல் இருந்து ஒரு தவறை போகிற போக்கில் கண்டுபிடித்திருக்கிறான். உடனே அவனை கம்பெனி QC யாக்கி விட்டார்கள். உருப்படியாக வாழ்க்கையில் செட்டில் ஆக மாட்டான் என நான் நினைத்தது முற்றிலும் தவறாகி விட்டது. ”இறைவன் எல்லா உயிர்களுக்கும் உணவை படைத்திருக்கிறான். ஆனால் அந்த உயிர்களின் கூட்டில் அல்ல” என்பது எனக்கு உறைத்தது. அதுவரை எனக்குள் இருந்த சில கோக்குமாக்குகளை சரிசெய்யத்தொடங்கினேன். கோவில்களுக்கு செல்லவும் ஆரம்பித்தேன். நிறைய படித்தேன். எனக்குள் ஏற்பட்ட பல கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தேன். தெளிவு பிறந்தது.

முரண்பாடுகளே முன்னேற்றத்திறகான வழி. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை – கண்ணதான்.

Monday, September 13, 2010

படித்ததில் பிடித்தது - சிலம்பாட்டம்

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.


சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது.


அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம், ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சுக்ரீவன் தென் பகுதியில் சீதையைத் தேட, வானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். எனவே, கி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்கு, பொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்து வந்துள்ளது என தெரிகிறது.


ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.


சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.


சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்றவை அடங்கும்.


கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே.


"கராத்தே' என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார்.


சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.


சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். சிலம்பத்தில் "வளரி' என்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார்.


சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், ""சின்ன மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.


இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.


தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.


""வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.


ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பெரும் முயற்சியால் தமிழக அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளில் விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. பூ.திருமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது.


பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

Wednesday, September 8, 2010

நடிகர் முரளி மரணம்!

கே பாலசந்தர் இயக்கிய பூவிலங்கு படத்தின் மூலம் (1984) தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 47 வயதான அவர் இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டது. புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன படம். பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.