Thursday, January 27, 2011

பொங்கல் ஸ்பெஷல் – பூலாம்வலசு சேவல்கட்டு

இந்த முறை பொங்கலன்று அரவக்குறிச்சி அருகில் இருக்கும் பூலாம்வலசு சேவல்கட்டு பார்க்க வேண்டும் என போன வருடமே திட்டமிட்டு இருந்தேன். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த சேவல் கட்டு தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்தம். இப்பொழுது உலக அளவில். உபயம் சன் மற்றும் விஜய் டிவி.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அவர்கள் வந்து பார்க்கும் அளவிற்கு நடந்துள்ளதாக அறிந்தேன். தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் இந்த போட்டிகளை காணவும் பங்கேற்கவும் மக்கள் வருகிறார்கள். ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டிகள் வருடாவருடம் பொங்கல் சமயத்தில் மட்டுமே நடக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 30000 முதல் 40000 சேவல்கள் வரை போட்டியில் பங்கேற்கின்றன. இதனை காண வரும் கூட்டம் ஒரு நாளில் மட்டும் லட்சத்தை தாண்டுகிறது என்பது சிறப்பம்சம். வாகன நிறுத்துமிடம் 4 இடங்களில் பிரித்து வைக்கப்படுகிறது. ஒரு வண்டிக்கு 15 ரூபாயும் காருக்கு 50 ரூபாயும் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேல் வருமானம் வருகிறது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டும் 5 இடங்களில் பார்க்கிங் வசதி.

ஒரு சேவல் போட்டியில் பங்கேறக 2 ரூபாய் கட்டணம். போட்டியில் வெல்லும் சேவலின் முதலாளிக்கு தோற்றுப்போன இறந்த சேவலே பரிசு. பணமெல்லாம் இல்லை. சூதாட்டமும் பெரிய அளவில் இல்லை. மறைமுகமாக நடக்கிறதா தெரியவில்லை.

இதிலும் நிறைய ரூல்ஸ் இருக்கிறது. எந்த ஒரு சேவலையும் எந்த ஒரு சேவலுடனும் மோத விட முடியாது. ஜாதிக்கு ஜாதிதான். பொறிச்சேவல், வல்லூறு, செவலை, பேடை (அலிச்சேவல்) என ஜாதி பிரித்து வைத்திருக்கிறார்கள். சேவல் சண்டை ஆரம்பிக்கும் முன்பு கத்தி வைக்காமல் ஒரு முறை மோதிப்பார்க்கிறார்கள். இரண்டும் மோத முனைந்தால் போட்டிக்கு ரெடி. பின்பு சேவலின் பின்னாங்காலில் ஒரு கத்தியை வைத்து கட்டிவிடுகிறார்கள் .மிகவும் கூரான கத்தியில் இரண்டு முறை அடிபடும் சேவல் இறப்பது சர்வ நிச்சயம். அதிக பட்சம் 10 நிமிடத்தில் ஒரு சேவல் வெற்றி பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேவலும் சுமார் 6லிருந்து 7கிலோ வரை இருக்கிறது! கிட்டத்தட்ட ஒரு குட்டி ஆட்டின் எடை!

ஒரு போட்டியாளர் 4 அல்லது 5 சேவலுக்கு மேல் ஜெயித்துவிட்டால் இறந்த அந்த சேவல்களை விற்றுவிடுகிறார். ஒரு சேவலின் விலை ஜஸ்ட் 2000ம் தான். 4000 ரூபாய் வரை விலையும் போகும். இத்தனை லட்சம் பேர் இருக்கும் இந்த ஏரியாவில் வெரும் 10 போலீஸ்தான் என்பது சுவராசியமான விசயம். மொத்த கூட்டத்தையும் விழா அமைப்பினரே சமாளிக்கின்றனர். ஒரு சிறு சண்டை கூட நடக்காமல் போட்டி நடக்கிறது என்பது கலியுலக ஆச்சரியம்! சேவலுக்கு சாரயம் கொடுப்பது இல்லை. கத்தியில் விஷம் வைப்பதும் இல்லை. ஒரு சிறு சண்டை வருவது போல் இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் சொல்வதை நாட்டாமை தீர்ப்பு போல் அனைவரும் கேட்டுக்கொள்கிறார்கள். சுருக்கமாக சொல்வதானால் போலீஸுக்கு அங்கு பெரிய அளவில் வேலையே இல்லை.

30 குழுக்களுக்கும் மேலாக பிரிந்து போட்டி நடக்கிறது. குழுவிற்கு 100 பேருக்கும் மேல் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் நபரில் 10ல் 7 பேரிடம் போட்டிக்கு ரெடியாக ஒரு சேவலை கையில் வைத்திருக்கிறார்கள். இதுபோல ஒவ்வொரு போட்டி நடக்கும் பகுதியிலும் கூட்டம் இருக்கிறது. சபரி மலைக்கு வருவதுபோல் கூட்டம் வருவதும் போவதுமாகவே இருக்கிறது. வேடிக்கை பார்க்க வருபவர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் நிற்பதில்லை. அவ்வளவு புழுதிப்படலமாக இருக்கிறது. மேலும் சாப்பாட்டுப் பிரச்சனை.

பஸ் வசதி கூட இல்லாத இந்த குக்கிராமத்தில் இப்படி ஒரு போட்டி பிரபலமாகி இருப்பது என்னை பெரிதும் யோசிக்க வைக்கிறது. கரூர் மாரியம்மன் பண்டிகை மற்றும் வீரப்பூர் திருவிழாவிற்க்கு வரும் கூட்டத்தை விட இங்கு வரும் கூட்டம் அதிகம். ஆனால் பெண்கள் சிறுமிகள் கூட்டம் மிகக்குறைவு. ஆண்களின் சாம்ராஜ்யம் இது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்களே அதிகம். இந்த பூலாம் வலசில் சாப்பிட உணவகங்கள் இல்லை. குச்சி ஐஸும் போண்டா வடையும் மட்டுமே கிடைக்கிறது .அருகில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அரவக்குறிச்சிக்குதான் சாப்பிட வரவேண்டும்.

நான் பார்த்தவரை கரூர் தவிர திருச்சி, புதுக்கோட்டை, சேலம், பொள்ளாச்சி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, வத்தலகுண்டு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, முசிறி வண்டிகள் அதிகம் இருந்தன. நிறைய போட்டியாளர்கள் யூனிபார்மில் இருந்தார்கள். உதாரணம் “வத்தலகுண்டு சேவல் பாய்ஸ்”.

முறையான குடிநீர் வசதிகள் இல்லை. கழிப்பிட வசதிகளும் இல்லை. இதை எல்லாவற்றையும் முறையாக செய்து கொடுத்து சரியான விளம்பரம் கொடுத்தால் பூலாம்வலசு இன்னுமொரு அலங்காநல்லூர் என்பதில் ஐயமில்லை.

இந்த பதிவின் புகைப்படங்கள் விரைவில் இதில் வெளிவரும்.




















Friday, January 21, 2011

படித்ததில் ரசித்தது - "காமன் வுமேனின் குணாதியசங்கள்" - ஒரு காமன் மேன் பார்வையில்.

1. ஆன்லைன் ஷாப்பிங், ஃபோன் ஷாப்பிங் என்று பல வசதிகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மறக்காமல் காபி பொடியோ, சர்க்கரையோ வாங்க கணவனை கடைக்கு அனுப்புபவர்கள்.

2. தன் குழந்தையின் அழகுக்கும் புத்திசாலிதனத்துக்கும் தன் பரம்பரையும், தவறுகளுக்கும் துர்குணங்களுக்கும் தன் கணவனின் ஜீன்களும் காரணம் என்று சர்வ நிச்ச்யமாக நம்புபவர்கள்.

3. நான்கு மணி நேரம் நாப்பது கடை ஏறி இறங்கி துணிகள் வாங்கிய பிறகு எதிரில் வரும் பெண்ணின் உடையோ அல்லது நாப்பத்தி ஒண்ணாவது கடை பொம்மையின் சேலையோ அழகாக இருப்பதாக சொல்பவர்கள்.

4. மும்பை வெடிகுண்டு சம்பவ செய்தியை படிக்கும் பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.

5. ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடையில் அடிக்கும் காய்கறிக்காரனிடம் கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லிக்காக சந்தோஷப்படுபவர்கள்.

6. உலகச் செய்திகளை விட லோக்கல் (அக்கம் பக்கத்து வீட்டு) செய்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

7. சொந்த சோகங்களை தொலைக்காட்சித் தொடர் சோகங்களில் மூழ்கி மறப்பவர்கள்.

8. மருமகளாக இருக்கும் போது தானே சிறந்த மருமகள் என்றும் மாமியாராக இருக்கும் போது தானே சிறந்த மாமியார் என்றும் நினைத்துக் கொள்பவர்கள்.

9. சமையல் செய்ததில் எது மீதமானாலும் மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து First in First Out (FIFO) அடிப்படையில் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள்.

10. தமிழின் மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர் லஷ்மி என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்பவர்கள்.

11. "எங்கியோ பாத்தா மாதிரி இருக்கே", என்று ஏதாவது பெண்ணை விகல்பமில்லாமல் பார்க்கும் கணவன்மார்களை முறைப்பவர்கள்.

12. ஒழுங்காக பாத்திரம் தேய்க்காத வீடு பெருக்காத வேலைக்காரப் பெண் ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் புலம்புபவர்கள்.

13. கடினமாக உழைத்து நல்ல பெயரும் பதவி உயர்வும் வாங்கும் கணவனை சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் பக்கத்து வீட்டுகாரனின் சாமார்த்தியம் வராது என்று இடித்துரைப்பவர்கள்.

20. ப்ளக்கை சொருகி லைட்டை போடும் மகனை வருங்கால எடிசனாகவும், கிளியை நினைத்து காகம் வரையும் போது பின்னாள் பிகாஸோவாகவும், ரெண்டக்க ரெண்டக்க பாட்டுக்கு இடுப்பில் கை வத்துக் கொண்டு தலையை ஆட்டும் பெண்ணை "பத்மா சுப்ரமணியத்துகிட்ட சேத்து விட்டா நல்லா வருவா" என்றும், "பாலும் தெளி தேனும்" சொல்லும்போது எஸ்.பி.பி யாகவோ, எம்.எஸ்.சுப்புலஷ்மியாகவோ நினைத்து புளகாங்கிதமடைவார்கள்.

Friday, January 14, 2011

பொங்க‌லோ பொங்க‌ல்



அனைவ‌ருக்கும் இனிய‌ பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள்

Monday, January 10, 2011

புகையில்லா போகி

தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பாய், தலையணை உள்ளிட்ட உபயோகப்படுத்திய பழைய பொருட்களை சுருட்டி வாரி மொத்தமாக வைத்து அதனை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.

ஆனால் சமீப ஆண்டுகளாக டயர்களையும் ப்ளாஸ்டிக் பொருட்களையும் போட்டுக் கொளுத்த ஆரம்பித்ததால் சுற்றுச்சூழல் மாசு பட ஆரம்பித்தது

போகி பண்டிகையில் பாலிதீன், பிளாஸ்டிக் உட்பட கழிவுகளை எரித்து, காற்றில் நச்சு கலப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் "புகையில்லா போகி' கொண்டாட சபதம் ஏற்று, நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

புகை நமக்கு பகை: டயர், பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் நச்சு புகை உருவாகும். பாலிதீன் கழிவிலிருந்து "கார்பன் டை ஆக்சைடு', பிளாஸ்டிக் கழிவிலிருந்து "கார்பன் மோனாக்சைடு' வெளியேறும். இதை சுவாசிப்பதால் மூச்சு திணறல் ஏற்படும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் "டையாசின்', "ப்யூரான்' போன்ற விஷ வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. அக்காற்றை சுவாசிக்கும் மனிதர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது

இருமல், தும்மல் ஏற்பட்டு தொண்டை வலி வரும். கண்ணில் எரிச்சல், நீர் வடிந்து பாதிப்பை ஏற்படுத்தும். வாகன விபத்துக்களும் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டியது நமது கடமை.

சபதம்: நாம் பொங்கலையும், போகியையும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்; இயற்கை காற்றில் நச்சு புகை கலக்காமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. பிளாஸ்டிக், பாலிதீன் கழிவை எரிக்காமல் இயற்கை அன்னையை பாதுகாப்போம் என்ற கொள்கையை, பொங்கல் சபதமாக ஏற்போம். நம்மால் இயன்ற வரை மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம்.