Saturday, February 26, 2011

ப்ளாஸ்டிக் வரமா? சாபமா?

ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்கிற மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடக்கும் நிக்ழவுகளாகிவிட்டது. உண்மையிலேயே அழிக்க வேண்டிய எமனா ப்ளாஸ்டிக்? இல்லை ஆதரிக்க வேண்டிய கடவுளா? சிந்திக்கவேண்டிய கேள்வி இது.

எனக்கு விபரம் தெரிய வரும் சமயம் காலை கோல்கேட் பவுடர் டப்பா முதல் (பேஸ்ட்டும் கூட) இரவில் அம்மா போடும் ஹார்லிக்ஸ் வரை தகரத்தில் அல்லது பாட்டிலில் இருக்கும் டின்களாகவே இருந்து வந்தன. காலப்போக்கில் இந்த இடத்தில் எல்லாம் ப்ளாஸ்டிக் வந்து சேர்ந்தது. உபயோகிக்க எளிது. உடையாது. இந்த இரு காரணிகளால் அனைவராலும் பெரும் வரவேற்பிற்கு ஆளானது இந்த வஸ்து. பொம்மைகள், சேர், டேபிள், பேனாக்கள், டெலிபோன், கம்ப்யூட்டர்கள், செருப்புகள், தொப்பிகள், வாட்சுகள், கண்ணாடிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ப்ளாஸ்டிக்கின் பயன்பாட்டினை.

இந்த அளவு இருக்கும் வரை இந்த ப்ளாஸ்டிக் யாருக்கும் தொல்லை தரும் பொருளாகவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எப்பொழுது டீ கப்புகள் மற்றும் கேரி பேக்குகள் வந்ததோ அப்போது பிடித்தது வினை. அழிக்க முடியாத இந்த ப்ளாஸ்டிக்கின் அதீத பயன்பாடு இன்று ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் என அனைவரும் சங்கூத வேண்டிய அளவிற்கு கொண்டுவந்து விட்டது. கருர் இரட்டை வாய்க்கால் தூர் வாரும் சமயம் அங்கு நான் போகவேண்டிய வேலை வந்தது. அப்போது பொக்லேன் இயந்திரம் மூலம் அள்ளி அள்ளி கொட்டியது எல்லாமே வெறும் ப்ளாஸ்டிக் கழிவுகள் தான். இவை தண்ணீரின் ஓட்டத்தினை அடைத்துக்கொள்ளவே கொசு உற்பத்தி அதிகமாகி நகரமே இன்னலுக்குள்ளானது. கரூர் நகரம் முழுவதும் ஒருமுறை உபயோகிக்கும் ப்ளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடை நடைமுறையில் சாத்தியமற்றுப்போனது.

ப்ளாஸ்டிக் இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? மிகவும் தேவையான கேள்வியில் இதுவும் ஒன்று. யோசித்துப்பார்த்து சொல்லுங்கள். உங்களால் ப்ளாஸ்டிக் இல்லாத ஒரு வாழ்வினை. காலை கண்விழித்தவுடன் பல் துலக்கும் ப்ரஷ் பிளாஸ்டிக். பார்க்கும் டிவி பிளாஸ்டிக். நீங்கள் ஓட்டும் வண்டியில் பாதி பிளாஸ்டிக். உஙகள் பேனா பிளாஸ்டிக். செல்போன் பிளாஸ்டிக். அமர்ந்திருக்கும் நாற்காலி பிளாஸ்டிக். கம்ப்யூட்டர் பிளாஸ்டிக். கால்குலேட்டர் பிளாஸ்டிக். தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக். வாளி குவளைகள் பிளாஸ்டிக். இப்படி எங்குமே பிளாஸ்டிக் மயமாக இருக்கும் போது எப்படி இவை இன்றி நாம் வாழ இயலும்?

ஆக, நாம் பிளாஸ்டிக் இன்றி வாழ முடியாது. இருப்பினும் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே நாம் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்த வேண்டும். அதாவது யூஸ் & த்ரோ என்னும் கலாசசாரத்தினை விட்டொழிக்க வேண்டும். கடைக்கு காய்கறி வாங்க செல்லும்போது மறக்காமல் பை எடுத்து செல்லலாம். அந்த பை கூட பிளாஸ்டிக்காக இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் தினமும் அந்த பிளாஸ்டிக் பையினை உபயோகப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். டீ வாங்கும் சமயம் கண்ணாடி டம்ளரில் நன்கு வென்னீரில் கழுவி டீ வாங்கி குடிக்கலாம். இதன் மூலம் மட்டுமே சுற்றுச்சுழல் மாசடைவதை தடுக்க இயலும். கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம்.

இந்த கட்டுரை என் சொந்த கருத்தே. உங்கள் கருத்தினை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே!