Friday, April 29, 2011

தற்கொலை எனபது தீர்வா?

இரண்டு நாட்களுக்கு முன்பு மதியம் உணவருந்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். வழக்கமான கண்ணன் ஸ்டோர்ஸ் பாதைதான். இம்முறை அந்த வீதியில் சென்றபோது ஒரு சிறு கூட்டம் நின்று கொண்டிருந்தது. என்ன என எட்டிப்பார்த்தேன். அங்கே ஒரு நபர் 40 வயதிற்குள் இருக்கும். உடலில் மண்ணெண்னையை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார். திகுதிகு என உடல் பற்றி எரிய அனைவரும் ஒரு பதற்றத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தனர். சிலர் ஆம்புலன்சிற்கும், காவல் துறைக்கும் போன் செய்து கொண்டிருந்தனர். நேரில் ஒரு தற்கொலை சம்பவத்தினை பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சி. அடுத்த நாள் தினசரியை படிக்கும் பொழுது அந்த நபர் இறந்து போன செய்தியை பிரசுரித்திருந்தார்கள். கண்முன்னே ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டது என்னை மிகவும் பாதித்தது. இரண்டு நாட்களுக்கும் மேலாக உணவு உண்ண முடியவில்லை. அந்த கருகிய நாற்றம் என்னுள் இன்னமும் இருக்கிறதே!

தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பது என் கருத்து. வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். போராடித்தான் வெல்ல வேண்டும். கோடிக்கணக்கில் இன்று சம்பாதித்துள்ள பலரின் இளமை வாழ்க்கையை நாம் அறிவோம். போராடியதால்தான் அவர்களால் அந்த எல்லைக்கோட்டை அடைய முடிந்தது. வாழ்க்கை மிகவும் இயந்திரமயமாகி போனது, கூட்டுக்குடும்ப வாழ்க்கை இல்லாமை, நல்ல நண்பர்கள் இல்லாமை, பொழுது போக்குகள் இல்லாமை என வாழ்க்கையை இயந்திரமயமாக்கி கொண்டவர்களுக்கு மன அழுத்தம் தாங்காமல் சிறு தோல்வியை கூட கண்டு பயந்து விடுகிறார்கள். இப்பொழுதும் சொல்கிறேன். தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது......