Thursday, June 28, 2012

நிறமிழந்துவரும் சாயப்பட்டறைகள்

திருப்பூர் மற்றும் கரூரில் வெகுஜன மக்கள் பணிபுரியும் தொழில் துணி உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதி. திருப்பூரில் பின்னலாடை எனில் கரூரில் வீட்டு ஜவுளிகள்.

இவற்றின் தயாரிப்பு முறை என்று பார்த்தால் கோரா நூல் எனப்படும் இயற்கை பருத்தி இழையில் ஆரம்பிக்கிறது. இவற்றில் பல ரக நூல்கள் தமிழத்தின் தெற்கு மாவட்டங்களான அருப்புக்கோட்டை, ராஜபாளையம் மற்றும் திண்டுக்கல் கோவை மாவட்ட நூற்பாலைகளில் இருந்து வாங்கப்படுகிறது. தரத்தில் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் நூல் முதல் ரகமாக கொள்ளப்படுகிறது. இப்படி வாங்கப்படும் நூல் கரூர் நகரின் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் சாயப்பட்டறைகளில் சாயமேற்றப்பட்டு பின்பு தறிகளில் நெய்யப்படும். நெய்த துணி அளவுக்கேற்றபடி வெட்டி தைக்கப்பட்டு ஏற்றுமதி ஆகிறது. 

 இப்பொழுது சிக்கல் என்னவெனில் சாயப்பட்டறைகளில் சாயம் ஏற்றியபின்பு அதன் கழிவு நீர் வெளியேற்றப்படும் இடத்தில்தான். இது நாள் வரை கழிவு நீர் கிட்டத்தட்ட சுத்திகரிக்கப்பட்டு அமராவதி ஆற்றில் கலக்கப்பட்டு வந்தது. நாள்பட நாள்பட அமராவதியின் நீர்வளம் குறைந்தபோது ஆறு சாக்கடையானது. சாய கழிவு நீர் மிகவும் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நிலத்தடி நீரையும் காவு வாங்கியது. விவசாய நிலங்களும் கெட்டுப்போனது. ஒட்டுமொத்த விவசாயிகளும் நீதிமன்றம் சென்று இந்த சாய ஆலைகளை மூட உத்தரவு பெற்றனர். அரசாங்கமும் அதனை செயல்படுத்தி எல்லா ஆலைகளையும் மூடினர். முற்றிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தால் மட்டும் அனுமதி என்றது. ஆனால் அதற்கு கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் ஆலை அதிபர்கள் பின் வாங்கிவிட்டனர். விளைவு ஏற்றுமதி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
 



சுத்திகரிப்பு செய்து தொழிலை நடத்தாவிட்டால் கரூரின் பொருளாதாரமே பாதிக்கும் சூழல். திருப்பூரிலும் இதே பிரச்சனை வந்த போது தமிழக அரசு மானியமாக அளித்த பணத்துடன் ஏற்றுமதி தொழில் செய்யும் அதிபர்கள் மீதமுள்ள பணத்தினை போட்டு ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நிலமையை சமாளித்து வருகின்றனர். ஆனால் இங்கு நிலமை அப்படி இல்லை. இப்படியே போனால் கரூரில் வேலை வாய்ப்பு குறிப்பாக படித்தவர்களுக்கு பாதிக்கப்படும். கரூரின் மற்ற பிரபலமான தொழில்களான பஸ் கட்டுமானம் மற்றும் கொசுவலை தொழில்களில் படித்தவர்களுக்கு வேலை இல்லை. அது முற்றிலும் மனித உழைப்பினை சார்ந்தது. ஏற்றுமதியில் மட்டும்தான் இவ்வளவு வேலை வாய்ப்புகள். 


இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியினால் பொங்கி எழுந்திருக்க வேண்டிய தொழில் நொண்டி அடித்துக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அரசாங்கம் நல்ல நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்த பிரச்சனையை சரி செய்தால் கோடிக்கணக்கில் அன்னிய செலாவணி நாட்டுக்கு கிடைப்பதுடன் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளும்.