Wednesday, May 26, 2010

Karthik - quarry visit

Quarry Entrance


RMHS


Saravanan`s Sweet home...


kovil street


Annals Home


School!!

Wednesday, May 12, 2010

படித்ததில் ரசித்தது - நையாண்டி

சுறா படத்தின் கதைக்கரு:

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

-----------------------------------------------------------------



விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
---------------------------------------------------

.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

-------------------------------------------------------------------

தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.


ரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)
கமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்)
விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)
மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)
விஜய் =

அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........

Wednesday, May 5, 2010

படித்ததில் பிடித்தது - இந்திய வரலாற்றில் இளைஞ்சர்கள் பங்கு

ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும்
நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே
அர்ப்பணம் செய்வேன் “

1915 நவம்பர் 17 ஆம் நாள் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட கத்தர் இயக்க வீர இளைஞன் கர்த்தார்சிங் தூக்குமேடையின் முன் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை.

“நாளைக்காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை
ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்.ஆனால் நம்முடைய நம்பிக்கைகள்
குறிக்கோள்கள்,உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.இன்றுபோய் நாளை
நாங்கள் மீண்டும் பிறப்போம் - எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”

தூக்கிலேறுமுன் கடைசியாகத் தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் பகத் சிங் இப்படி எழுதினார்.

“ எங்களது உடல் எங்களைச் சேர்ந்ததல்ல.எங்கள் உடல்,பொருள்,ஆவியெல்லாம்
நாட்டின் சொத்து என்றே நாங்கள் கருதுகிறோம்.தாய்நாட்டின் சேவையில்
உயிரை அர்ப்பணம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது
என்பதைக் கண்டு நாங்கள் பெருமையடைகிறோம்..”

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட கையூர்த் தோழர்கள் மடத்தில் அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வரும் சாவதற்கு முன் நாட்டு மக்களுக்குக் கூட்டாக எழுதிய பகிரங்கக்கடிதத்தின் வரிகள் இவை.

“ ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு
பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில்
கால் வைத்தவுடன் அவனைக் கொல்லுவதற்கு 3000 மதராசிகள்
பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதை உலகுக்குத்
தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று
இச்செய்கை செய்தேன்”

மணியாச்சி ரயில் நிலையத்தில் வெள்ளைக்காரக் கலெக்டர் ஆஷ் என்பவனைச் (இன்னும் எத்தனை நாளைக்கு நாம் அவனை ஆஷ் துரை என்று துரைப்பட்டத்தோடு அழைத்துக் கொண்டிருப்பது?)சுட்டுக்கொன்றுவிட்டுத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்ட வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தின் வரிகள் இவை.

“அவனுக்கு அது தகும்.அவன்தான் உண்மையில் குற்றவாளி.என் நாட்டு
மக்களின் உணர்ச்சியை நசுக்கப்பார்த்தான்.என் தாய்நாட்டுக்காக என்
உயிரைக் கொடுப்பது என்பதைவிடப் பெருமை வேறென்ன இருக்க
முடியும்?இருபத்தோரு வருடங்களாக இதற்காக நான் காத்திருந்தேன்..”

ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரை லண்டனில் சுட்டுக்கொன்ற உத்தம்சிங் தூக்கிலேறுமுன் சொன்ன வார்த்தைகள் இவை.

“ஒரு நாளும் நாம் தோற்கப்போவதில்லை.
இராணுவம் எங்களை எங்கே கொண்டு போகிறது என்பது
எங்களுக்குத் தெரியாது.உங்களுக்கும் தெரியாது.நம்பிக்கையோடு
இருங்கள்.நம் நாடு நிச்சயம் விடுதலை பெறும்.ஏகாதிபத்தியம் வீழும்.”

வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு இறுதி மரண அடி கொடுத்த 1946 கப்பற்படை எழுச்சியைத் தலைமை ஏற்று நடத்திய மாலுமி கான் கைதாகி ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது கூடியிருந்த தோழர்களிடம் விடைபெற்றுக் கூறிய வார்த்தைகள்.

இத்தகைய ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டதுதான் நவ இந்தியாவின் விடுதலை வரலாறு. ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது ?

முடி நரைத்துக் குல்லாப்போட்ட- காங்கிரஸ் வயசாளிகள்தான் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பஜனைப்பாட்டுப் பாடியே இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தந்ததாக ஒரு வரலாறு நம் மக்களின் மூளைகளில் ஏற்றப்பட்டுள்ளது. புரட்டப் புரட்ட இளைஞர்கள் சிந்திய குருதியின் வாடை வீசும் பக்கங்களும் அத்தியாயங்களும் நிரம்பிய இந்திய விடுதலையின் கதையை மறைத்துக் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றிச் சுதந்திரம் பத்திரமாய்ப் பார்சலில் வந்து சேர்ந்ததாக ஒரு கதையை நம் காதுகளில் சுற்றிவிட்டார்கள்.

1885 ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் மற்றும் வெட்டர்பன் பிரபு (!)போன்ற ஆங்கில அதிகாரிகளின் முன் முயற்சியால் துவக்கப்பட்டது இந்திய தேசிய காங்கிரஸ். விக்டோரியா மகாராணிக்கு தெண்டனிட்டு மனுப்போடும் சங்கமாகத்தான் அது ரொம்ப காலத்துக்கு இயங்கிவந்தது.மகாகவி பாரதியால் மொழிபெயர்க்கப்பட்டு ‘ பாரத ஜனசபை ‘ என்ற பெயரில் புத்தகமாகவும் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முதல் பத்து ஆண்டுமாநாடுகளின் தீர்மானங்களைப் பார்த்தாலே இது புரியும்.

“மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பதற்கு அரிய கீர்த்திமிக்க
ஆட்சியில் ஐம்பது வருஷம் முடிவுபெற்றதைக் குறித்து சக்கரவர்த்தினியார்
கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின்
எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்த இந்தப் பிரதிநிதிகள் அடங்கிய மகாசபை
அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது”
(இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்)
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபாவேசத்தைத் தணிக்கும் ஒரு Safety Valve ஏற்பாடாகவே காங்கிரசை ஆங்கிலேயர் துவக்கினர்-அங்கீகரித்தனர். உயர்சாதி மேல்தட்டு படித்த வர்க்கமே காங்கிரசில் அன்று சேர்ந்திருந்தது.முதல் மாநாட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளாகப் போனவர்களின் பெயர்களைப் பார்த்தாலே அன்றைய அதன் ‘சேர்மானம்’ புரியும்:

சுப்பிரமணிய அய்யர், வீரராகவாச்சாரியார், ஆனந்தாச்சர்யலு, ரெங்காச்சாரியார், விஸ்வநாத அய்யர், வெங்கடசுப்பராயலு, ராமானுஜாச்சாரியார், சாமிநாத அய்யர், பட்டாபிராம அய்யர், சிங்காரவேலு முதலியார், பீட்டர்பால் பிள்ளை, நரசிம்மராயலு நாயுடு ...இப்படி பலர்.

தொழிலாளிகளும் விவசாயிகளும் சங்கங்களாக செங்கொடியின்கீழ் அணிதிரட்டப்பட்டுக் காங்கிரஸ் மாநாடுகள் நடக்கும் மைதானங்களில் கூடி விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பிய பிறகுதான் காங்கிரஸ் பூர்ண சுயராஜ்ஜியம் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. காங்கிரசுக்குள்ளேயே இருந்துகொண்டு பூரண விடுதலையே நமது தேவை என்று கம்யூனிஸ்ட்டுகள் வற்புறுத்தி வந்தனர்.காங்கிரஸ் கட்சியின் பங்கையோ மகாத்மா காந்தியின் மகத்தான தலைமையையோ மறுதலிப்பது நம் நோக்கமல்ல.எப்போதும் வரலாற்றை நாம் மறப்பதுமில்லை. மறைப்பதுமில்லை. ஆனால் அதேபோன்ற நேர்மையுடன் விடுதலைப்போரில் புரட்சிகர இளைஞர்களின் பங்கையும் இடதுசாரிகளின் பங்கையும் உரிய இடத்தில் வைத்து இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியாளர்கள் பேசியதில்லை . மாணவர்களுக்கு வரலாற்றின் துடிப்புமிக்க அப்பக்கங்களைப் போதிக்கவுமில்லை. மக்களின் வரலாறு மக்களுக்குச் சொல்லப்படவில்லை.

ஏதோ காலம் பூராவும் காங்கிரஸ்காரர்கள்தான் அடியும் உதையும் வாங்கி ரத்தம் சிந்திக்கொண்டேயிருந்ததுபோல ஒரு சித்திரத்தை நம் மனங்களில் பதித்துவிட்டார்கள். வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய அளவிலான போராட்டம் ரெண்டே ரெண்டுதான்.1920 டிசம்பர் முதல் பிப்ரவரி 1922 வரையில் காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற முதல் ஒத்துழையாமை இயக்கம் ஒன்று. அப்புறம் 1930 -1931 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை ஒட்டிய இரண்டாம் ஒத்துழையாமை இயக்கம் இரண்டு.இந்த ரெண்டே போராட்டங்கள்தான்.1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்தாலும் அத்தனை தலைவர்களும் போராட்ட தேதிக்கு வெகுமுன்பாகவே கைது செய்யப்பட்டுச் சிறை சென்றுவிட்டதால் அப்போராட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெறவில்லை. மக்களே நேரடியாகக் களத்தில் குதித்துப் போராடியதுதான் வெள்ளையனே வெளியேறு இயக்கம். சரி. போகட்டும். இதையும் காங்கிரஸ் கணக்கில் வரவு வைத்துக் கொண்டாலும் 1920 இலிருந்து 1947 வரையிலான கொந்தளிப்பு மிக்க 27 ஆண்டுகளில் மொத்தத்தில் ஒரு 5 வருட காலம்தான் காங்கிரஸ் பேரியக்கம் தலைமை தாங்கிப் போராட்டம் நடத்தியது. மற்ற சமயங்களில் சட்டசபைகளுக்குப் போகவும் ராட்டையில் நூல் நூற்கவும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பஜனைப்பாடல்கள் பாடவுமாக காலம் கழித்துக் கொண்டிருந்தது. தேசிய இயக்கம் குறட்டை விட்ட இப்பெரும் காலப்பகுதி முழுவதிலும் மக்களின் போர்க்குணம் மழுங்கிவிடாமல் தேசத்தை உயிர்த்துடிப்புடன் வைத்துப் பாதுகாத்தது யார்? விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக்கொண்டிருந்தது யார்? போராட்டத்தின் வெப்பம் தணிந்து விடாமல் அனலை மூட்டிக்கொண்டேயிருந்தது யார்?

இளைஞர்கள். இளைஞர்கள். இளைஞர்கள். புரட்சிகர நடவடிக்கைகளில் தங்கள் உயிரைப் பணயமாக வைத்துப் போராடிய இளைஞர் குழுக்கள்தான் அவர்கள் என்று சரித்திரம் சந்தேகத்துக்கிடமற்ற குரலில் உரத்து முழக்குகிறது.

II
1757 - 1857

கி.பி.1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவுக்குச் சனியன் கப்பலில் வந்து சேர்ந்தது. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கினான். அவன் போட்ட பாதை வழியாக ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் வரிசையாக வந்து இறங்கின. அதுவரை இந்தியாவில் நிலவிய வியாபார தர்மங்கள் அத்தனையையும் ஒழித்துக்கட்டின. ‘கொள்முதல்’ என்பதற்குப் பதிலாக ‘பறிமுதல்’ என்பதை அறிமுகம் செய்தன. பத்துப்பைசா முதலீடு இல்லாமல் ஆயுத பலத்தால் இந்தியப் பொருட்களை கப்பல் கப்பலாக ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஓட்டிச்சென்றன. இப் புதிய வியாபார தந்திரத்தை நாகரிகத்தின் காவலர்களான வெள்ளையர்கள் (கிழக்கிந்தியக் கம்பெனிகள்) இந்தியாவில் அமலுக்குக் கொண்டு வந்தனர்.

ஊழலில் ஊறிப்பருத்த பெருச்சாளியான ராபர்ட் கிளைவ் என்னும் கொடூரன் கம்பெனியின் அதிகாரியாக இந்தியாவுக்கு வந்து பெரும் அழிவைத் துவக்கி வைத்தான். 1757இல் நடைபெற்ற பிளாசிப் போரில் எண்ணற்ற இந்திய இளைஞர்கள் களப்பலி ஆனார்கள். கிளைவ் வென்றான். வங்காளப் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றான்.

அதே கால கட்டத்தில் தமிழ் மண்ணில் நெல்லைச் சீமையில் பூலித்தேவனும் அவனுடைய ஒற்றன் ஒண்டிப்பகடையும் ஆங்கிலேயருக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திப் படை நடத்தினர். யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் கிஸ்தி? என்று வாளெடுத்துப் போர்புரிந்து 1799 அக்டோபர் 16ஆம் நாள் கயத்தாற்றில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டான் கட்டபொம்மன். கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கமும் வெள்ளையத்தேவனும் கலப்பலி ஆகினர்.

வெள்ளையத்தேவனின் இளம் மனைவி வெள்ளையம்மாள் “போகாதே போகாதே என் கணவா “என்று அழுது புலம்பிய பெண்ணல்ல. வெள்ளைப் பரங்கியின் பாசறைக்குள் ஆண்வேடம் பூண்டு உட்புகுந்து கணவனைக் கொன்ற பரங்கியனைக் குத்திச் சாய்த்துப் பழிதீர்த்த தமிழச்சியாவாள்.

கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை மீண்டும் கோட்டையைக் கட்டி எழுப்பி சிவகங்கை மருது சகோதரர்களுடன் கூட்டணி அமைத்து வெள்ளையர் கிட்டங்கிகளைக் கொள்ளை அடித்து மக்களுக்கு விநியோகம் செய்தான். 1801 இல் மருது சகோதரர்களுடன் ஊமைத்துரையும் கொல்லப்பட்டான். பாம்பன் பாலம் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்க வரி விதித்து வெள்ளையருக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கை எடுத்த ராமநாதபுரத்து மன்னர் இளைஞர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி 1772 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகாலம் சிறையிலடைக்கப்பட்டார். மன்னனில்லாத மக்கள் சித்திரங்குடி மயிலப்பன் போன்ற இளைஞர்களால் தலைமை தாங்கப்பட்ட பல்வேறு ஆயுதந்தாங்கிய எழுச்சிகளில் ஈடுபட்டுத் தம் இன்னுயிர் ஈந்தனர்.

இந்நிகழ்வுகளின் சமகாலத்தில் ஹைதர் அலியின் புதல்வரான இளம் சிங்கம் திப்புசுல்தான் மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பிரான்ஸ் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து-துருக்கியுடன் ராஜீய உறவுகளை ஏற்படுத்தி- சொந்தமாக ஒரு ஆயுதத் தொழிற்சாலையை நிறுவி -நாட்டின் வியாபார நடவடிக்கைகள் முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து .. .. என பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ராணுவரீதியாகவும் வெள்ளையனுக்கு ஒரு பரிபூரணமான சவாலாக விளங்கினார். 1799 ஏப்ரல் மாத இறுதியில் போர்க்களத்தில் மாண்டார்.

1829இல் கன்னடத்தில் கிட்டூர் மன்னனின் இரண்டாவது மனைவி இளம் பெண்ணான ராணி சென்னம்மா வெள்ளையருக்கு எதிராக வரி கட்ட மறுத்துப் போர்க்களம் புகுந்தாள். போரிலே தோற்றுக் கைதானாள். தனிமைச்ச்சிறைக்குள்ளே பல ஆண்டுகள் கிடந்தாள். என்றாவது ஒருநாள் தன்நாட்டு மக்கள் ஆர்த்தெழுந்து சிறையுடைத்துத் தன்னை விடுவிக்க வருவார்கள் என்கிற நிறைவேறாக்கனவு கண்களில் தேங்கி நிற்க சிறைக்குள்ளேயே மாண்டாள்.

இக்காலப்பகுதியில் வெள்ளையருக்கு எதிராகப் போராடிய எல்லோரையும் இளைஞர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நாம் போற்றிப்பாடிட முடியாதுதான். மன்னர்களாகவும் பாளையக்காரர்களாகவும் இருந்த இவர்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூலித்துத் தம் குலத்தொழிலான சுரண்டலைச் செவ்வனே செய்து வந்தவர்கள்தான். அற்றை நாளில் நான்கு விதமான முரண்பாடுகள் நிலவின:

1.வெள்ளையருக்கும் மன்னர்கள்/பாளையக்காரர்களுக்கும் இடையிலான
முரண்பாடு

2.வெள்ளையருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான முரண்பாடு

3.மன்னர்களுக்கிடையிலான முரண்பாடு

4. மக்களுக்கும் மன்னர்களுக்கும் இடையிலான முரண்பாடு

இவற்றில் முதல் முரண்பாடு முற்றியபோதெல்லாம் மக்கள் மன்னர்களைப் போற்றினர். இரண்டாவது முரண்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தவல்ல ஓர் இயக்கம் அக்காலப்பகுதியில் பிறந்திருக்கவில்லை. மூன்றாவது முரண்பாட்டை வெள்ளையர்கள் சிறப்பாகப் பயன்படுத்தி நம் நிலப்பரப்பு முழுவதையும் அடிமை கொண்டனர். நான்காவது முரண்பாடு எப்போதும் இருந்து வருவது. ஆதலால்தான் மன்னர்கள் சிறைப்பட்டபோதும் மக்கள் கொந்தளித்து எழவில்லை. ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன? என்று இருந்துவிட்டனர்.

பிளாசிப்போர் நடந்த 1757க்கும் சிப்பாய்க்கலகம் என வெள்ளையர் வர்ணித்த சிப்பாய்ப் புரட்சி நடந்த 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறிதும் பெரிதுமாக நாடெங்கிலும் 77 கலகங்களை வெள்ளை அரசாங்கம் முக்கியமான எதிர்ப்பு அலைகளாகப் பதிவு செய்துள்ளது. பெரும்பாலும் இக்கலகங்களில் இளைஞர்களே முன்னணியில் நின்றனர்.

# 1808-10 வேலுத்தம்பி தலைமையில் நடந்த திருவாங்கூர் எழுச்சி
# 1830-1861 வங்கத்தின் வகாபியர் எழுச்சி
# 1849 துவங்கி நடந்த நாகர்களின் எழுச்சி
# 1853 இல் நாதிர்கான் தலைமையில் ராவல்பிண்டியில் நடந்த கலகம்
# 1855-56களில் வீறு கொண்டு எழுந்த சந்தால் பழங்குடி மக்கள் போராட்டம்

என ஏராளமான போராட்டங்கள் நடந்தாலும் இவையெல்லாம் ஆங்காங்கே வட்டார அளவில் மட்டுமே தாக்கம் செலுத்திய போராட்டங்களாக இருந்தன. பெரிய நிலப்பரப்பு முழுவதற்கும் பரவிய விரிந்த அளவிலான போராட்டம் 1857இல் வெடித்தது.

3000 பேர்கொண்ட வெள்ளைப்படை எப்படி 30 கோடி இந்தியர்களை அடக்கி ஆள முடிந்தது? இந்திய மக்களிடமிருந்தே ஒரு பெரும்படையைத் திரட்டி (கால் காசு உத்தியோகமானாலும் கவர்மெண்டு உத்தியோகம். அரைக்காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம் என்று நம் மக்கள் லெப்ட் ரைட் போட்டுக்கொண்டு போக) நாடு முழுவதும் ராணுவத்தை நிறுத்தி வைத்தது கம்பெனி. ஆங்கில எஜமானர்களுக்காகத் தம் நாட்டு மக்களையே சுட்டுத்தள்ளவும் அடித்து உதைக்கவும் வேண்டியிருந்த அந்த ஈனத்தொழில் இளம் சிப்பாய்களின் மனதில் பல்லாண்டுகளாக ஏற்படுத்திவந்த கடும் அழுத்தம்தான் பெரும் பூகம்பமாக சிப்பாய்க் கலகமாக 1857இல் வெடித்தது. பசுக்கொழுப்பும் பன்றிக்கொழுப்பும் தடவிய தோட்டாவை வாயால் கடித்து மாட்ட வேண்டிய கடமை, ஆங்கிலச் சிப்பாய்களுக்கு இணையான சம்பளம், சாப்பாடு, சலுகைகள் என்பதெல்லாம் கூடுதலான காரணங்களாகும்.

ஒவ்வொரு படைப்பிரிவிலும் ரகசியக் குழுக்கள் அமைக்கப்பட்டு போராட்டத் தயாரிப்புகள் தீவிரமடைந்தன. பிளாசிப்போரின் நூற்றாண்டு தினமான 31.5.1857 அன்று கலகத்தைத் துவக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே மீரட்டில் 10.5.1857 அன்றே கலகம் துவங்கிவிட்டது. அதற்கு முந்தின இரண்டு தினங்களாகவே மீரட் நகரெங்கும் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்புக் காணப்பட்டது. ஆங்காங்கு மக்கள் கூடிக் கூடிப் பேசிக்கொண்டனர். ஆங்கிலேயருக்கு எதிரான வாசகங்கள் தெருச்சுவர்களில் திடீர் திடீரெனத் தோன்றின. யார் எழுதுகிறார்கள்? எப்போது எழுதுகிறார்கள் என்று யாருக்கும் பிடிபடவில்லை. 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களும் சர்ச்சுக்குப் போனதும்- ஆயுதங்களைக் கைப்பற்றிச் சிறைகளை உடைத்து கைதிகளை விடுவித்து எனக் கலகம் துவங்கிவிட்டது. நகர மக்களும் சிப்பாய்களுடன் இணைந்து கொண்டனர். படைதிரட்டி டெல்லிசலோ என்று குதிரைகளைத் தட்டி விட்டனர் சிப்பாய்கள். ஊரூராகச் செய்தி பரவியது. ஒவ்வொரு ரெஜிமெண்டிலும் கலகம் துவங்கி விட்டது. வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். டெல்லிக்கோட்டையில் சிப்பாய்கள் கோட்டைக் கதவைத் திறந்து வைத்து மீரட் சிப்பாய்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். இரண்டு படைகளும் சேர்ந்து தாக்கியதும் சடுதியில் டெல்லிக்கோட்டை சிப்பாய்களின் வசம் வந்தது. இளம் சிப்பாய்கள் கூடிப்பேசி முதியவரான மன்னர் இரண்டாம் பகதூர்ஷாவை ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்தனர். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான அச்சிப்பாய்கள் கிராமப் பஞ்சாயத்துப் போல ஒரு அமைப்பை கோட்டையில் உருவாக்கினர். 10 பேர் கொண்ட ஜல்சா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஜல்சா அறிவித்தது. நியாய விலையில் மக்களுக்குப் பொருட்கள் கிடைக்க பஞ்ச் என்ற குழுவை ஜல்சா நியமித்தது. கலப்படக்காரர்கள் நடுவீதிக்கு இழுத்துவரப்பட்டு மக்கள் முன்னிலையில் சவுக்கால் அடிக்கப்பட்டனர்.

மே, ஜுன் இரண்டுமாதங்களும் நாட்டின் வடபகுதி முழுவதிலும் எழுச்சி பரவியது. சிப்பாய்கள் ஆங்கிலேயரை அகற்றிவிட்டு அந்தந்த இடத்தில் பழைய மன்னர்களை பதவியில் அமர்த்தினர். வேறு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கான்பூரில் நானாசாகிப், தாந்தியாதோப்பே, ஜான்சியில் இளம் ராணி லட்சுமிபாய், லக்னோவில் அகமதுல்லாஷா என இளம்புயல்கள் இவ்வெழுச்சிகளுக்குத் தலைமையேற்றன.

எனினும் தெற்கிலும் வடகிழக்கிலும் மேற்கிலும் கிளர்ச்சி பரவாதது ஆங்கிலேயருக்குச் சாதகமாக அமைந்தது. அவர்கள் வசம் தந்தியும் இருந்தது. சிப்பாய்களிடம் அது இல்லை. தந்தி மூலம் நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் ஆங்கிலப்படைகள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டன. செப்டம்பர் 19ஆம் நாள் எழுச்சி முறியடிக்கப்பட்டது. ஆங்கிலப்படைகள் நரவேட்டை ஆடின. டெல்லி நகரத்தில் மட்டும் 27000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். தேசத்தின் வடபகுதி முழுவதும் ரத்த ஆறு ஓடியது. லட்சக்கணக்கான மக்களின் பிணக்குவியலின் மீது விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சி 1858இல் அமலுக்கு வந்தது. பல படைப்பிரிவுகள் கலைக்கப்பட்டு சிப்பாய்கள் விரட்டி யடிக்கப்பட்டனர். பழைய மன்னர்களுக்கு அரண்மனைகளும் பழைய அந்தஸ்தும் ஓய்வூதியமும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான சமரசத்தின் மீது பிரிட்டிஷ் நிர்வாகம் கட்டப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தோடு முதலாளித்துவம் செய்துகொண்ட சமரசம் 1858இல் துவங்கியது.

ஜான்சிராணி போர்க்களத்தில் கொல்லப்பட்டார். தாந்தியாதோப்பே தூக்கிலிடப்பட்டார். மௌல்வி அகமத்துல்லாவை வஞ்சகமாகக் கொன்று அவரது தலையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்து 50000 ரூபாய் வெகுமதியை ஒரு மன்னன் பெற்றுக்கொண்டான். திரும்பிய பக்கமெல்லாம் இந்திய மக்களின் சடலங்கள். மக்களைக் கொல்லுவதற்கு தோட்டாக்களை வீணாக்க விரும்பாத பிரிட்டிஷ் ராணுவம் கண்ணில்பட்ட மரங்களிலெல்லாம் மக்களைத் தூக்கில் போட்டது. ஆகவே நாட்டிலுள்ள மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க ஜான்சிராணி உத்தரவிட்டார். மக்களின் நினைவுகளில் அழியாத வடுக்களை நீண்ட காலத்துக்கு விட்டுச்சென்ற சிப்பாய்களின் எழுச்சி முடிவுக்கு வந்தது.
இந்தியாவில் நடப்பவைகளைக் கூர்ந்து கவனித்து வந்த கார்ல் மார்க்ஸ் சிப்பாய்களின் இந்த எழுச்சியை முதல் இந்திய சுதந்திரப்போர் என்றே குறிப்பிட்டார்.

III
1858 - 1896

ஒப்பீட்டளவில் எதிர்ப்பலைகள் கு¨றைவான காலப்பகுதியாக இது இருந்தாலும் பஞ்சாபில் குருராம்சிங் தலைமையில் வீறு கொண்டு எழுந்த குக்கா மக்கள் எழுச்சி, 1872இல் வங்காளத்திலும் 1879இல் ஆந்திரத்திலும் ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சிகளும் என சம்பவங்கள் இல்லாமலில்லை.

இக்காலப்பகுதியின் முக்கிய இரண்டு சம்பவங்களாக இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கப்பட்டதையும் மெக்கலே கல்வித்திட்டம் புகுத்தப்பட்டதையும் குறிப்பிடவேண்டும். 1857 கிளர்ச்சியை படித்த வர்க்கம் ஆதரிக்கவில்லை. நாட்டை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக ஆண்டவனாகப் பார்த்து வெள்ளைக்காரனை அனுப்பியதாக படித்த வர்க்கம் நம்பியது. 1857 புரட்சி வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் பிற்போக்கான நிலைமைக்கு நாடு போய்விடும் என்று அவர்கள் கவலை கொண்டனர். சிப்பாய்களின் எழுச்சி தோற்கவேண்டும் என்று படித்த வர்க்கம் சாமி கும்பிட்டது.

சீர்திருத்தங்களில் கவனம் குவித்த படித்த வர்க்கம் சதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் பெண்கல்விக்கு ஆதரவாகவும் மதப்பழமைவாதத்துக்கு எதிராகவும் மக்களிடம் பேசத்துவங்கினர். உடம்பால் இந்தியர்களாகவும் மூளையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்கும் நோக்குடன் வந்த மெக்காலே கல்வித்திட்டம் நாடெங்கும் ஏபிசிடி படித்த குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யத் துவங்கியது.

தனக்கான ஒரு அறிவுஜீவி வட்டத்தை உருவாக்கவே ஆங்கில அரசு கல்விச்சாலைகள் திறந்தது என்றாலும் படிப்பறிவு பெற்ற இந்திய மக்கள் தங்கள் வட்டாரத்தைத் தாண்டி தேச அளவில் உலக அளவில் நடப்பவற்றைப் பார்க்கவும் அக்கல்வி உதவியது. அப்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருந்த அச்சுப் பத்திரிகைகள் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் துவங்கியிருந்தன. காசி ராமேஸ்வரம் என்று கோவில் குளங்களுக்குப் போகும்போது மாத்திரமே புதிய புவியியல் எல்லைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்த இந்திய மக்கள் இருந்த இடத்திலிருந்தே பத்திரிகைகள் வாயிலாக உலக மக்களின் ஒரு பகுதி நாம் என்ற புதிய அடையாளத்தை உணரத் தலைப்பட்டனர். உலகின் பிற நாடுகளில் நடந்து வந்த விடுதலைப் போராட்டங்கள் அவற்றின் வடிவங்கள் உத்திகள் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளத் துவங்கினர்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் மனுப்போடுவது போதும் என்கிற மிதவாதிகளும் விடுதலையே லட்சியம் என்ற தீவிரவாதிகளும் என இரு பிரிவுகள் வடிவம் கொள்ளத் துவங்கியிருந்தன.

இந்த இரு நிகழ்வுகளைத் தவிர வேறு ஒரு முக்கிய நிகழ்வுப் போக்கும் இந்தியாவில் இக்காலப்பகுதியில் வங்கிவிட்டிருந்தது. கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை கிளப்பிவிட்ட புயல் இந்தியாவை நோக்கியும் பயணப்பட ஆரம்பித்தது. 1871இல் கார்ல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் கூட்டத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிளையைத் துவக்க அனுமதி கோரி கல்கத்தாவிலிருந்து ஒரு தோழர் எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. நிறைய இந்தியர்களைக் கொண்ட அமைப்பாக அக்கிளை துவக்கப்படலாம் என அகிலம் அனுமதியளித்தது.

IV
1897-1910: இளைஞர் எழுச்சிகளின் முதல் கட்டம்

உறக்கத்திலிருந்த இந்திய மக்களைத் தட்டியெழுப்பிய முதல் வெடிச்சத்தம் 1897 ஜுன் 22 ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் கேட்டது. புனேயில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து கிருமிகளை ஒழிப்பது என்ற பேரில் சொத்துக்களை எரித்தும் மக்களை முகாம்களுக்குத் தள்ளியும் பெண்கள் மீது வன்முறை செலுத்தியும் எனக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது. அதற்குச் சரியான எதிர்வினையாக இளைஞர்களான சாப்கர் சகோதரர்கள் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனரான ராண்ட் என்பவரையும் இன்னொரு அதிகாரியையும் போட்டுத் தள்ளினர். சாப்கர் சகோதரர்களின் கைதும் அவர்கள் மீது நடைபெற்ற விசாரணையும் 1898இல் அவர்கள் தூக்கிலிடப்பட்டதும் மக்களிடம் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. வி.டி.சவர்க்கார் தலைமையில் இயங்கிய மித்ர மேளா என்னும் இ¨ளைஞர் அமைப்பு இச்சமபவத்தால் பெரிதும் உந்துதல் பெற்றது. 1904 இல் இது நாசிக்கில் அபிநவபாரத் என்று புதிய நாமம் சூட்டிக்கொண்டது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சுவாமி விவேகானந்தரின் சீடரும் ஐரிஷ் பிரஜையுமான சகோதரி நிவேதிதாவோடு பழக்கமுள்ள சதிஷ் போஸ் என்பாரும் ஜதீந்திரநாத் பேனர்ஜி என்பாரும் சேர்ந்து கல்கத்தா அனுஷிலான் சமிதி என்ற இளைஞர் அமைபை உருவாக்கினர். இப்படி மேற்கிலும் கிழக்கிலும் உருவான இவ்வமைப்புகளுக்கு பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தரின் ஆசிகள் இருந்ததாக பிரிட்டிஷ் போலீஸ் சந்தேகப்பட்டது.

சவார்க்கரும் பேனர்ஜியும் தாமஸ் •ப்ரோஸ்ட் எழுதி இரண்டு தொகுதிகளாக வந்திருந்த ஐரோப்பியப் புரட்சியின் ரகசிய சங்கங்கள் (The Secret socities of European Revolution 1776-1876) என்ற புத்தகத்தைப் படித்தனர். ரஷ்யாவின் தீவிரவாத நிகிலிஸ்ட்டுகள் செயல்பட்ட விதங்களையும் அயர்லாந்தின் ரகசிய குழுக்கள் செயல்பட்ட விதங்களையும் பின்பற்றி மராட்டியத்திலும் வங்கத்திலும் துவக்கப்பட்ட இக்குழுக்கள் செயல்படத்துவங்கின. ரகசியப் பிரமாணம் எடுப்பது, ரத்தத்தால் கையெழுத்து இட்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வது, குடும்ப உறவுகளிலிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்வது, கீதையின் மீது சத்தியம் செய்வது (வங்கத்தில் கூடுதலாக காளி சிலை முன்பாக சத்தியம் செய்தனர்) போன்ற இச்சடங்குகள் எல்லாமே ஐரோப்பியக் குழுக்களின் நடவடிகைகளைப் பின்பற்றியே இருந்தன. இதுபோக வங்கத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திர தாசும் மராட்டியத்தைச் சேர்ந்த பி.எம். பபட்டும் பாரிஸ் நகரத்தில் (1905 முதற்புரட்சிக்குப் பிறகு தப்பி வந்திருந்த) ரஷ்ய தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த சிலரோடு உறவை ஏற்படுத்திக்கொண்டு வெடிகுண்டுகள் செய்யும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு திரும்பினர். அதே போல ரஷ்யக் குழுக்களின் பாணியில் தங்கள் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வங்கிகளைக் கொள்ளையடிப்பது, ரயிலைக் கொள்ளையடிப்பது போன்ற செயல்களின் மூலமாகத் திரட்ட திட்டமிட்டனர்.

பல்வேறு இந்திய சமஸ்தானங்களில் திவானாகப் பணியாற்றிய கேம்பிரிட்ஜில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்ற சியாமாஜி கிருஷ்ண வர்மா என்பவர் லண்டனில் குடியேறி இந்திய ஹோம்ரூல் சொசைட்டியையும் இண்டியன் சோசியாலஜிஸ்ட் என்ற பத்திரிகையையும் துவங்கி இந்திய மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக இந்தியா ஹவுஸ் என்னும் ஏற்பாட்டையும் துவக்கினார். இந்த இந்தியா ஹவுஸ் பல்வேறு தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த மானவர்களும் இளைஞர்களும் சந்திக்கும் இடமாக மாறியது. லண்டன் சென்ற சாவர்க்கர், பி.எம்.பபட், வீரேந்த்ர சட்டோபாத்தியாயா, லாலா ஹர்தயால், பாய் பரமானந்த், மதன்லால் திங்க்ரா, மேடம் காமா, எஸ்.ஆர்.ரானா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வ.வே.சு.அய்யர் போன்றோர் அங்கே சந்தித்துத் தத்தம் இயக்கங்கள் பற்றிப் பேசிப் பகிர்ந்து கொண்டனர்.

1907இல் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரசில் கோடானுகோடி ஊமை இந்தியர்களின் சார்பாகப் பேசுவதாகக் கூறி மேடம் காமா வீர உரை நிகழ்த்தினார். ஆங்கிலேயரைத் திருப்பித் தாக்க ஆயுதமேந்த முன்வருமாறு இந்திய இளைஞர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார். ஐரோப்பாவிலிருந்த இந்திய இளைஞர்கள் அவ்வுரையால் ஆவேசம் பெற்றனர். அபிநவ பாரத்தின் நடவடிக்கைகளை லண்டனிலிருந்தபடியே சவர்க்கார் இயக்கி வந்தார். ஆனால் போலீஸ் வலைவீச்சில் சிக்கிய அவ்வமைப்பின் மீது நாசிக் சதி வழக்குப் போடப்பட்டு 1909 இல் சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் சவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக நாசிக் கலெக்டர் ஜாக்சன் படுகொலை செய்யப்பட்டான். இங்கிலாந்தில் இதன் எதிரொலியாக இந்திய மாணவர்கள் மத்தியில் பிரிட்டிஷாருக்கு உளவு சொல்லும் கருங்காலிகளை உருவாக்கிக் கொண்டிருந்த ஆங்கில அதிகாரி சர் கர்சன் வில்லி (Sir Curzon Wyllie) என்பானை மதன்லால் திங்ரா என்னும் இளைஞர் சுட்டுத்தள்ளினார். தூக்குமேடைக்குப் போகுமுன் திங்ரா தலையை உயர்த்திக் கூறினார்: “அதே தாயின் வயிற்றில் மீண்டும் பிறந்து இதே புனிதமான காரணத்துக்காக மீண்டும் தூக்கிலிடப்படுவதையே நான் இந்த நிமிடத்திலும் விரும்புகிறேன்”

மராட்டிய நிலைமை இப்படியெனில் வங்கத்தில் சுதேசிப்புயல் அப்போது வீசியடித்துக்கொண்டிருந்தது. 1905இல் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளம்-இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு வங்காளம் என்று இரண்டாக்கினான். மக்கள் ஒற்றுமையைக் குலைப்பதற்காக கர்சன் செய்த இக்காரியம் மகத்தான மக்கள் எழுச்சிக்கும் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கும் வித்திட்டது. “எங்கள் வங்கத்தைப் பிரிக்காதே” என்ற இடிமுழக்கம் வங்கத்தில் கிளம்பி நாடெங்கும் எதிரொலித்தது. 1905 ஆகஸ்ட் 7ஆம் நாள் கல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின் முடிவில் அந்நியப் பொருட்களை பக்¢ஷ்கரிக்க முடிவு செய்யப்பட்டது.

அரவிந்தரின் தம்பியான பரீந்திரகுமார் கோஷ் சுவாமி விவேகானந்தரின் இளவல் பூபேந்திரநாத் தத்தாவுடன் இணைந்து யுகாந்தர் என்னும் வார இதழையும் அதைச் சுற்றிய ஒரு இளைஞர் குழுவையும் உருவாக்கினார். வெடிபொருட்கள் தயாரிப்பதற்காக கல்கத்தாவின் மாணிக்டோலா பூங்கா வீட்டில் தொழிற்சாலை ஒன்றும் ரகசியமாக இயக்கப்பட்டது.

வங்கத்தில் எழுந்த சுதேசிப் போராட்ட அலையை அடக்குமுறையால் ஒடுக்கிவிடப் படைகளை ஏவியது வெள்ளை அரசு. தடியடிகள், அபராதங்கள், நடுத்தெருவில் கட்டிவைத்து மக்களை அடிப்பது, கைது செய்து சிறையிலடைப்பது, தலைவர்களை அவமானப்படுத்துவது என்று தொடர்ந்த அரசின் நடவடிக்கைகளால் மக்களின் மனநிலை கொதிநிலையடைந்து கொண்டிருந்தது. யுகாந்தர் குழு மக்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை வாய்க்கு வந்தபடி வழங்கிக்கொண்டிருந்த நீதிபதி கிங்ஸ்போர்டு என்பவனைக் கொல்ல முடிவு செய்தது. அப்பணியை நிறைவேற்ற குதிராம்போஸ் மற்றும் பிரபுல்ல சகி என்ற இரண்டு இளைஞர்களை அனுப்பியது. முசாபர்பூருக்கு ரயிலில் பயணம் செய்த கிங்ஸ்போர்டு மீது எறி குண்டுகளை வீசிவிட்டு இருவரும் தப்பி ஓடினர். குறி தப்பி வேறு ஆங்கிலேயர் அதில் மாண்டுபோனாலும் போலீஸ் பிடியில் சிக்காமலிருக்கத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் பிரபுல்லசகி. 18 வயது இளைஞரான குதிராம்போஸ் சிறைப்பிடிக்கப்பட்டு 11.08.1908 அன்று தூக்கிலிடப்பட்டார். வங்கதேசமே கண்ணீரஞ்சலி செலுத்தியது. இன்றுவரை மக்கள் மனங்களில் அழியா இடம்பெற்ற வீரனாக குதிராம்போஸ் திகழ்கிறார். அவரைப்பற்றிய எண்ணற்ற நாட்டுப்புறப்பாடல்களும் கதைகளும் உருவாகின. அவர் சிறைச்சுவரில் கரிக்கட்டையால் அம்மாவுக்கு எழுதிய கடிதமாக வரும் ஒரு நாட்டுப்புறப்பாட்டு மக்களால் இன்றும் பாடப்படுகிறது.

ஒரு முறை விடை கொடு அம்மா
சிரித்த முகத்தோடு உன் மகன்
தூக்குக் கயிற்றை ஏற்றுக்கொள்வதை
இவ்வுலகம் பார்க்கும்.
ஒரு முறை விடைகொடு அம்மா
மீண்டும் நான் சித்தியின் வயிற்றில்
மகனாய்ப் பிறப்பேன்
பிறந்திருப்பது நான்தான் என்பதை அறிய
குழந்தையின் கழுத்தைப்பார்
தூக்குக் கயிற்றின் தழும்பு அதில் இருக்கும்

மராட்டியத்திலும் வங்கத்திலும் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சிகள் 1910க்குள் அடக்கப்பட்டன.

வங்கத்தில் குதிராம்போஸ் கொல்லப்பட்டதை ஒட்டி போலீஸ் மாணிக்டோலா வீட்டைக் கைப்பற்றி எல்லோரையும் கைது செய்து அலிப்பூர் சதிவழக்கில் மாட்டிவிட்டது. அரவிந்தர் மாத்திரம் தேசபந்து சித்திரஞ்சன் தாஸின் வாதத்திறமையால் வழக்கிலிருந்து தப்பி மனமாற்றம் அடைந்து பாண்டிச்சேரிக்குப் போய்விட்டார். மற்ற அனைவருக்கும் நாடுகடத்தல் உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டது.

திங்ராவின் தூக்கை அடுத்து லண்டன் இந்தியா ஹவுசிற்கு அரசு நெருக்கடி கொடுக்கத் துவங்கியது. அங்கிருந்த புரட்சியாளர்கள் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் எனத் தப்பினர். சவர்க்கார் லண்டனில் கைதாகி இந்தியா கொண்டுவரப்பட்டு அந்தமான் சிறைக்கு ஆயுள் தண்டனைக் கைதியாக அனுப்பப்பட்டார். அங்கேதான் பிறகு ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிரிட்டிஷ் ராஜவிசுவாசியாக மாறினார். இந்துமத வெறியராக சிறைமீண்டு காந்தி கொலைவரைக்கும் அவர் கை நீண்டது பின்கதையாகும். ஒன்றிரண்டு கொலை நடவடிக்கைகளுக்குத் துணைநின்றதைத் தவிர ஆரம்ப காலத்தில் சவர்க்கர் நாட்டுக்காக வேறு ஒன்றும் செய்திருக்கவில்லை. ஆனால் அந்தமானில் வகுப்புவாதியாக அவதாரம் எடுத்துத் திரும்பியபிறகு தேசத்துக்கு அவர் செய்த துரோகங்களும் காட்டிக்கொடுத்தல்களும் மிக அதிகம். “அரசாங்கத்தில் அவர்கள் விரும்பும் நிலையில் சேவகம் புரியத் தயாராய் உள்ளேன்.. .. தந்தைபோன்ற அரசின் வாசலுக்கு கெட்டழிந்த மகன் திரும்ப வருமாறு கருணை காட்ட வல்லமை மிக்க தங்களால் மட்டுமே இயலும்” என்று பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்துபூர்வமாக “வீர” சவர்க்கார் எழுதிக் கொடுத்த ஒவ்வொரு சொல்லுக்கும் இறுதிமூச்சு வரை உண்மையாக நின்றார். காந்தியைக் கொலை செய்ததற்காக தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் கோர்ட்டில் அனைவர் முன்னிலையிலும் கோட்சே சவர்க்காரின் காலில் விழுந்து ஆசிபெற்றான்.

முதல்கட்டத்தில் நிகழ்ந்தேறிய இந்தத் தனிநபர் சாகச நடவடிக்கைகளில் பெரும்பாலும் உயர்சாதி படித்த இளைஞர்களே ஈடுபட்டதும் அவர்கள் இந்து மதக் கடவுள்கள், கதைகள், இதிகாசங்களிலிருந்து தங்களுக்கான உந்துதலைப் பெற்றதும் முன்வைத்ததும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை அவர்கள் பக்கம் ஈர்க்க உதவவில்லை. தவிரவும் உயிரை ஒரு பொருட்டாகவே மதியாத அவர்களின் உச்சபட்சமான நடவடிக்கைகள் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் சாகச நாயகர்களாக வைத்துப்பார்க்கவே உதவின. சாதாரண மக்கள் நெருங்கிச் செல்ல முடியாத உயரத்தில் நட்சத்திரங்களைப் போல அவர்கள் ஜொலித்து நின்றனர்.

ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தென்கோடியில் ஒரு பிரகாசமான நட்சத்திரம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. 33 வயது இளைஞரான வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிப்புயலாகத் தமிழகத்தில் சுழன்று வந்தார். மக்களோடு நெருங்கிய தலைவராக ஏகாதிபத்தியத்துக்குத் தீராத தலைவலியாக தூத்துக்குடியில் எழுந்து நின்றார். 1906 இல் சுதேசிக் கப்பல் விட்டார். 1908இல் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோரல் ஆலைத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்கி அப்போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அவரைக் குறி வைத்த ஆங்கில அரசு, தடையை மீறி பிபின் சந்தரபால் விடுதலையைக் கொண்டாடிய வழக்கில் அவரைக் கைது செய்தது. 1908 மார்ச் 12 ஆம் நாள் கைது நடந்தது.

“ தெறுகளமாயது திருநெல்வேலி எனக்
கைதிகளை அடைத்துக் கதவைப் பூட்டினர்
செய்தி யாவும் தெரிந்தோம்; பிற்பகல்
ஜனங்கள் திரண்டு சர்க்கார் தலங்களை
மனங்கொள்வண்ணம் மாய்த்தனர் தீயால் “

என்று வ.உ.சியே தன் சுயசரிதையில் குறிப்பிட்டது போல அவர் கைதை கண்டித்து நெல்லைச் சீமை போர்க்களமானது. மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து தெருவில் இறங்கினர். நான்குபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான பேர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றதில் பெரும்பாலானோர் 30 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளைஞர்கள் என்பதே இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும். கோரல் மில் தொழிலாளிகளும் தூத்துக்குடி நகரசுத்தித் தொழிலாளிகளும் வேலை நிறுத்தம் செய்தனர்.

இளைஞர்களின் தனிநபர் சாகச நடவடிக்கைகளுக்கும் வ.உ.சியின் மக்கள் இயக்கத்துக்கும் உந்துசக்தியாகத் திகழ்ந்தது 1905இல் ருஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற முதல் புரட்சியாகும். பின்னால் வரப்போகும் வெற்றிகரமான புரட்சிக்கு ஒத்திகை என்று லெனின் குறிப்பிட்ட அப்புரட்சியைப் பற்றி “சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள்மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக” என்று 1.9.1906 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் மகாகவி பாரதி எழுதினார். ’ரஷ்ய வழிமுறையில்’ தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யவேண்டுமென 23.02.1908 அன்று பொதுக்கூட்டத்தில் வ.உ.சி. பேசியதாக காவல்துறையின் ரகசிய அறிக்கை கூறுகிறது. வ.உ.சியின் வழிகாட்டியெனக் கருதப்படும் தீவிரவாதப்பிரிவின் தலைவர் திலகர் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக 1908இல் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தனர். இதை வரவேற்று லெனின் எழுதினார் “வர்க்க உணர்வுடன் மாபெரும் அரசியல் போரட்டம் நடத்துமளவுக்கு இந்தியப் பாட்டாளிகள் போதுமான தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்”

ஒரு பக்கம் இளைஞர்களின் தீவிரவாதச் செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோது மறுபுறம் இந்தியத் தொழிலாளிவர்க்கம் மார்க்சியப் பாதையில் நிதானமாகத் தன் முதல் எட்டுகளை எடுத்து வைக்கத் தொடங்கிய காலமாகவும் இது அமைந்தது.

V
1911-1918 : இளைஞர் எழுச்சியின் இரண்டாவது அலை

வாஞ்சி அய்யர் என்கிற சங்கர அய்யர் என்னும் 20 வயது வாலிபர் 17.6.1911 சனிக்கிழமையன்று நெல்லைச் சீமையில் மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலிக் கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டு இரண்டாவது அலையைத் துவக்கி வைத்தார். நீலகண்ட பிரம்மச்சாரி, வ.வே.சு அய்யர் போன்றோருடன் தொடர்புகொண்ட அவர் பாரதமாதா சங்கம் என்கிற ரகசியக் குழுவின் சார்பாகவே இச்செயலில் ஈடுபட்டார். ஆஷைச் சுட்ட செய்தி அடுத்தவாரமே பாரீசிலிருந்து மேடம் காமா நடத்தி வந்த ‘வந்தே மாதரம்’ இதழில் வெளியானது. வாஞ்சி பயன்படுத்திய பெல்ஜியம் நாட்டுத் தயாரிப்பான பிரவுனிங் துப்பாக்கியே மேடம் காமா ரகசியமாக அனுப்பியதுதான் என அறியப்படுகிறது.

நாட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இயங்கிவந்த தீவிரவாதக் குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ராஷ்பிகாரி போஸ் தீவிரமாக முயன்று வந்தார். 23-12-1912 அன்று வைஸ்ராய் லார்டு ஹார்டிங் என்பவன் மீது (டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் வைத்து) குண்டு வீசப்பட்டது. காயங்களோடு வைஸ்ராய் தப்பி விட்டான். ராஷ்பிகாரிபோஸ் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிவிட அவத்பிகாரி, வசந்தகுமார் பிஸ்வாஸ், பால் முகுந்த், அமீர் சந்த் ஆகிய ஐந்து இளைஞர்களும் பிடிபட்டனர். விசாரணைக்குப்பின் தூக்கிலிடப்பட்டனர்.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிழைக்கப்போன இந்தியர்கள் (பெரும்பாலும் சீக்கியர்களை உள்ளடக்கி) சான் பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து 1913 இல் கத்தர் (Ghadr) இயக்கத்தைத் துவக்கினர். சோகன் சிங் பக்னா அதன் தலைமைப் பொறுப்பேற்றார். கத்தர் என்றால் புரட்சி என்று பொருள். வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களையும் பணத்தையும் திரட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து புரட்சியை நடத்துவதே அவர்களின் லட்சியமாகத் தீர்மானிக்கப்பட்டது.

1914 இல் பஞ்சாபைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சீக்கியர்களும் முஸ்லீம்களுமான ஒரு மக்கள் கூட்டம் வேலைதேடிக் கனடாவுக்குப் போனது. கோமகாடமாரு என்ற பெயருடைய ஜப்பானியக் கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அவர்கள் கனடாவின் வான்கூவர் துறைமுகத்தை நெருங்கினர். ஆனால் கனடா நாட்டு நிர்வாகம் அவர்களைத் தரையிறங்க அனுமதிக்கவில்லை. திருப்பிப் போகும்படி உத்தரவிட்டனர். மீண்டும் நாட்கணக்கில் பயணம் செய்து கல்கத்தா துறைமுகத்தை நெருங்கிய அக்கப்பலில் கடத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகப் பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு கல்கத்தா அதிகாரிகளை அனுப்பி கப்பலில் இருப்பவர்களை நடுக்கடலில் பிட்ஜ்பட்ஜ் என்ற இடத்தில் இறங்கச் சொன்னது. அப்போது ஏற்பட்ட மோதலில் பிரிட்டிஷ் படைகள் சுட்டு 20 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் வங்கத்திலும் நாட்டின் வடபகுதிகளிலும் பஞ்சாபிலும் பெரும் ஆவேச அலைகளை ஏற்படுத்தியது.

ஏற்கனவே ராஷ்பிகாரிபோஸ் முன்முயற்சியில் நாடுதழுவிய ஒரு எழுச்சிக்கு மாஸ்டர் பிளான் போடப்பட்டது. நாடு பூராவுமிருந்த இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்தும் வெளிநாடுகளிலிருந்த அமைப்புகளின் உதவியோடும் அந்தத் திட்டம் தீட்டப்பட்டது. முதல் உலகப்போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நேரம். பிரிட்டிஷ் படைகள் போரில் கவனம் செலுத்தும் நேரத்தில் உள்நாட்டில் கலகத்தை மூட்டினால் எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடமுடியும் எனத் திட்டமிடப்பட்டது. அயர்லாந்து விடுதலைக் குழுக்களின் பாணியில் இத்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அயர்லாந்தில் ஆயுதம் தரித்த விடுதலைப்போர் வீரர்கள் என்று ஒரு பெரிய படை தனியாக இருந்தது. இந்தியாவில் அப்படி ஒரு படை இருக்கவில்லை. ஆகவே 1857 இல் நடைபெற்ற சிப்பாய்கள் கிளர்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு பிரிட்டிஷ்-இந்திய ராணுவப் படைப்பிரிவுகளில் பிளவுண்டாக்கி எழுச்சியைத் துவக்க முடிவு செய்தனர். பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி மற்றும் துருக்கியுடன் பேசி தேவையான ஆயுதங்களைப் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியின் தென் கிழக்கு ஆசிய முகாம்களிலிருந்து ஆயுதங்கள் கப்பல் மூலம் அனுப்பப்படும் என ஜெர்மானிய வெளியுறவுத்துறை உறுதியளித்தது. புரட்சி வென்ற பிறகு அமையும் புதிய அரசு ஜெர்மனிக்கு எல்லாவற்றையும் திருப்பித் தரும் எனவும் புதிய இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள ஜெர்மனிக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் புரட்சியாளர்கள் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. கத்தர் இயக்க வீரர்கள் பஞ்சாபிற்குள் வந்து குவியத் துவங்கினர். பல இடங்களில் அவர்கள் பிரிட்டிஷாரால் சுற்றி வளைக்கப்பட்டுப் பிடிபட்டாலும் சுமார் 8000 பேர் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர். ஆங்காங்கு இருந்த ராணுவப் படைப்பிரிவுகளோடு அவர்கள் ரகசியமாகப் பேசத் துவங்கினர்.

ராஷ்பிகாரிபோஸ், பிங்ளே, சச்சிந்திரநாத் போன்ற தலைவர்கள் கொள்ளையடித்துப் பணம் திரட்டவும், ஆயுதங்கள் தயாரிக்கவும், படைகளைத் திரட்டவும் என நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து கொண்டிருந்தனர். 21.2.1915 அன்று ஒரே நேரத்தில் எழுச்சிக்குத் திட்டமிடப்பட்டது. தலைவர்கள் ஒவ்வொரு இடத்தில் நின்று நேரடித் தலைமையாக வழிநடத்தினர். எல்லாம் சரியாகத் துவங்கியது ஆனால் வெளிநாட்டு ஆயுதங்கள் கடைசிவரை வந்து சேரவே இல்லை. சில படைப்பிரிவுகளில் காட்டிக்கொடுக்கும் பணியும் நடந்ததால் 1915 எழுச்சி பயங்கரமாக ஒடுக்கப்பட்டது. பிங்ளே, கர்த்தார்சிங் உள்ளிட்ட கத்தர் இயக்க வீரர்கள் 46 பேர் ஒரே நேரத்தில் துக்கிலிடப்பட்டனர். பலரும் நாடு கடத்தப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்டனர். ராஷ்பிகாரிபோஸ் கப்பலில் ஏறித்தப்பி ஜப்பானில் தஞ்சமடைந்தார். ஜதீந்திரநாத் மட்டும் பாலாசூர் துறைமுகத்தில் கப்பலில் ஆயுதம் வருமெனக் காத்திருந்தார். செப்டம்பர் 1915 இல் பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த ஆயுத மோதலில் அவர் கொல்லப்பட்டதோடு அந்த எழுச்சி அடக்கப்பட்டு முடிந்தது. ஜெர்மனியிலிருந்து எம்டன் கப்பலில் இந்த எழுச்சிக்காக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு தமிழரான செண்பகராமன்பிள்ளை வந்ததாகவும் தரையிறங்க வழியில்லாமல் சென்னையின் மீது ஒரு குண்டை வீசிவிட்டுத் திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரண்டாவது அலையில் முதல் அலையைவிட சக்திமிக்க ஒருங்கிணைப்பும் வெளிநாட்டுத் தொடர்புகளும் என இளைஞர்கள் முன்னேறி இருந்தனர். கிளர்ச்சி நடந்த நிலப்பரப்பும் விரிவடைந்திருந்தது. சாதிமத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமை உணர்வு கூடியிருந்தது.

இக்காலகட்டத்தில் நாடு முழுவதிலும் ஆங்காங்கே இளைஞர்கள் பல்வேறு பெயர்களில் கம்யூனிஸ்ட் குழுக்களை ஏற்படுத்தியிருந்தனர். 1917இல் ருஷ்யப்புரட்சி வெற்றி பெற்று உலகம் முழுவதும் உழைப்பாளி மக்கள் மத்தியிலே புதிய நம்பிக்கை வெளிச்சத்தைப் பரப்பத் துவங்கியது.

VI
1919-1938 : இளைஞர் எழுச்சியின் மூன்றாவது பேரலை

1919 முதல் 1922 வரையிலும் எழுச்சிகள், கிளர்ச்சிகள், கலகங்கள் என எதுவுமேயில்லாத தூக்க நிலை நிலவியது. காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் லட்சோபலட்சம் மக்கள் பங்கேற்ற காட்சிகள் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. தீவிரவாத நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களும் மக்கள் சக்தியின் முன்னால் மௌனமாகிப் போனார்கள். காந்திஜியும் “இன்னும் ஒரே வருடத்தில் சுயராஜ்ஜியம்” என்று யங் இந்தியா பத்திரிகையில் (22 செப்டம்பர் 1920) எழுதி வாக்களித்ததை எல்லோரும் நம்பினர். ஆனால் ஓராண்டில் சுயராஜ்ஜியம் வரவில்லை. சௌரி-சௌராவில் மக்களைத் தாக்கிய போலீசாரைத் தீவைத்துக் கொன்ற சம்பவத்தை வன்முறை என்று சொல்லி காந்திஜி போராட்டத்தை வாபஸ் பெற்றார். பெரும் ஏமாற்றப் பெருமூச்சு காற்றில் கலந்திருந்தது. எல்லோரும் அவரவர் பாதைக்குத் திரும்பி விட்டார்கள். படித்த வர்க்கம் சட்டசபைக்கு-தீவிரமான இந்துக்களும் முஸ்லீம்களும் அவரவர் மத அமைப்புகளுக்கு உள்ளூர் பிரமுகர்கள் அவரவர் சாதிய வர்க்க அடையாளங்களுக்கு என. எனவே புரட்சிகர இளைஞர்களும் தங்கள் வன்முறைப்பாதைக்கு ஆயுதங்கள் தேடவும் பணம் சேகரிக்கவும் எனத் திரும்பினர்.

ஆனால் உலகம் இப்போது வேறாகியிருந்தது. 1917இல் சோவியத் புரட்சியின் விளைவாக உலகின் முதல் பாட்டாளிகள் அரசு அமைந்துவிட்டது. வெறும் வன்முறைத் தாக்குதல் என்பது இனி இருக்க முடியாது. என்ன லட்சியத்துக்காக? யாருக்காக என்கிற கேள்விகள் எழுந்தன. சோசலிசக் கருத்துக்களோடு பெருவாரியான மக்களை அணிதிரட்டும் லட்சியத்தோடு மூன்றாவது அலை ஆயுதமேந்தியது. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்தும் சோவியத் புரட்சியிலிருந்தும் சரியான படிப்பினை கற்றுக்கொண்ட இந்தத் தலைமுறை நிதானமுடன் திட்டமிட்டு இயங்கியது.

இக்காலப்பகுதியின் முக்கியமான இயக்கங்களாக சந்திரசேகர ஆசாத்தின் இந்துஸ்தான் குடியரசு ராணுவம், பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் மற்றும் சூர்யசென், கல்பனா தத் ஆகியோரடங்கிய இந்துஸ்தான் குடியரசு ராணுவம் (சிட்டகாங் பிரிவு) ஆகியவை நிற்கின்றன.

வங்கத்தின் அனுஷிலான் சமிதி மற்றும் யுகாந்தர் குழுக்களிலிருந்து திரட்டப்பட்ட இளைஞர்களைக் கொண்டு துவக்கப்பட்டது இந்துஸ்தான் குடியரசு ராணுவம். காசி, அலகாபாத், கான்பூர், லக்னோ, ஷாஜஹான்பூர், ஷஹரான்பூர் மற்றும் ஆக்ராவிலும் கிளை பரப்பிய இயக்கமாக அது விரிந்தது. கல்கத்தாவை ஒட்டிய இடங்களில் ஆயுதத் தொழிற்சாலைகள் இயங்கின. ஆயுதப்பயிற்சியும் அங்கேயே வழங்கப்பட்டது. செலவுகளுக்கு அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிக்கும் முறையே நீடித்தது. ஷங்கரிடோலா தபால் ஆபீஸ் ஆகஸ்ட் 1923இலும் சிட்டகாங்கின் பஹர்டாலி பணிமனை டிசம்பர் 1923இலும் உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான கொள்ளைகளும் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தால் நடத்தப்பட்டன. அவற்றில் மிகவும் புகழ்பெற்ற கொள்ளை லக்னோவை அடுத்த ககோரியில் நடத்தப்பட்ட ரயில் கொள்ளைதான். ஆங்கில அதிகாரிகளைச் சுட்டும் குண்டு வீசியும் கொலை செய்து மக்கள் மனங்களில் தைரியத்தையும் போராடும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ஆனால் 1926 இறுதிக்குள் இவ்வியக்கத்தின் முக்கியத் தலைவர்கள் (சந்திரசேகர ஆசாத்தைத் தவிர) அனைவரும் போலீசில் பிடிபட்டனர். நீண்ட விசாரணைகள் நடைபெற்றன. ஒவ்வொருநாள் விசாரணையையும் தங்கள் பிரச்சார மேடையாக அவர்கள் பயன்படுத்தினர். கோர்ட்டுக்குப் போகும்போதே எழுச்சிப் பாடல்களைப் பாடியபடி செல்வதும் முழக்கங்கள் எழுப்புவதும் வழக்கம். கோபிநாத் ஷஹா, ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லாஹிரி, அஷ்•பாகுல்லா, தாகூர் ரோஷன்சிங் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை மகிழ்வோடு அவர்கள் ஏற்றுக்கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையில் பெரும் தீவனம் தின்பவர்களாக மாறி ஒவ்வொருவரும் 5 கிலோ பத்துக்கிலோ எடைகூடி தூக்குப் போடுபவருக்கு எளிதாக அவர்களைத் தூக்கித் தொங்கவிடமுடியாத நெருக்கடியை உண்டாக்கினர். தூக்குத் தண்டனையை பெரும் விளையாட்டாக மாற்றிய அவர்களின் மனநிலை இன்றைக்கும் நமக்குப் பெரும் வியப்பைத் தருவதாயிருக்கிறது.

பிடிபடாமல் தப்பிய சந்திரசேகர் ஆசாத் போன்ற தோழர்கள் ஒரு நாளும் தாமதிக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இன்னும் கூடுதலான அரசியல் தெளிவுடன் சோசலிசப் பாதையை நோக்கி மார்க்சிய வெளிச்சத்தில் புதிய அமைப்பை உருவாக்கினர். அதுவே இந்துஸ்தான் சோசலிச ராணுவக் குடியரசு. பகத்சிங் பின்னர் இதில் வந்து இணைந்து கொண்டார்.

இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவத்தின் மிகப்பெரிய முதல் நடவடிக்கையாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற நிகழ்வு சாண்டர்ஸ் கொலையாகும். 1928இல் முற்றிலும் ஆங்கிலேயர்களை மட்டுமே கொண்ட சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அதை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றன. பஞ்சாபில் லாலா லஜபதிராய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை போலீஸ் வெறிகொண்டு தாக்கியது. பலர் காயமடைந்தனர். லாலா லஜ்பதிராயும் நெஞ்சில் தாக்கப்பட்டு வீழ்ந்தார். அந்த அடியின் காரணமாக அவர் படுக்கையில் விழுந்து விரைவில் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை மடியில் போட்டபடி அவருடைய மனைவி வீர வசந்திதேவி இந்தப்படுகொலைக்குப் பழிதீர்க்க ஆயுதம் ஏந்துமாறு நாட்டின் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் அந்த அறைகூவலை ஏற்றது. சந்திரசேகர ஆசாத்தும் சுகதேவும் பின்னிருந்து உதவ பகத்சிங்கும் ராஜகுருவும் போலீஸ் அதிகாரி சாண்டர்ஸைச் சுட்டுக்கொன்றனர். “சாண்டர்ஸ் செத்தொழிந்தான். லாலாஜியின் மரணத்துக்குப் பழிக்குப்பழி” என்று எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் அவன் பிணத்தின் மீது வீசப்பட்டன. இந்த ஒரே நடவடிக்கையின் மூலம் மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தார்கள் அந்த இளைஞர்கள்.

சோசலிசக் கருத்துக்கள் மட்டுமின்றி பகத்சிங்கின் நாத்திக-அறிவியல் அணுகுமுறையும் அந்த இயக்கத்துக்கு புதிய தத்துவ பலத்தைத் தந்தன. அதையடுத்து மத்திய சட்டசபையில் கருத்து சுதந்திரத்துக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் வேட்டு வைக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருந்த நாளில் பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் சபைக்குள் நுழைந்து குண்டுகள் வீசி (எவர்மீதும் படாமல்) செவிடர்கள் காதிலும் எங்கள் முழக்கம் கேட்கவேண்டும் என்பதற்காகவே குண்டு வீசினோம் என்று சொல்லி துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர். தப்பி ஓட முயற்சிக்காமல் இருவரும் கைதாகினர். வழக்கு விசாரணை நீண்டகாலம் நடைபெற்றது. போலீசின் தொடர் வேட்டையில் பல தோழர்கள் கைதாகினர். பல ரகசிய இடங்கள் அழிக்கப்பட்டன.

கோர்ட்டில் பகத்சிங் பேசும் ஒவ்வொரு முறையும் தனக்கு முன்னால் இந்த தேசமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதான பாவனையில்தான் பேசுவார். தத்துவ விளக்கங்களும் ஏகாதிபத்தியத்தின் மீதான சாட்டையடிகளும் காந்திஜியின் கொள்கைகள் மீதான கடும் விமர்சனங்களுமாகப் பேச்சு வெடித்து வரும். உண்மையில் கோர்ட் நடவடிக்கைகளை தேசமே கவனித்து வந்தது.

நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் ககோரி தினம் (19 டிசம்பர் 1929), லெனின் தினம்(24 ஜனவரி 1930), மே தினம்(மே1,1930) எல்லாம் அனுஷ்டித்தனர். அவர்கள் சார்பாக சோவியத் யூனியனுக்கு நவம்பர் புரட்சிதின வாழ்த்துத் தந்தி அனுப்பும்படி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். இதுபோக சிறைக்குள்ளே கைதிகளின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் நடத்தினர். கைதிகளின் உரிமைக்காக நடந்த உண்ணாவிரதப்போரில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஜதீந்திரநாத் தாஸ் சிறைக்குள்ளேயே மரணமடைந்தார். அப்போதும் வெள்ளை அரசு அவர்களுடைய கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. ஜதீந்திரநாத்தின் சடலத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன் பொறுப்பில் பெற்றுச் சென்றார். கல்கத்தாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியில் அவரது சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

பகத் சிங்கை விடுவிக்க ஆசாத் மேற்கொண்ட சிறைத் தகர்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. 1930 அக்டோபர் 7ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தேசமே கொந்தளித்தது. உப்புச்சத்தியாக்கிரகம் நடத்தி அலுத்துப் போயிருந்த காங்கிரஸ் கட்சி இவர்களை விடுதலை செய்யக்கோரி எந்த இயக்கமும் நடத்தவில்லை. மாறாக காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட பகத்சிங் விடுதலை குறித்து காந்தி எதுவும் பேசவில்லையே என்று மக்கள் மனம் குமுறினர். 1922 இல் சௌரி சௌராவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியையே ஏற்றுக்கொள்ளாத காந்தி பகத்சிங்கின் வழியை எப்படி ஏற்பார்? வெடிகுண்டின் பாதை ( The Cult of Bomb) என்று காந்தி எழுதிய கட்டுரைக்கு பதிலடியாக வெடிகுண்டின் தத்துவம் (The Philosophy of Bomb) என்று பகத்சிங் கட்டுரை எழுதியிருந்தார். இருவரும் இருவேறு துருவங்கள். முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி காந்தி. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய பயணம் பகத் சிங்கினுடையது. சுபாஷ் சந்திர போஸ் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் பேரணி நடத்திக் கண்டனம் தெரிவித்தார்.

சிறையிலிருந்து தப்பி வரும்படி தோழர்கள் பகத்சிங்கைக் கேட்டுக்கொண்டனர்.ஆனால் பகத் சிங் மறுத்தார்.தப்பி வந்து கூடுதலான நாட்கள் வாழ்ந்து என் பலவீனங்கள் எல்லாம் மக்களுக்குத் தெரிந்து என் வாழ்க்கை நீர்த்துப்போவதை விட இப்படியே இறந்துபோய் எல்லாத் தாய்மார்களுக்கும் பிடித்தமான ஒரு பிள்ளையாக தங்கள் குழந்தைகளுக்குக் காட்ட ஒரு முன்னுதாரணமாகச் சாவதே சிறந்தது என்று சொல்லிவிட்டார். 1931 மார்ச் 23ஆம் நாள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கு மேடைக்குப் போகும்போதும் அவர்கள் உரக்கப் பாடியபடி சென்றனர்:

“ அன்னைத் திருநாட்டின் மீது கொண்ட என்
அன்பு மறையாதே எப்போதும் எப்போதும்
செத்துநான் வீழ்ந்தபோதும் மறையாதே
அந்த அன்பின் வாசம் எஞ்சிக் கிடக்கும்
என் எலும்பின் துகள்களிலும்
என் சடலம் எரிந்து எலும்புகள் தெறிக்கையில்
இன்குலாப் என்றே முழக்கும்”

தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டுவதற்கு முன்பாக “என் தேசம் விடுதலை பெறுவது நிச்சயம். ஏகாதிபத்தியம் இற்று நொறுங்கி வீழ்வது நிச்சயம். இன்குலாப் ஜிந்தாபாத்” என முழங்க்¢னார் பகத்சிங்.

உண்மையிலேயே தேசம் அன்று கதறி அழுதது. பெண்களெல்லாம் தங்கள் பிள்ளையே பறிபோனது போல வீதிகளில் புரண்டு அழுதனர். வீதிகள் எங்கும் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் மோதி மோதி எதிரொலித்தது. பிரிட்டிஷ் அரசு அவரது சடலத்தை மக்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டது. தானே கொண்டுபோய் எரித்தது.

பகத்சிங்கின் மரணத்துக்குப் பிறகு அலகாபாத்தில் போலீசுடன் நடந்த மோதலில் சந்திர சேகர ஆசாத் கொல்லப்பட்டார். அவர் ஒளிந்து நின்று போலீசைச் சுட்ட மரத்தைப் பார்க்க லட்சம் பேர் திரண்டு விட்டனர். அரசாங்கம் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி தூரப்போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்துஸ்தான் ராணுவ குடியரசு (சிட்டகாங் பிரிவு) சூர்யாசென் தலைமையில் இயங்கியது. அது சிட்டகாங் நகரைச் சில தினங்களேனும் தங்கள் கைகளில் வைத்திருந்து மக்கள் மனங்களில் விடுதலைக்கான நம்பிக்கையை விதைக்க வேண்டும் எனத் திட்டமிட்டனர். 18,ஏப்ரல் 1930இல் ஆயுதமேந்திக் களம் புகுந்தனர். திட்டமிட்டபடி ஆயுதக்கிடங்கையும் அரசுத் தலைமையகத்தையும் கைப்பற்றினர். நான்கு தினங்கள் நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சிட்டகாங்கை விடுதலை பெற்ற பிரதேசமாக அறிவித்தனர். மக்கள் ஆரவாரத்துடன் அதை வரவேற்றனர். ஆனால் நான்காவது நாள் வெள்ளைப் படைகளின் தாக்குதலில் பல தோழர்களின் மரணத்தோடு எழுச்சி முடிவுக்கு வந்தது. அனந்த்சிங், கணேஷ் கோஷ், அம்பிகா சக்ரவர்த்தி, சாவித்திரி தேவி, சுஹாசினி கங்குலி, ப்ரீதிலதா வதேதார், மானிதத், ஸ்வதேஷ்ராய், சாந்தி சக்ரவர்த்தி ,டேக்ரா என அப்படையின் தளபதிகள் களத்தில் வீழ்ந்தனர். கல்பனா தத் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னாளில் அவர் விடுதலையாகி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தலைவர் சூர்யாசென்னும் தாராகேஷ்வரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் சடலங்கள் தி ரினௌன் என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்டு ஆழக்கடலில் வீசியெறியப்பட்டன.

1934 உடன் இளைஞர்களின் இத்தகைய எழுச்சிகள் ஒடுக்கப்பட்டன. அவர்கள் சென்ற பாதை வன்முறைப்பாதையாக இருக்கலாம். இன்றைய நாளின் நம் புரிதல்களோடு நாம் அவற்றைப் பார்க்கக் கூடாது. மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பெரிய தேசிய இயக்கம் ஏதும் இல்லாத ஒரு காலத்தில் தங்கள் உயிரையே பணயமாக வைத்து அவர்கள் நடத்திய போராட்டங்கள் மதிக்கத் தக்கவை.

VII
இளம் கம்யூனிஸ்ட்டுகள் கொடுத்த இறுதி மரண அடி

1919க்குப் பிறகுதான் கம்யூனிஸ்ட் குழுக்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளத் துவங்கின. முற்றிலும் இளைஞர்களான அன்றைய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு குழுவினர் 1919இல் சோவியத் யூனியனுக்குச் சென்று தோழர் லெனினைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். காந்தியின் வர்க்க சார்பைப் பற்றிய (எம்.என்.ராய் போன்ற) இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளின் புரிதலை ஏற்றுக்கொண்ட லெனின் காலனி நாடாகிய இந்தியாவில் நடைபெற்றுவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய இயக்கத்தின் முக்கியத்துவத்தை எம்.என்.ராய் குறைத்து மதிப்பிட்டதை விமர்சித்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைக் கண்டித்து லெனின் ‘அமிர்தபஜார் பத்திரிகா’ என்கிற இந்தியப் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்பினார். கொடுக்கல் வாங்கல்கள் துவங்கிவிட்டன.

ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டத் துவங்கிவிட்ட கம்யூனிச பூதத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுங்கியது. ஆகவே இந்தியாவில் இயங்கிய கம்யூனிஸ்ட் குழுக்களுக்கு கடும் சோதனைகளை ஏற்படுத்தியது. மார்க்சியப் புத்தகங்களை தடை செய்தது. குழுக்களை தடை செய்தது. கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்தது. நாடு கடத்தியது. பல்வேறு சதி வழக்குகளைப் போட்டு தோழர்களை வேட்டையாடியது.

தமிழகத்தில் மட்டும் நெல்லை சதி வழக்கு, மதுரைச் சதி வழக்கு, கோவைச் சதி வழக்கு, சென்னைச் சதி வழக்கு என்று போட்டு அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறி இளம் கம்யூனிஸ்ட்டுகளை உள்ளே தள்ளியது. இந்திய அளவில் புகழ்பெற்ற சதி வழக்காக 1929 ஜுன் 12 ஆம் தேதி துவங்க்¢ய மீரத் சதிவழக்கு அமைந்தது. விசாரணை மன்றத்தை கம்யூனிஸ்ட் பிரச்சார மேடையாக மாற்றி தோழர்கள் சண்டமாருதம் செய்தனர். இந்தியாவே இவ்வழக்கின் போக்கை கவனித்தது. மீரத் சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 தோழர்களும் அதே நேரத்தில் லாகூர் சதிவழக்கில் கைதாகி விசாரணையிலிருந்த பகத்சிங்கும் அவரது தோழர்களும் மிகுந்த நட்புணர்வுடன் தோழமை உறவு கொண்டிருந்தனர். பகத்சிங் உயிரோடு இருந்திருந்தால் கல்பனா தத்தைப் போல நேதாஜி படையிலிருந்த கேப்டன் லட்சுமியையும் செகலையும் போல பகத்சிங்கின் தோழர் சிவவர்மாவைப்போல அவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியிருப்பார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

பகத்சிங்கும் பி.கே.தத்தும் வழக்கின்போது விடுத்த கூட்டறிக்கையில் “புரட்சி என்றால் குண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஆராதனை செய்வது அல்ல. அநீதியை அடித்தளமாகக் கொண்டுள்ள இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றியமைப்பது என்பதுதான் புரட்சி என்ற சொல்லின் உண்மையான பொருள்.. .. .. இப்போதுள்ள அரசாங்க அமைப்புத் தொடருமேயானால் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும். அப்போராட்டத்தில் அனைத்துத் தடைகளும் நொறுங்கி விழும். உண்மையான புரட்சியினை அடைவதற்காக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அமைக்கப்படும்” என்று எழுதினர்.

தூக்கிலேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் பகத்சிங் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற நூலைப் படித்து முடித்தார். அவரே கண்டடைந்த வழியான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வென்றடைய தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டியாக வேண்டும். அப்பணியை பகத்சிங் செய்திருக்கவில்லை. நீண்ட நெடிய கடுமையான அப்பணியை அப்போதுதான் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த இளம் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் செய்யத் துவங்கினர். தீவிரவாதச் செயல்களால் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பலாம். ஆனால் புரட்சி என்பது பாட்டாளிகளை அரசியல் ரீதியாகப் பயிற்றுவித்து வர்க்கப் போருக்குத் தலைமை தாங்கச் செய்யும் கடுமையான பணியாகும்.

கம்யூனிஸ்ட்டுகள் நாடெங்கும் தொழிற்சங்கங்களையும் விவசாயசங்கங்களையும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையும் கட்டி எழுப்பினர். அடக்குமுறைகளையும் தடைகளையும் மீறி செங்கொடி இயக்கம் முன்னேறிக்கொண்டிருந்தது. மேஜர் ஜெய்பால்சிங் போன்ற தோழர்களின் முயற்சியால் ராணுவத்துக்குள்ளும் ரகசிய கம்யூனிஸ்ட் குழுக்கள் இயக்கப்பட்டன. 1930களில் ஏற்பட்ட முதலாளித்துவ உலகப் பொருளாதார நெருக்கடி (Great Depression) சந்தையை மறுபங்கீடு செய்யும் இரண்டாம் உலகப் போரை நோக்கி இட்டுச் சென்றது. போரின் முடிவில் நெருக்கடி தீவிரப்பட்டது. இந்தியாவில் வரலாறு காணாத வேலை நிறுத்தங்கள் நடைபெறத் துவங்கின.

ராணுவ வீரர்களுக்கிடையேயும் தேசபக்த உணர்ச்சி பீறிட்டெழுந்தது. 1945இல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுத்து வடகிழக்கு எல்லை வரை வந்துவிட்ட செய்தி உள்நாட்டில் இயங்கிய ராணுவத்துக்குள்ளே இந்திய சிப்பாய்களிடையே பரபரப்பை உண்டாக்கியது.

1946 பிப்ரவரி 18ஆம் நாள் பம்பாய் கடற்படையில் வேலை நிறுத்தம் துவங்கியது. அன்று காலை தல்வார் பயிற்சிப்பள்ளியில் துவங்கிய வேலைநிறுத்தம் மறுநாள் பம்பாய், கராச்சி என்று துறைமுகமெங்கும் நின்றிருந்த கப்பல்களின் மாலுமிகள் 20,000பேர் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். பம்பாயில் காசின் பாரக்சில் வேலைநிறுத்தம் செய்த மாலுமிகளை உள்ளே அடைத்து பிரிட்டிஷ் ராணுவம் வெளியிலிருந்து சுட்டது. கம்யூனிஸ்ட் கட்சி பம்பாய் நகரத் தொழிலாளி வர்க்கத்தை வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தது. பம்பாய் நகரமே வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்தது. பம்பாயின் விமானப்படை வீரர்களும் வேலைநிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொழிலாளிகளும் காவல்துறையினரும் ராணுவ,விமானப்படை மற்றும் கப்பல்படை வீரர்களும் நாட்டின் பல்வேறு நகரங்களில் தெருக்களில் கைகோர்த்து ஊர்வலமாக வந்தனர். ஆத்திரமடைந்த பிரிட்டிஷார் மேலும் மேலும் படைகளை பம்பாயில் குவித்தனர். ஆனால் படைவீரர்களான இந்திய சிப்பாய்கள் தங்கள் சகோதரர்களான மாலுமிகளைச் சுட மறுத்தனர். வெள்ளைச் சிப்பாய்கள் களம் இறக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பம்பாய் நகர மக்கள் சாலைகளில் தடையரண்களை ஏற்படுத்தி ராணுவத்துடன் மோதினர். பம்பாய் நகரமே போர்க்களமானது. மக்கள் உணவு தயாரித்து மாலுமிகளுக்கு கொடுத்தனுப்பினர்.

கப்பல்களில் எல்லாம் பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடிகள் இறக்கப்பட்டு காங்கிரசின் மூவர்ணக்கொடியும், முஸ்லீம் லீகின் பச்சைக்கொடியும் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியும் ஏற்றப்பட்டன. போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு இம்மூன்று கட்சிகளுக்கும் மாலுமிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

காந்திஜி மாலுமிகளின் இப்போராட்டத்தை ஆதரிக்க முடியாது என்றார். “அது இந்தியாவை ஒரு வெறிக்கூட்டத்திடம் ஒப்படைப்பதாகும் என்பது மெய். அந்த முடிவைக் கண்ணால் காண 125 வயது வரை உயிர்வாழ நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன்” என்று ஹரிஜன் பத்திரிகையில் பகிரங்கமாக எழுதினார். முஸ்லீம் லீக்கும் மாலுமிகளைக் கையைக் கழுவியது. கம்யூனிஸ்ட்டுகளின் வழிகாட்டுதலில் இப்போராட்டம் நடப்பதாக அரசாங்கம் கூறியது.

முதலாளிவர்க்கத்தின் கட்சியான காங்கிரஸ் மக்கள் எழுச்சியை ஒரு எல்லைக்கு மேல் போகவிடாமல் எப்போதும் பார்த்துக்கொள்ளும். 1922இலும் 1931 இலும் அதுதான் நடந்தது. போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறும் தருணத்தில் போராட்டத்தை வாபஸ் வாங்கி ஏகாதிபத்தியத்துடன் சமரசம் பேசப்போய்விடும். ஆனால் 1946 எழுச்சி தொழிலாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், படை வீரர்கள் என அனைத்துப் பகுதி மக்களின் சேர்மானத்துக்கு வழி கோலியதால் ஆத்திரமடைந்தது காங்கிரஸ். மாலுமிகளைச் சரணடைய நிர்ப்பந்தித்தது. போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

ஆனால் இது 1857 அல்ல என்பதை பிரிட்டிஷ் அரசு புரிந்துகொண்டது. காங்கிரசும் புரிந்து கொண்டது. ஆகவே 1947இல் வெள்ளையன் வெளியேற ஒப்புக்கொண்டான். 1942இல் வெள்ளையனே வெளியேறு என்று காங்கிரஸ் கட்சி சொன்னபோது போக மறுத்த வெள்ளையன் 1946இல் செங்கொடியின் ஆதரவோடு மக்கள் தெருக்களில் இறங்கி வெளியேபோடா நாயே என்று சொன்னதும் போய்விட்டான். இதுதான் வரலாறு.