Saturday, February 26, 2011

ப்ளாஸ்டிக் வரமா? சாபமா?

ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்கிற மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடக்கும் நிக்ழவுகளாகிவிட்டது. உண்மையிலேயே அழிக்க வேண்டிய எமனா ப்ளாஸ்டிக்? இல்லை ஆதரிக்க வேண்டிய கடவுளா? சிந்திக்கவேண்டிய கேள்வி இது.

எனக்கு விபரம் தெரிய வரும் சமயம் காலை கோல்கேட் பவுடர் டப்பா முதல் (பேஸ்ட்டும் கூட) இரவில் அம்மா போடும் ஹார்லிக்ஸ் வரை தகரத்தில் அல்லது பாட்டிலில் இருக்கும் டின்களாகவே இருந்து வந்தன. காலப்போக்கில் இந்த இடத்தில் எல்லாம் ப்ளாஸ்டிக் வந்து சேர்ந்தது. உபயோகிக்க எளிது. உடையாது. இந்த இரு காரணிகளால் அனைவராலும் பெரும் வரவேற்பிற்கு ஆளானது இந்த வஸ்து. பொம்மைகள், சேர், டேபிள், பேனாக்கள், டெலிபோன், கம்ப்யூட்டர்கள், செருப்புகள், தொப்பிகள், வாட்சுகள், கண்ணாடிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ப்ளாஸ்டிக்கின் பயன்பாட்டினை.

இந்த அளவு இருக்கும் வரை இந்த ப்ளாஸ்டிக் யாருக்கும் தொல்லை தரும் பொருளாகவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எப்பொழுது டீ கப்புகள் மற்றும் கேரி பேக்குகள் வந்ததோ அப்போது பிடித்தது வினை. அழிக்க முடியாத இந்த ப்ளாஸ்டிக்கின் அதீத பயன்பாடு இன்று ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் என அனைவரும் சங்கூத வேண்டிய அளவிற்கு கொண்டுவந்து விட்டது. கருர் இரட்டை வாய்க்கால் தூர் வாரும் சமயம் அங்கு நான் போகவேண்டிய வேலை வந்தது. அப்போது பொக்லேன் இயந்திரம் மூலம் அள்ளி அள்ளி கொட்டியது எல்லாமே வெறும் ப்ளாஸ்டிக் கழிவுகள் தான். இவை தண்ணீரின் ஓட்டத்தினை அடைத்துக்கொள்ளவே கொசு உற்பத்தி அதிகமாகி நகரமே இன்னலுக்குள்ளானது. கரூர் நகரம் முழுவதும் ஒருமுறை உபயோகிக்கும் ப்ளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடை நடைமுறையில் சாத்தியமற்றுப்போனது.

ப்ளாஸ்டிக் இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? மிகவும் தேவையான கேள்வியில் இதுவும் ஒன்று. யோசித்துப்பார்த்து சொல்லுங்கள். உங்களால் ப்ளாஸ்டிக் இல்லாத ஒரு வாழ்வினை. காலை கண்விழித்தவுடன் பல் துலக்கும் ப்ரஷ் பிளாஸ்டிக். பார்க்கும் டிவி பிளாஸ்டிக். நீங்கள் ஓட்டும் வண்டியில் பாதி பிளாஸ்டிக். உஙகள் பேனா பிளாஸ்டிக். செல்போன் பிளாஸ்டிக். அமர்ந்திருக்கும் நாற்காலி பிளாஸ்டிக். கம்ப்யூட்டர் பிளாஸ்டிக். கால்குலேட்டர் பிளாஸ்டிக். தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக். வாளி குவளைகள் பிளாஸ்டிக். இப்படி எங்குமே பிளாஸ்டிக் மயமாக இருக்கும் போது எப்படி இவை இன்றி நாம் வாழ இயலும்?

ஆக, நாம் பிளாஸ்டிக் இன்றி வாழ முடியாது. இருப்பினும் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே நாம் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்த வேண்டும். அதாவது யூஸ் & த்ரோ என்னும் கலாசசாரத்தினை விட்டொழிக்க வேண்டும். கடைக்கு காய்கறி வாங்க செல்லும்போது மறக்காமல் பை எடுத்து செல்லலாம். அந்த பை கூட பிளாஸ்டிக்காக இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் தினமும் அந்த பிளாஸ்டிக் பையினை உபயோகப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். டீ வாங்கும் சமயம் கண்ணாடி டம்ளரில் நன்கு வென்னீரில் கழுவி டீ வாங்கி குடிக்கலாம். இதன் மூலம் மட்டுமே சுற்றுச்சுழல் மாசடைவதை தடுக்க இயலும். கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம்.

இந்த கட்டுரை என் சொந்த கருத்தே. உங்கள் கருத்தினை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே!

Wednesday, February 23, 2011

இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.

ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.
இதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம்
கொடுக்கும்.
முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால்
வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.

நீண்ட மோதிர விரல் கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆலீவ் எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு ஏற்படுவதைத் தடுத்து
நிறுத்துமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை.
இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை
பயன்படுத்துவது தான் காரணமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை
உடலெங்கும் செலுத்துகிறது.

1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில்
செய்யப்பட்டது.

பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.
காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை, ஞாபகம்,
நினைவு, மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமை தான்
ஏற்படுகிறது.

சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.
நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்த நாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட
மைதானத்தை விட பெரியதாகும்.

ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
உலகம் முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5
கோடியாகும்.

வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும்
நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.

Wednesday, February 16, 2011

அண்ணமார் சாமி கதை (பொன்னர் – சங்கர்) - வீரப்பூர்

கொங்கு நாடு என்பது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய நாடாகும். இந்த கட்டுரையில் நாம் சொல்லும் மாந்தர்களின் தாய் மற்றும் தந்தையின் சபதத்திலிருந்து தொடங்கி தங்கையின் அழுகை வாயிலாக முடிகிறது.

இந்த கதையினை நமது முதல்வர் அவர்கள் புத்தக வடிவில் “பொன்னர் சங்கர்” என்று எழுதி இருப்பதன் மூலம் இக்கதையின் சிறப்பினை நாம் அறிய முடியும். இந்த கதையினை தற்சமயம் நடிகர் பிரசாந்த் நடித்து தயாரிக்க கதை வசனத்தை முதல்வரே கையாண்டுள்ளார்.

அத்தை மகனை மசையன் என தெரிந்தும் கணவனாக ஏற்றுக்கொண்ட நாச்சியாரின் குழந்தைகளே பொன்னரும் சங்கரும். இந்த கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோரும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா காண கண்கோடி வேண்டும். 7 நாட்கள் நடக்கும் இவ்விழாவிற்கு வரும் அனேகரும் அந்த 7 நாட்களும் அங்கேயே தங்கி இருப்பர் எனப்து குறிப்பிடத்தக்கது. இலட்சக்கணக்கில் கூடும் கூட்டம் என அந்த இடமே திமிலோகப்படும். (இன்றும் கொங்கு வேளாளர் வீட்டில் பெண்குழந்தைகளை ’தங்கம்’ என்றே அழைப்பதை நான் பார்த்திருக்கிறேன்)

கரூரில் சில அன்பர்கள் சேர்ந்து “அண்ணன்மார் அன்னதானக்குழு” என்கிற பெயரில் இந்த திருவிழாவின் முக்கிய நாளாக வேடபரி அன்று அன்னதானம் வழங்குவர். அந்த குழுவில் அடியேனும் ஒருவனாக இருந்து கடந்த 5 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். சுமார் 5000 பேருக்கும் உணவளிக்கும் வண்ணம் உணவு தயார் செய்யப்பட்டு டெம்போ வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு வினியோகிப்படும். 5000 பேருக்கு சாப்பாடு என்றவுன் ஒரு நாள் முழுவதும் உணவளிக்கப்படும் என்று நினைக்காதீர்கள் நண்பர்களே. வெறும் ஒரு மணி நேரத்தில் அந்த உணவு வழங்கப்பட்டு காலியாகிவிடும்.

இந்தக்கதை ரொம்ப பெருசு என்பதாலும் தட்டச்சு செய்ய ஆகும் கால நேரத்தை நினைவில் கொண்டு மூலக்கதையை இணையத்தில் நட்பூ வலைத்தளத்திலிருந்து பெற்று உங்களுக்கு அளித்துள்ளேன்.

இதோ அந்தக்கதை:

இரா.கிருபாகரன் கொங்குப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர் களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு கின்றனர். அதுவே ‘அண்ணன்மார் சாமி’யாகி யுள்ளது. பொன்னர்-சங்கர் திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலான பொன்னிவளநாட்டை ஆண்டனர்.


கொங்கு வேளாளர் சமுதாயம் அண்ணன்மாரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் பெரும்பான்மையாக உள்ளது. பொன்னர், சங்கர் ஆகிய அவர்களது இயற்பெயர் அவ்வளவாக வழங்கப் பெறுவதில்லை. பெரியசாமி, சின்னசாமி, பொன்னையன், சின்னையன் ஆகியவை இப் பகுதியில் மிகுதியாகச் சூட்டப்படுகின்றன. பெரிய அண்ணன் என்னும் பெயரும் வழங்குகின்றது. இவை பொன்னர், சங்கர் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர்களே ஆகும். இரட்டைக் குழந் தைகள் ஆண்களாகப் பிறக்கும் என்றால் இந்தப் பெயர்களை அக்குழந்தைகளுக்குச் சூட்டுவது பெருவழக்கு. அருக்காணி, தங்கம், தங்கம்மாள் ஆகிய பெயர்கள் பெண்களுக்குச் சூட்டப்படுகின்றன. இக்கதையில் வரும் பிற பாத்திரங்கள் பெயர் களாகிய ராக்கியண்ணன், முத்தாயி, பவளாயி, பாவாயி முதலிய பெயர்களையும் மக்கட் பெயர் களில் காணலாம்.

அண்ணன்மாரின் தந்தையாகிய குன்னடையானை இக்கதைப்பாடல் ‘மசையன், மசச்சாமி, மசக்கவுண்டன்’ என்றெல்லாம் குறிப்பிடும். அவரது குணத்திற்கு உவமையாக ‘வெள்ளைச் சோளம்’ என்றும் கதை கூறும். இவையெல்லாம் ‘வெகுளி’ என்னும் பொருள் கொண்டவை. பங்காளிகளின் சூழ்ச்சிகளை எல்லாம் அறியாமல் எல்லாரையும் நம்பிவிடும் அவரது குணத்தை விவரிக்க இத்தகைய சொற்கள் கையாளப்படுகின்றன. இவை இன்று மக்கள் வழக்கிலும் உள்ளன. எதையும் நம்பி விடும் குணமுள்ள, விவரமில்லாத ஆட்களுக்குப் பட்டப் பெயர்களாக ‘மசையன்’ உள்ளிட்டவை வழங்கு கின்றன.
இப்பகுதியில் வழங்கிவரும் விடுகதை ஒன்றும் முக்கியமானது.

‘பெரியண்ணன் வேட்டிய மடின்னாலும் மடிக்க முடியாது
சின்னண்ணங் காச எண்ணுனாலும் எண்ண முடியாது’


என்பது அப்பழமொழி. வானம், விண்மீன்கள் என்பன இதற்கு விடை. இதில் பெரியண்ணன், சின்னண்ணன் என்று வருபவை அண்ணன்மாரைக் குறிப்பவையே. இந்த விடுகதையின் பிற வடிவங்களும் உள்ளன. ஆனால் கொங்குப் பகுதியில் குறிப்பாகக் கொங்குவேளாளர் வழக்கில் இந்த வடிவமே காணப்படுகின்றது. மக்கள் வழக்கில் அண்ணன்மார் கதை எந்த அளவு இரண்டறக் கலந்திருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள். இவற்றால் அக்கதையின் செல்வாக்கு பிடிபடுகிறது.

ஆனால் இக்கதை அடிப்படையில் உருவாகியுள்ள பழமொழிகள் சில உள்ளன. அவற்றைக் கதை கூறும் வரலாற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். இக்கதையின் முதற்பகுதி அண்ணன் மாரின் பெற்றோராகிய குன்னடையான் தாமரை நாச்சி ஆகியோரின் அவல வாழ்வையும் அவர் களுக்குப் பங்காளிகளே எதிரிகளாக விளங்கு வதையும் காட்டுகின்றது. கதையின் பின்பகுதி வேளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது. இக்கதைச் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர்.


அப்போதிருந்து இன்றுவரை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நல்லுறவு கிடையாது. ஒரே பகுதியில் வசித்தாலும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கும் மனப்பான்மைதான் நிலவுகின்றது. இத்தொடர் பகைக்குக் காரணம் அண்ணன்மார் கதையில் வரும் சம்பவங்கள்தான். அண்ணன்மார் கதை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நிகழ்ந்த சண்டை என்பதை மக்கள் இன்றும் தீவிரமாக நம்புகின்றனர். இக்கதை நிகழ்த்தப்படுதல் தொடர்பாக நிலவும் நம்பிக்கைகளை கோ.ந. முத்துக்குமாரசாமி கீழ்வருமாறு பட்டியலிடுகிறார்.
‘அண்ணன்மார் கதை’ படிக்கும் இடத்திற்கு வேட்டுவர் வரலாகாது; வீரப்பூர் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழாவின்போது அண்ணன் மார் அனியாப்பூரில் அம்பு தொடுத்தால் வேட்டுவர் குடியில் ஒரு பிணமாவது விழும்; அண்ணன்மார் கதையை வேட்டுவர் கேட்கவே கூடாது; ஊரில் கதை நடந்தால் வேட்டுவர் காது கேளாத தூரத்திற்குச் சென்றுவிட வேண்டும்’ (ப.34).
வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே உள்ள பகைக்குக் காரணம் இக்கதைச் சம்பவங்கள் தான் என்பதை இந்த நம்பிக்கைகள் காட்டுகின்றன. இக்கதை பங்காளிச் சண்டையைத்தான் மையமாகக் கொண்டது என்று ஆய்வாளரில் ஒரு பிரிவினர் குறிப்பிடுகின்றனர். அவர்கள், அண்ணன்மாரும் வேளாளரும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்னும் கருத்துடையவர்கள். ஆனால் வேளாளர் வேறு பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வந்து குடியேறி யவர்கள் என்னும் கருத்துடைய ஆய்வாளர்கள் அண்ணன்மார் கதை கொங்குப் பகுதியின் பூர்வ குடிகளாகிய வேட்டுவருக்கும் வேறு பகுதியில் இருந்து வந்து குடியேறிய வேளாளருக்கும் இடையே நடந்த சண்டைதான் என்று கருதுகின்றனர்.

இரண்டு சாதியைச் சேர்ந்த மக்கள் சில நூற்றாண்டுகளாகத் தம்முள் பகை பாராட்டி வருகின்றனர் என்றால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இட்டுக் கட்டிய ஒரு விஷயம் பகையை உருவாக்கி நிலைப்படுத்திவிட்டது என்பது வெறும் சமாதானம் தான். வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே பெரும்போர் நடந்த தாகவே ‘அண்ணன்மார் சுவாமி கதை’ தெரிவிக்கிறது.

பாமரர் பரிந்து போற்றும் படுகளத் திருவிழா

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருப்பது போலவே மத வழிபாட்டோடும் பிணைந்திருக்கிறது. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது.


நம்பிக்கையே இங்கு நடம் புரிவதனால், அழுகையும், தொழுகையும், விரதமும் வேண்டுதலும், நேர்த்தியும் நிவர்த்தியும் முன்னுரிமை பெறுகின்றது. அந்த வகையில் மலையக இந்திய வம்சாவளி மக்களின் பின் புலத்தை கலைபண்பாட்டு வழிபாட்டுத் தடங்களை கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக பாதுகாத்து வரும் ஒரு பாமர பாட்டாளி சமூகத்தின் நம்பிக்கை எதிர்பார்ப்புகளை, வாழ்வியல் அம்சங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்துக்காட்டும் ஏடறியா இயல்புகளை ஆழமும் அகலமுமாக்குவதிலும் அண்ணன்மார் கதை என்ற பொன்னர் சங்கர் கதை உந்து சக்தியாக விளங்குகிறது. நாடும் நாகரீகமும் பின்னிற்கும் கலைகளில் கூத்து கலை முதன்மை பெறுவதுடன், இந்தியாவே இதன் வேரிடமாக விளங்குகிறது எனலாம். அன்பின் அடையாளமாகக் காமன் கூத்தும், அறத்தின் அடையாளமாக அருச்சுனன் தபசும் இருப்பதுபோல், வீரத்தின் விளை நிலமாக விளங்குவதே பொன்னர் சங்கர் கதையாகும். இந்தக் கலைகள் பெருந்தோட்ட மக்களை பிரகாசிக்க வைத்துள்ளது என்பதிலும் பார்க்க, கோணற்படாத வாழ்வைக் கொண்டு நடாத்தவும், கட்டுக்கோப்புக்குள் கால் பதித்து வாழவும், ஊன் கலந்த உணர்வுகளை இந்திய வம்சாவழி என்ற இன அடையாளத்தை இறுக்கப்படுத்துவதிலும் மைல் கல்லாக விளங்குகிறது.

அறுபதில் அகவை

ஊவா மாகாண பதுளை மாவட்ட கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்வாசனை மாறாத நிலையில் கொண்டாடப்படும் அன்றேல் நடாத்தப்படும் பொன்னர் சங்கர் கதை அறுபதாண்டுகள் வரை நடந்து வைர விழா வாசலுக்கு வந்திருப்பதே ஒரு வரலாறாகும்.

"வருஷா...வருஷம்
வருகுதடி பொன்னர் சங்கர்
கொஸ்லாந்தை மீரிய பெத்தையில்
கூடுதடி கோடி சனம்...."


என்று கூறும் இப்பிரதேச மக்கள் ஆண்டுக்கொரு முறை அடையும் அனுபவமே புதிராகும். தேயிலை தேசத்தின் தியாக இயந்திரங்களான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கு உரமூட்டுவது போலவே, கலையோடு சேர்ந்த கடவுள் வழிபாட்டுக்கும் காத்திரம் படைக்க வல்லவர்கள் என்பதை மீரிய பெத்தை தோட்ட மக்கள் தமது அறுபதாண்டு `படுகள' நிகழ்வால் மெய்ப்பித்துள்ளனரெனலாம்.
வரலாற்றுத் தளம் முந்தியிருந்தாலும், வாழ்க்கைத்தரம் பிந்தியிருக்கக் காணப்படும் மலையகப் பெருந்தோட்ட மக்களிடையே, நம்பிக்கைச் சடங்குகள் இன்றும் இறவாமலே இருந்து வருகின்றன. பாரதத்திலிருந்து வியர்வை சிந்த வெறுங்கையோடு வந்தவர்களென விபரிக்கப்பட்டாலும், வாழ்க்கைச் சுமையோடும், வறுமைச் சுமையோடும் வந்தவர்கள் கூடவே தமது வேராகவும் விழுதாகவும் கலைப் பண்பாட்டு அம்சங்களை பிடி மண்ணாகவே அள்ளி வந்தனர். இவ்வாறு தென்னாட்டிலிருந்து தேடி வந்த தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த பெருங்கதைகளுள் ஒன்றே பொன்னர் சங்கர் கதையாகும். பொன்னி வள நாட்டு மன்னனின் வீரத்தை விதந்துரைக்கும் இக்கதை வேனிற்காலமான மாசி மாத வளர்பிறையில் ஆரம்பமாகி ஒரு மாதம் ஓடிச் சென்று நிறைவுறுகின்றது.

குன்றுடையான் கதை, அண்ணன்மார் சுவாமிகள் கதை என்றெல்லாம் பெயர் பெறும் பொன்னர் சங்கர் கதை ஓர் இன மக்களின் இடப் பெயர்ச்சியையும், அவர்கள் கொங்கு நாட்டிற்கு வந்து ஆதிக்கம் பெற்ற விபரத்தையும் காட்டுகிறது. கொங்கு நாட்டு வேளாளரின் சமூகப் பண்பாடு, அவர்களின் வெள்ளை உள்ளம், உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு என்பவைகளை அண்ணன்மார் கதை விளக்குவதுடன், பாட்டு வடிவிலமைந்த வீரப்பூர் பொன்னர் சங்கர் நூல் விளக்கம் தருகிறது. ஆர்.கருணையம்மாள் என்பவரின் நூலில் மாயலூர் செல்லாண்டியம்மனை மனக்கண்முன் நிறுத்தக் காணலாம். வரிபோட்டு வசூலித்து வரலாறு பாடும் இக்கதையின் உள்ளோட்டங்கள் இவ்வாறு உருண்டு போகக் காண்கிறோம்.

உண்மைக்காய் உயிரிழப்பு

பொன்னுடையான் என்ற குன்னுடையான் கவுண்டருக்கும், தாமரை கவுண்டச்சியாருக்கும் பிறந்தவர்களே பொன்னர். சங்கர் மற்றும் தங்கம், மூவரும் வரத்தால் பிறந்தவர்கள் என்பதோடு, வீரபாகு சாம்பானும் இவர்களுக்கு துணையாக இருந்துள்ளான். மேலும் ஐந்து வயது நிரம்பி விபரம் பெறும் வரை அண்ணன்மார் இருவரையம் காளி தேவியரே வளர்த்தாரெனவும் சுட்டப்படுகிறது. பாம்புக்கு பல்லில் விஷம், பங்காளிக்கு உடம்பெல்லாம் விஷம் என்பதுபோல் வேளாளர்கள் பங்காளிப் பகையை பரம்பரையாக கொண்டவர்கள் என்பர். இதனால் தாயார் தாமரை தான்பட்ட இன்னல்களையும் சபதங்களையும் நினைவுபடுத்தி பொன்னர் சங்கர் இருவரிடமும் கூற, அவர்கள் பங்காளிகளை பலிவாங்கி தாயை மகிழ்விக்கின்றனர். அத்துடன், பெற்றோரின் நிலபுலங்களை மீட்க சோழராஜனின் மேலை நாட்டை கைப்பற்றுவதாகவும் கதை கூறுகிறது. பொன்னரும் சங்கரும் போருக்கு செல்லும் வேளையிலேயே, தாயும் தந்தையும் இறந்து விடுகின்றனர். இவர்களது இறப்பிற்கு பின்னரேயே திருமணம் செய்வதுடன், தாயின் சபதத்துக்காக மனைவியரை சிறையிட்டதாகவும் கதைத் தொடர்கிறது. பொன்னரும் சங்கரும் சோழன் ஆதரவால் வளநாட்டுக்கு உரிமை பெற்ற காவலர்களாக இருக்கின்றனர். நங்காள் எனப்படும் தங்காள் கிளி கேட்க, தங்கைக்காக அவர்கள் அன்னக்கிளி கொண்டு வர வீரமலை காட்டுக்கு போவதை,"நாகமலை தோகை மலை


நாலுபக்க வீரமலை

வீரமலை நடுவினிலே.... எனத் தொடரும் பாடல்கள் புலப்படுத்துவதுடன், காட்டில் சங்கர் அறுபதடி வேங்கையை வெட்டுகிறார். இதனால் தலையூர் காளி கோபமுற்று கூத்தாளை நாட்டைத் தாக்கி குப்பாயியை சிறையெடுத்துப் போகிறாள். பொன்னரும் சங்கரும் குப்பாயியை மீட்க தற்கொலை செய்து கொள்கிறார்கள். பொன்னரும் சங்கரும் சாம்பானும் வேடுபடையோடு மோதி இறக்கின்றனர். அரண்மனையில் தனியாய் வசித்தத் தங்காள் அன்னியர்களை அழைக்க, அவர்கள் மறுத்து பட்டணம் போய் விடுகின்றனர். அரண்மனையில் தனியாக தங்காள் ஒப்பாரி வைத்து அழுகிறாள். உயிர் பிச்சை கேட்டு புலம்பும் அவள் படுகளம் போய் புலம்புகிறாள். பொன்னர் சங்கர் இறந்ததே படுகளம் எனப்படுகிறது. அதன் பின் தண்ணீர் எடுத்தெளித்து பிரம்பால் தட்டுமாறு கூற, தங்காள் அவ்வாறே செய்ய இறந்தவர்கள் உயிர்பெற்று அமரராகின்றனர். இதனால் தான் `கொங்குமலிந்தால் எங்குமலியும்' என்ற பழமொழி கொண்ட அந்த நாட்டின் முழுதும் பரவியுள்ள கதைப்பாடல் வரிகளில்,

" ஒக்கப் பிறக்கணுமா - அண்ணா
ஒரு முலைப் பால் உண்கணுமா
கூடப் பிறக்கணுமா? அண்ணா
கூட்டுப்பால் உண்கணுமா


என்ற சகோதரப் புலம்பல் தொடர்வதை காண்கிறோம். இதன் அடியொட்டிய அத்தனை விடயங்களும் இன்றும் மீரியபெத்தை படுகளத்தில் மறுவடிவமாக்கப்படுகிறது.

நேர்த்தியும் நிவர்த்தியும்

மீரியபெத்தை ஆலயத்தை நம்பி நாட்டின் நாலாபுறமிருந்தும் வரும் அடியார்கள் பல வேண்டுதல்களை வேள்விகளாக வைக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்கள் குடிக்கு அடிமையானவர்கள், குழப்பம் இழைப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தும் பலரின் முகத்திரையை கிழிப்பதில் கொஸ்லாந்தை மீரியபெத்தை தோட்ட மக்கள் பலே கெட்டிக்காரர்கள். பெரியகாண்டி அம்மன் பேரில் (தங்காள்) பெருவிழாவும் கதை படிப்பும் ஆரம்பமானதும் மது, மாமிசம் மறைந்து விடுகிறது. அந்திபட்டதும் அண்ணன்மார் கதை கேட்கவேண்டுமென்ற ஆவலில் பெரியோர் முதல் சிறியோர் வரை அமைதியாக ஆலயத்தில் கூடுகின்றனர். வருத்தம் வந்தால் கூட வைத்தியத்தை விட ஆலயத்தின் விபூதி, தீர்த்தத்தை விரும்பிப் பெறுகின்றனர். எவரேனும் ஒரு பொருளை தவறவிட்டால் கூட அதை கோவில் பூசகர் மூலம் மீட்டுக்கொடுக்கும் நல்ல பண்பும் பக்தியும் காணப்படுகின்றதென்றால், மக்களை காக்கும் மகாமுனி என்ற தெய்வத்தின் மீது அவர்கள் கொண்ட தீராத பற்றே அதற்கு காரணமாகும். படுகளம் வந்த பலர் விட்டுச் சென்றுள்ள விலாசங்கள் தேசமுழுவதுக்கும் இத்திருவிழா தெரிந்துள்ளதை மெய்ப்பிக்கிறது என உணரலாம்.

ஆற்றங்கரையோரம் அமைதியான சூழல், ஆயிரமாயிரமாய் அணி திரண்டாலும் அன்னதான ஆகார வசதிகள், ஏழை செல்வந்தன் என்று பேதமின்றி வந்து வழிபடும் இவ்வாலயத்தில் படுகளத் திருவிழாவை ஆரம்பித்து வைத்த பெருமை கருப்பண்ணபிள்ளை நல்லுசாமி கவுண்டரையே சாரும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் அண்ணமார் சாமி, கன்னிமாரம்மன் என்றழைக்கப்படும் பெரியகாண்டியம்மன், பொன்னர், சங்கர், தங்காள், மத்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ண சாமி, ஆகிய கோவில்கள் உள்ளது.

“தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் அண்ணமார் சாமி கோவில் நிறைய உள்ளது. குல தெய்வமாகவும் அண்ணமார் சாமி உள்ளது.”


தமிழ்கத்தின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் வீரப்பூர் வந்து பொங்கல் வைத்து பூஜை செய்து வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் தினமும் வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

ஆண்டுதோறும் மாசி மாதம் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப்பெருந்திருவிழா நடைபெறும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் பல லட்சம் மக்கள் வந்து மாசிப்பெருந்திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

மாசிப் பெருந்திரு விழாவின் முன்னோட்டமாக ஆண்டின் தொடக்க முதல் திருவிழாவாக ஆண்டுதோறும் ஆயுதபூஜை அடுத்த நாளான விஜயதசமி அன்று மகாநோன்புத்திருவிழா மாசிப்பெருந்திருவிழா வேடபரி போன்றே சிறப்பக நடைபெறும். மகாநோன்பு திருவிழா ஆயுதபூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று நடைபெறுகின்றது. வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் இரவு முழுவதும் தனித் தனியாக சிறப்பு வழிபாடு நடத்துவார்கள் நான்கு கால பூஜை நடைபெறும்.

விஜயதசமி அன்று மாலை 5 மணிக்கு பெரியகாண்டியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கம்பீரமாக பொன்னர் அம்பு ஏந்தியபடி அமர்ந்திருக்க குதிரை பூசாரி மாரியம்மன் குதிரை வாகனத்தில் பொன்னருடன் வர இளைஞர்கள் கூட்டம் சுமந்து செல்வார்கள் யானை வாகனத்தில் பெரியகண்டியம்மன் அமர்ந்து வர பெரியபூசாரி முத்து யானை வாகனத்தில் பெரியக்காண்டியம்மனுடன் யானை வாகனம் வரும் வீ.பூசாரிபட்டி கிராமத்தில் ஒரு பகுதியில் வீரமலை சோம்பாசி பொடிமட்டை முனியப்பன், கொட்டு தங்கவேல், ஆகியோர் தோட்டங்களின் அருகில் உள்ள இடத்தில் வாழைமரத்தில் குதிரை வாகனத்தில் வரும் பொன்னர் அம்புஎய்யும் வேடபரி நிகழ்ச்சி நடைபெறும்.

மகா நோன்பு விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பட்டையதாரர்கள் கிராம மக்கள் நல்லாம் பிள்ளை ஊராட்சியின் சார்பிலும் செய்து வருகின்றனர்

Tuesday, February 8, 2011

ஒழுக்கமே உயரிய கல்வி






இந்த தலைப்புல ஒரு கட்டுரை படிக்க ஆரம்பிக்கும் நண்பர்களே.. இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள கல்வி அல்ல. ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஒழுக்கத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கல்வியை புகட்டுகிறார்கள். எங்கே? கோவையில். நான் படித்த ஜி.டி.நாயுடு சாரிடீஸில்தான். நம்ம ஊரில் இருந்து சில பேர் எனக்கு முன்னரே அங்கு படித்த அனுபவம் கொண்டவர்கள்தான்.

நான் 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் அங்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி அடைந்து படிக்க சேர்ந்தேன். என்னுடம் 300க்கும் அதிகமான பேர் தேர்வு எழுதி 75 பேர் மட்டும் தேர்வானார்கள். அப்படி என்றால் தேர்வு எவ்வளவு கடினம் என யோசித்துக்கொள்ளுங்கள்.

பயிற்சியில் சேருவதற்கு முன்பு அவர்கள் நம்மிடம் ஒரு லிஸ்ட் கொடுத்து விடுவார்கள். அதில் என்ன என்ன எடுத்து வரவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுவார்கள். கேமரா, ரேடியோ, படிப்பிற்கு அவசியமில்லாத எந்த ஒரு புத்தகமும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. உள்ளே போய்விட்டால் மிலிட்டரி வாழ்க்கைதான்.

சரியாக 3 மாதம் அங்குதான் தங்கி இருக்க வேண்டும். காலை 6 மணிக்கு மணி அடிக்கும். அதை மீறி தூங்க முடியாது. எழுந்து காலைக்கடன் முடித்து குளித்து முடித்து காத்திருக்க வேண்டும். பிறகு காலை சிற்றுண்டிக்கு ஒரு மணி அடிக்கும். எல்லோரும் தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று உணவு வாங்கி இருக்கையில் அமர்ந்து உண்ண வேண்டும். தட்டு கழுவும் இடத்தில் வார்டன் நிற்பார். சாப்பிடக்கூடிய உணவுகள் எதுவும் வேஸ்ட் செய்தால் அடுத்த வேளை உணவு கட் கறிவேப்பிலை, மிளகாய் மட்டுமே குப்பையில் கொட்ட அனுமதி. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம். உணவும் தரமானதாகவே இருக்கும்.

அதற்கு பிறகு வரிசையில் நின்று மணி அடித்ததும் பயிற்சிக்கு செல்லவேண்டும். மதியம் வரை தியரி கிளாஸ். மதிய உணவிற்கு பிறகு பிராக்டிகல் கிளாஸ். இங்கு ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிஸ் என இரு படிப்புகள் இருக்கிறது. நான் ஆட்டோமொபைல்தான் படித்தேன். இரு பேட்ச் மாணவர்களும் சந்தித்துக்கொள்ள முடியாது. ஆனால் ஒரே ஹாஸ்டல்தான். ஒவ்வொரு ரூமிற்கும் 8 பேர்கள் தங்கலாம். ஒரு அறையில் இருக்கும் 8 பேரும் வெவ்வேறு வாழ்க்கை முறை கொண்டவர்களாக இருக்கும்படி பிரித்திருப்பார்கள். என் ரூமில் நான், ஒரு மலையாளி, டெல்லி சிங் ஒருவன், கோவைக்காரன் ஒருவன், சேலத்துக்காரன் ஒருவன் என கலவைதான். இதே மாதிரிதான் எல்லா அறையிலும்.

அனாவசியமாக சிரித்துகூட பேச முடியாது. வெளியில் இருந்து வரும் எவரையும் பார்க்க அனுமதி இல்லை. உடல் நிலை சரியில்லை எனினும் மருத்துவர் நம்மை தேடி வருவாரே ஒழிய மருத்துவமனைக்கு நாம் செல்ல மாட்டோம். தபால் எல்லாம் அறைக்கு தணிக்கைக்குபின்பே வரும். ஞாயிறு மட்டும் மதியம் 3 மணி முதல் 6 மணிவரை வெளியில் சேல்ல அனுமதி உண்டு. அதிலும் முடிவெட்ட, போன் பேச என சரியாகவே இருக்கும். இந்த 3 மாதங்களில் வெளி உலகில் என்ன நடக்கிறது என்பது சுத்தமாக நமக்கு தெரியாது. செய்திகள் கிடையாது, லீவ் கிடையாது. டிவி கிடையாது. பாட்டு, சினிமா கிடையாது. பத்திரிக்கைகள் கிடையாது. நினைத்த பொழுது நொறுக்கு தீனிகள் கிடையாது. எங்கும் ஒழுக்கம். எதிலும் ஒழுக்கம். டாய்லட் போனபின்பு சரியாக தண்ணீர் ஊற்றவில்லை எனில் அனைத்து கழிவறையையும் நாம்தான் சுத்தம் செய்யவேண்டும். பாட நேரத்தில் நமக்கு சம்பந்தல் இல்லாத இடத்தில் நாம் இருந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்.

15 பேர் கொண்டது ஒரு குழு. குழுவிற்கு ஒரு தலைவன். அவன் தரும் கட்டளைகளை பிடிக்கிறதோ இல்லையோ கடைபிடிக்க வேண்டும். தலைவனும் நினைத்த மாதிரி கட்டளை இட முடியாது. எல்லா இடத்திலும் ஒரு செக்பாயிண்ட் இருக்கும். அடித்து சொல்வேன் அங்கு போன்று எங்குமே ஒழுக்கமாக நல்ல கல்வியை கற்க முடியாது. இங்கு 3 மாதங்கள் முழுமையாக தங்கி படிக்கும் ஒரு நபர் உலகின் எந்த சூழலிலும் பணிபுரிய தகுதி உடையவர் ஆவது நிச்சயம். கண்டிப்பாக கட்டளைக்கு கீழ்படியும் குணம் வந்து விடும். தியரி, பிராக்டிகல், விசுவல் கிளாஸ், மாணவர்களே கிளாஸ் எடுத்தல் என அனைத்திலும் ஒழுக்கம் நிறைந்து இருக்கும். முழுமையான தரமான கல்வியை மிகக்குறைந்த கட்டணத்தில் படிக்கலாம். கிட்டத்தட்ட ஜெயில் வாழ்க்கைதான். விளையாட்டு மற்றும் கேளிக்கைகளுக்கு இடமே கிடையாது. ரெக்கார்ட் நோட் எழுதியே கைவிரல் தேயும். இங்கு 3ம் வகுப்பில் பாஸ் ஆனாலே பெரிய புத்திசாலி என கொள்ளலாம். 75 பேர்களில் 20 பேர் 3ம் வகுப்பிலும் 5 பேர் 2ம் வகுப்பிலும் 2 பேர் முதல் வகுப்பிலும் தேறுவர். நான் இரண்டாம் வகுப்பில் தேறி அங்கேயே பணிபுரியும் வாய்ப்பினையும் பெற்றேன். 8 மாதம் வரை அங்கு பணிபுரிந்தேன்.

வருடத்திற்கு 3 பேட்ச் வீதம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்வியை அளித்து வருகிறார்கள். வீட்டிற்கு அடங்காத பிள்ளைகள் கூட ஒழுக்க சீலர்களாவது கண்கூடான ஒன்று. டிவிஎஸ், பஜாஜ், ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்கள் இங்கு வந்து கேம்பஸ் மூலம் ஆட்களை தேர்வு செய்கிறார்கள் எனில் கல்வியின் தரத்தினை எண்ணிபபாருங்கள்!