Thursday, October 24, 2013

சாந்தி முகூர்த்தம் – சிறிய விளக்கம்




சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னிடம் ஒரு குழப்பமான கேள்வியை கேட்டார். யாதெனில், முதன் முதலில் கணவன் மனைவி சேர்வதற்கு சாந்தி முகூர்த்தம் என்றொரு முகூர்த்தம் தேவையா என்ன என்பது. சிலர் இதற்கு முக்கியத்துவம் அளிக்க சிலர் அளிப்பது இல்லையே! இதன் பின் விளைவுகள் என்ன? மிக நல்ல கேள்வி. இதற்கு பதிலை அவருக்கு அளித்துவிட்டேன் எனினும் நிறைய மக்களுக்கு இதன் பொருட்டு சந்தேகங்கள் இருப்பின் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

முதலில் சாந்தி முகூர்த்த விளக்கத்தினை பார்ப்போம். கணவனும் மனைவியும் கைப்பிடிக்க மணம் முடிக்க ஒரு முகூர்த்தமும் கலவிக்கு ஒரு முகூர்த்தமும் என இரு முகூர்த்தங்கள் இருக்கின்றன. இந்த இரு விசயத்திற்கு தான் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதால் அதை முகூர்த்த நேரத்தில் செய்யவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு முகூர்த்தம் என்பது 1½ மணி நேரம் (3¾ நாழிகை) என்பது கணக்கு. ஒரு வருடத்திற்கு சுத்தமான முகூர்த்தம் என்பது ஒரு சில மட்டுமே கிடைக்கிறது. அந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்தால் சிறப்பு. ஆனால் அந்த முகூர்த்தத்திற்காக காத்திருத்தல் என்பது இன்றைய சூழ் நிலையில் ஒவ்வாத விசயம். சில நேரங்களில் அந்த நேரம் சில நாட்களில் அந்தி நேரம் ஏன் பகலில் கூட வந்து விடும். சுத்தமான முகூர்த்தம் என்றால் மாந்தி நிற்காத (பார்க்காத) நல்ல ஓரை, கரணம், முக்குண வேளை, நட்சத்திர தியாச்சியம், வேதை, சுப விலக்கு, கரி நாள், யோகம், சூலம், யோகினி நிற்கும் திசை, ஜீவன், வக்கிர நிலைகள், பிறை அம்சங்கள், கோள் சாரம், விஷ கடிகை, தோஷங்கள், வாசி, பஞ்ச பட்சி, சகுனங்கள், சூனியங்கள், மாதவிலக்கு கணக்குகள், தசாபுத்தி மற்றும் ஆண் மற்றும் பெண்ணின் ராசிகள் போன்றவற்றை கணித்து தீயவைகளை ஒதுக்கி நல்ல முகூர்த்தம் கண்டு இந்த நேரத்தின் முக்கியத்துவத்தினை மணமக்களுக்கு முன்பே எடுத்து சொல்லி தயார் நிலைக்கு கொண்டு வரவேண்டும். FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION என்னும் ஆங்கில பழமொழியை இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டும். ஆரம்பம் சரியான நேரம் எனில் அடுத்து எல்லாமே சுபமே. மிக நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை மிக நன்றாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அகால சேர்க்கையில் உண்டாகும் பலன்களை சொல்ல ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக எழுத வேண்டி வரும். இதன் விளைவாக வரும் குழந்தைகள் தானும் சிரமப்பட்டு சமுதாயத்தினையும் சிரமப்படுத்தும். துரதிர்ஷ்டம் யாதெனில் இப்பொழுது எல்லாம் திருமணத்திற்கு நாள் குறிக்க தேர்ந்த குருக்கள் அல்லது ஜோதிடரிடம் செல்லாமல் காலண்டரை பார்த்து அவர்களே நாள் குறித்து கொள்கின்றனர். அப்புறம் திருமண மண்டப தேவைக்காகவும் நாட்கள் குறிக்கப்படுகின்றன. மேலும் திருமண இரவில் நல்ல நேரம் கூட பார்க்காமல் சாந்தி முகூர்த்த ஏற்பாட்டை நடத்தி விடுகின்றனர். இதனால் பிறக்கும் குழந்தையின் குணம், ஆரோக்கியம் என பல முக்கிய இடங்களில் குறைகள் ஏற்படலாம். பிறப்பு சரியாக இருந்தால் வளர்ப்பு எளிதாகும். இல்லை எனில் இதற்காக நிறைய மெனக்கெடவேண்டும். நம் கடமையை சரியாக செய்து விட்டால் பலன் சரியாகவே இருக்கும். பலருக்கு இயல்பாகவே நல்ல நேரத்தில் முகூர்த்தம் அமைந்து விடுகிறது. அவர்கள் அதை கணித்து தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் நல்ல நேரம் நல்ல நேரமே.

காதலித்து மணம் முடிப்பவர்களின் விசயத்தில் பார்த்தோமேயானால், அவர்களில் உடலில் இருந்து வரும் அலைக்கற்றைகள் (wave length & vibration) ஒன்றையொன்று ஈர்த்தே இருக்கும். அதனால்தான் அவர்களுக்குள் காதல் ஈர்ப்பே வருகிறது. எனவே கந்தர்வ விவாக கூடல்களில் கால நேரங்கள் அனிச்சையாகிறது. அனால் நாடக காதல்களில் முடிவு நன்றாக இருப்பதில்லை.  நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இவைகளையும் முன்கூட்டியே கணக்கிட்டு நிச்சயத்துவிட வேண்டும். மேற்கூறிய உடல் அலைகள் சேர்வதற்காக நிறைய சடங்குகளை பெரியவர்கள் விளையாட்டுக்கள் வாயிலாக நமக்கு அளித்திருக்கிறார்கள். குறைந்தது 7 நாட்களுக்கு முன்பிருந்தே மணமக்களுக்கு நல்ல உணவுகளை அளிக்க வேண்டும். அதனால் திசு உற்பத்தி நன்றாக இருக்கும். எளிதில் சீரணம் ஆகும் நல்ல சத்து நிறைந்த உணவுகளாக இவை இருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமணம் வரை உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. சாந்தி முகூர்த்த நேரமாக குறிப்பிட்டு தரும் முகூர்த்த வேளையில் உணவு ஏதும் அருந்தக்கூடாது. அதற்கு முன்போ பின்போ சாப்பிட தடை இல்லை. கலவி நேரத்தில் பேசவும் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. இல்லை எனில் பிறக்கும் குழந்தையின் பேச்சுத்திறன் மற்றும் வாதத்திறனில் குறை இருக்கும்.

சாந்தி முகூர்த்த மனம் மற்றும் உடல் ஒற்றுமைகளை பொருத்தம் பார்க்கும் சமயமே (வேதை பொருத்தம்) கண்டுகொள்ள முடியும். தேர்ந்த ஜோதிடர் இதை எளிதில் கண்டு விடுவார். பொருத்தம் பார்க்கும் சமயத்தில் சில பொருத்தங்கள் இல்லை எனில் அதமம் என ஒதுக்கிவிடுவர். அதில் ரச்சு மற்றும் வேதை முக்கியம்.

அதே போல சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணிக் கணக்கிட்டு எத்தனை எண் வருகிறதோ அதே எண் அளவு பூராட நட்சத்திரத்தில் இருந்து எந்த நட்சத்திரத்தில் முடிகிறதோ அதே எண் தான் லாடம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது வாழ் நாள் முழுவது விலக்க வேண்டிய நட்சத்திரம் ஆகும். எளிதில் விளங்க, ஒருவனின் ஜாதகத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கணக்கிட்டால் பூச நட்சத்திரத்தில் இருந்து 12வது நட்சத்திரமாக மூலம் வரும். அதன் பிறகு பூராட நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் 12வது  நட்சத்திரமாக ரோஹிணி வரும். இந்த நட்சத்திரமே அந்த ஜாதகருக்கு லாடம் ஆகும். இந்த நட்சத்திர தினத்தை எப்பொழுது நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இது பின் வரும் கணவன் மனைவி சேர்க்கைக்கும் பொருந்தும். அவரவர்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலையை பாதசார நிலையில் காண  முடியும். குழப்பம் இருப்பவர்கள் தேர்ந்த ஜோதிடரிடம் தெரிந்து கொள்ளவேண்டும்.

வேதனை என்னவெனில் மக்கள் தாங்கள் ஏற்கன்வே எடுத்துவிட்ட முடிவை ஜோதிடரின் வாயில் இருந்து வரவழைக்க நினைப்பதுதான். ஒரு விசயத்தினை செய்யக்கூடாது என சொன்னால் மக்கள் விடுவதில்லை. அப்படி செய்தால் என்ன விளையும் எனவும் அதற்கு பரிகாரங்கள் என்ன என்றும் ஜோதிடர்களை குடையக்கூடாது. அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை மனதில் கொள்ளவேண்டும். பணம் (தட்சனை) பெறுவதால் அவர் நமக்கு ஊழியர் அல்லர். தட்சனை என்பது அவரின் வாழ்க்கையை நடத்தத்தானே அன்றி உங்களின் கருத்துக்களை திணிக்க அல்ல. வேண்டாம் என்று சொல்லப்பட்டு விட்டால் விட்டுவிட வேண்டும். மாற்று வழிகளையே சிந்திக்க வேண்டும். காலண்டரில் நாட்களை கண்டு குறித்துக்கொண்டு பின் மண்டபத்திற்கு முன் தொகையும் அளித்துவிட்டு பிறகு ஜோதிடரிடம் வருவது தவறாகும். ஜோதிடரிடம் மணமக்களுக்கு பொருத்தமான நாட்களை கணித்து பெற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு மற்ற பணிகளை தொடங்குவதே சரி. திருமணத்தை அதற்குரிய முகூர்த்த நேரத்தில் தான் செய்யவேண்டும். பிரம்ம முகூர்த்தம் கூட சரி கிடையாது. மற்ற எந்த ஒரு வேலைக்காகவும் / நபருக்காகவும் முகூர்த்த நேரத்தினை மாற்றக்கூடாது. எந்த ஒரு மங்கல வேலையையும் ஆரம்பிக்கும் முன்பு கணபதியையும், குல தெய்வத்தினையும் மனதில் நன்றாக வணங்கிக்கொள்ள வேண்டும்.

அமாவாசையின் கடைசி நேரத்தில் பிரதமையின் முதல் பகுதியில் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தில் விஷக்கடிகை வருமானால் அதை குருதோஷம் என சாஸ்திரம் கூறுகிறது, இதுவும் சாந்தி முகூர்த்தத்தில் தவிர்க்கவேண்டியதாகும். சூரியோதய முகூர்த்த வேளை 1½ மணி நேரம் பிராதகால முகூர்த்தம். மதியம் வருகிற முகூர்த்தம் அவிச்சின் முகூர்த்தம். ஆனால் அஸ்தமனத்தில் வரும் முகூர்த்தம் கோதாளி முகூர்த்தம் என குறிப்பிடப்படுகிறது. இந்த முகூர்த்தம் நல்ல முகூர்த்தம் கிடையாது. கோதாளி முகூர்த்தம் வரும் நாட்களிலும் சாந்தி முகூர்த்தம் விலக்க வேண்டும். அதே போல நாட்களில் சனி மற்றும் செவ்வாய்கிழமைகளை அசுப நாட்கள் என கொண்டு விலக்கி விடவேண்டும். கிழக்கு மேற்காக படுக்கலாம். தெற்கு இரண்டாம் பட்சமே. வடக்கு திசையில் தலைவைத்து படுக்கலாகாது. சாந்தி முகூர்த்தம் முடிந்த, விடியும் நேரத்தில் அமங்கலிகளை பார்க்கலாகாது. மணமக்களின் பெற்றோர்களை விட அத்தை மற்றும் அக்காமார்களே நலங்குகளை கவனிக்கவேண்டும். அதே போல தலை ஆடி மாதம் மணமக்கள் விலகி இருக்கவேண்டும்.

இன்னும் நிறைய விசயங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட முக்கிய விளக்கங்களை மட்டுமே அளித்திருக்கிறேன். எனவே முகூர்த்தம் குறிப்பதை விளையாட்டாக எண்ணாமல் வேதம், ஜோதிடம் பயின்றவர்களின் துணைகொண்டே நிர்ணயிக்கவேண்டும். நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நன்மையையே விளைவிக்கும்.

ஆசிகள்.


Friday, October 11, 2013

கிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்

உலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகையான வார்த்தை இல்லை என நினைக்கிறேன். இன்று இத்தனை பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் எனில் பார்க்க வைத்தவர் சச்சின்.

24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் சச்சின் எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராகவும் சதங்களை சாதாரணமாக விளாசியவர். உலகையே ஆட்டத்தில் மிரட்டியவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்றால் அவர்களை ஆட்டத்தில் மிரட்டியவர் சச்சின். இவரின் சம காலத்தில் அறிமுகமான இன்சமாம் உல் ஹக் மற்றும் பிரயன் லாரா ஆகியோர் போன்ற ஜாம்பவான் வீரர்களைக்கூட பின்னுக்கு தள்ளி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். குள்ளமான உருவம், மெலிந்த குரல் எனினும் வலுவான ஆக்ரோஷமான ஆட்டத்தில் தனது முத்திரையை பதித்தார். இவர் மைதானத்தில் இருக்கும் வரை வெற்றி என்பதை எதிர் அணியினர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இதை எல்லா அணித்தலைவர்களும் ஒப்புக்கொள்ளவே செய்தார்கள். பந்து வீச்சிலும் சிறந்தவர். சச்சின் சாதனைகளை டைப் செய்ய ஆரம்பித்தால் கையே வலி கண்டுவிடும். இவரின் சாதனைகளை ஒருவர் சமன் செய்யவேண்டும் எனில் அவர் 16 வயதில் ஆட வந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட வேண்டும். இது நடைமுறையில் சாத்யமில்லை.


பூஜ்ஜியத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து ராஜ்ஜியத்தையே வென்றார் சச்சின். எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வேதனைகள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிக்கொடி நாட்டியவர். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து மறுபடியும் அதே தெம்புடன் களம் கண்டார். இவரின் பயிற்சியாளர் ஆச்ரேகர் ஒரு பழக்கம் வைத்துள்ளார். என்னவெனில் வலை பயிற்சியில் ஒரு நாள் முழுவது யார் ஒருவர் அவுட் ஆகாமல் விளையாடுகிறாரோ அவருக்கு ஒரு ரூபாய் நாணயத்தினை வழங்குவார். அவரிடம் அதிகபட்சமாக (13) நாணயங்களை பரிசாக பெற்ற ஒரே சிஷ்யர் சச்சின். 

ரஞ்சி, இரானி மற்றும் துலிப் ட்ராபிகளின் அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து கணக்கினை தொடங்கிய ஒரே வீரரும் இவரே. டில்லியில் உள்ள பிரபல திகார் ஜெயிலில் ஒரு வார்டிற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், ராஜீவ் கேல் ரத்னா விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான படையில் கவுரவ பதவி, ராஜ்யசபையில் எம்.பி. பதவி போன்ற கவுரவ பதவிகளும் பெற்றவர். ஆஸ்திரேலியா அணியில் மட்டும் விளையாடும் வீரர்களில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ”ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா” விருது பெற்ற வெளி நாட்டு வீரர் இவர் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் மற்றும் 96 அரை சதம் என மொத்தம் 18426 ரன்களை குவித்த இயந்திர மனிதன் சச்சின். விளம்பர வருவாயை நீண்ட ஆண்டுகளாக அதிகம் பெற்ற இந்திய வீரரும் இவரே. ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு டாக்டர். மகன் அர்ஜுனும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக தயாராகி வருகிறார். சாரா என்ற மகளும் உண்டு. 


இந்திய அணிக்காக விளையாடப்போகும் கடைசி ஆட்டமாக இவரது 200 வது டெஸ்ட் அமைய உள்ளது. ஒய்விற்கு பிறகு இந்திய அணியில் ஆலோசனையாளராக வந்து அடுத்த தலைமுறைக்கு இவரது அனுபவத்தினை அளிக்க வேண்டும் என்பது அனைவரது ஆவல்.

உலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல. முற்றிலும் உண்மையே.

Friday, October 4, 2013

படித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்

படித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்
1.நீ தான் என் முதல் காதலி..!
2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!
3.காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!
4.ஐ மிஸ் யூ..!
5.பரவாயில்லை விடுங்க ..!
6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...!
7.நான் சாதி பார்பதில்லை ..!
8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!
9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!
10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...!
11.காவல்துறை உங்கள் நண்பன்
12.நான் தான் classலயே first
13.சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....
14.இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்
15.இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம்
16.சாமி கண்ண குத்திரும்
17."ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா"-
" சில்ர இல்லப்பா "
18.நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை
19.ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்
20.பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.