Wednesday, December 25, 2013

வலையில் இதன் வயது 6

இந்த வலைப்பூ தனது 6வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த தளத்தினை பார்த்து செல்லும், பின்னூட்டம் இடும், மின்னஞ்சல் அனுப்பும், நேரிலும் தொலைபேசியிலும் கருத்துக்களை பகிரும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றிகள் பல. இது 235வது பதிவு என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... எல்லாம் வல்ல இறைவன் அனைத்து நலன்களையும் அருள்வாராக!!!

Monday, December 9, 2013

படித்ததில் பிடித்தது - முடியல

மறுபடியும் முதல்ல இருந்தா!!??

அ - அம்மா
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ - இன்னும் கரண்ட் வரலை
ஈ - ஈ.பி.ய மூடிட்டு போய்டுங்க
உ - உங்களை நம்பி அரிசியை
ஊ - ஊறப்போட்டு வச்சிருக்கோம்
எ - எத்தனை மணிக்கு மாவாட்டி...இட்லி தின்னு
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ.....முடியலை
ஒ - ஒரு இன்வெர்ட்டராவது
ஓ - ஓசியில் தாங்க
ஒள - அவ்வ்வ்வ்வ்வ்............

Sunday, November 24, 2013

சினிமா விமர்சனம் – இரண்டாம் உலகம்

திரைப்பட விமர்சனங்களை எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த படம் என்னை எழுத வைத்துவிட்டது. எந்திரன் என்னும் ஒரு படம் வந்தது. உலகம் முழுவதும் ரிலீஸ். ஆனால் கரூரில் உள் நாட்டு அரசியலால் ரிலீஸ் ஆகவில்லை. ஆம். ஆகவில்லை. 15 நாட்கள் கழித்து கரூரில் யாருமே சென்று பார்த்திராத ஒரு டப்பா தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள். அப்படி இருந்தும் அந்த படத்திற்கு டிக்கெட் வாங்க சென்ற பொழுது காலையில் போனால் இரவு காட்சிக்குதான் டிக்கெட் கிடைத்தது. டிக்கெட் கிடைத்துவிட்டாலும் தியேட்டர் எப்படா திறக்கும் என காத்திருந்து காட்சிகள் நிரம்பின. இத்தனைக்கும் இந்த படம் கரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய ஊரில் ரிலீசாகி பாதிபேர் அங்கு சென்று பார்த்துவிட்டிருந்தனர்.

இந்த முன்னுரையின் தொடர்ச்சியாக நேற்று இரண்டம் உலகம் என்னும் காதல் காவிய படத்திற்கு நாங்களும் எங்கள் நண்பர்களும் குடும்பத்துடன் சென்றிருந்தோம். அரை மணி நேரம் படம் ஓடியும் சற்றும் புரியாததால் தூக்கம் கண்ணை கட்ட படம் பார்க்க வேண்டாம் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானோம். கதவை பூட்டி இருந்தார்கள். திறக்க சொல்லி கேட்ட போது தியேட்ட ஊழியர் சொன்னது குபீரென்றது. உங்களுக்காக திறந்தால் எல்லோரும் வெளியே போய்விடும் வாய்ப்பிருப்பதால் இடைவேளை வரை திறக்க இயலாது என சொல்லிவிட்டார். முதல் நாள் காட்சியில் இப்படி பாதியிலேயே முக்கால்வாசி பேர் போய்விட்டதாக அவர் சொன்னபோது அந்த பட தயாரிப்பாளரின் நிலையையும் எங்கள் நிலையையும் நொந்துகொண்டு மீண்டும் படத்தினை பல்லை கடித்துக்கொண்டு பார்த்து தொலைத்தோம். கொடுமை என்னவெனில் இடைவேளையிலும் வெளியே விட முடியாது என சொல்லிவிட்டனர். இப்படி கண்ட படம் எடுத்து நொந்த தயாரிப்பாளர்களை ஒவ்வொரு முறையும் அஜீத்தா வந்து காப்பாற்ற முடியும்?


மக்களே! உஷார். பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளுக்கு வேண்டுமானல் ஒருவேளை பிடிக்கலாம். 

Saturday, November 9, 2013

படித்ததில் சிரித்தது - மிருக வைத்தியம்

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்துமருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள். என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன். ‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய்மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரிலபக் லபக்னு ரெண்டு வாய்தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும்வராததுமா,நாள்பூராவும்வலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரிராத்திரி சாப்பாட்டைசரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சஅதேமாதிரி கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை
மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!

என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,

மனைவி சொன்னள்`கோட்டான் மாதிரிமுழிக்காதீங்க'.


Friday, November 1, 2013

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அனைத்து நண்பர்களுக்கும் 
தீபாவளி திருநாள் 
நல்வாழ்த்துக்கள் !!!

Thursday, October 24, 2013

சாந்தி முகூர்த்தம் – சிறிய விளக்கம்




சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னிடம் ஒரு குழப்பமான கேள்வியை கேட்டார். யாதெனில், முதன் முதலில் கணவன் மனைவி சேர்வதற்கு சாந்தி முகூர்த்தம் என்றொரு முகூர்த்தம் தேவையா என்ன என்பது. சிலர் இதற்கு முக்கியத்துவம் அளிக்க சிலர் அளிப்பது இல்லையே! இதன் பின் விளைவுகள் என்ன? மிக நல்ல கேள்வி. இதற்கு பதிலை அவருக்கு அளித்துவிட்டேன் எனினும் நிறைய மக்களுக்கு இதன் பொருட்டு சந்தேகங்கள் இருப்பின் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

முதலில் சாந்தி முகூர்த்த விளக்கத்தினை பார்ப்போம். கணவனும் மனைவியும் கைப்பிடிக்க மணம் முடிக்க ஒரு முகூர்த்தமும் கலவிக்கு ஒரு முகூர்த்தமும் என இரு முகூர்த்தங்கள் இருக்கின்றன. இந்த இரு விசயத்திற்கு தான் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதால் அதை முகூர்த்த நேரத்தில் செய்யவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு முகூர்த்தம் என்பது 1½ மணி நேரம் (3¾ நாழிகை) என்பது கணக்கு. ஒரு வருடத்திற்கு சுத்தமான முகூர்த்தம் என்பது ஒரு சில மட்டுமே கிடைக்கிறது. அந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்தால் சிறப்பு. ஆனால் அந்த முகூர்த்தத்திற்காக காத்திருத்தல் என்பது இன்றைய சூழ் நிலையில் ஒவ்வாத விசயம். சில நேரங்களில் அந்த நேரம் சில நாட்களில் அந்தி நேரம் ஏன் பகலில் கூட வந்து விடும். சுத்தமான முகூர்த்தம் என்றால் மாந்தி நிற்காத (பார்க்காத) நல்ல ஓரை, கரணம், முக்குண வேளை, நட்சத்திர தியாச்சியம், வேதை, சுப விலக்கு, கரி நாள், யோகம், சூலம், யோகினி நிற்கும் திசை, ஜீவன், வக்கிர நிலைகள், பிறை அம்சங்கள், கோள் சாரம், விஷ கடிகை, தோஷங்கள், வாசி, பஞ்ச பட்சி, சகுனங்கள், சூனியங்கள், மாதவிலக்கு கணக்குகள், தசாபுத்தி மற்றும் ஆண் மற்றும் பெண்ணின் ராசிகள் போன்றவற்றை கணித்து தீயவைகளை ஒதுக்கி நல்ல முகூர்த்தம் கண்டு இந்த நேரத்தின் முக்கியத்துவத்தினை மணமக்களுக்கு முன்பே எடுத்து சொல்லி தயார் நிலைக்கு கொண்டு வரவேண்டும். FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION என்னும் ஆங்கில பழமொழியை இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டும். ஆரம்பம் சரியான நேரம் எனில் அடுத்து எல்லாமே சுபமே. மிக நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை மிக நன்றாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அகால சேர்க்கையில் உண்டாகும் பலன்களை சொல்ல ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக எழுத வேண்டி வரும். இதன் விளைவாக வரும் குழந்தைகள் தானும் சிரமப்பட்டு சமுதாயத்தினையும் சிரமப்படுத்தும். துரதிர்ஷ்டம் யாதெனில் இப்பொழுது எல்லாம் திருமணத்திற்கு நாள் குறிக்க தேர்ந்த குருக்கள் அல்லது ஜோதிடரிடம் செல்லாமல் காலண்டரை பார்த்து அவர்களே நாள் குறித்து கொள்கின்றனர். அப்புறம் திருமண மண்டப தேவைக்காகவும் நாட்கள் குறிக்கப்படுகின்றன. மேலும் திருமண இரவில் நல்ல நேரம் கூட பார்க்காமல் சாந்தி முகூர்த்த ஏற்பாட்டை நடத்தி விடுகின்றனர். இதனால் பிறக்கும் குழந்தையின் குணம், ஆரோக்கியம் என பல முக்கிய இடங்களில் குறைகள் ஏற்படலாம். பிறப்பு சரியாக இருந்தால் வளர்ப்பு எளிதாகும். இல்லை எனில் இதற்காக நிறைய மெனக்கெடவேண்டும். நம் கடமையை சரியாக செய்து விட்டால் பலன் சரியாகவே இருக்கும். பலருக்கு இயல்பாகவே நல்ல நேரத்தில் முகூர்த்தம் அமைந்து விடுகிறது. அவர்கள் அதை கணித்து தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் நல்ல நேரம் நல்ல நேரமே.

காதலித்து மணம் முடிப்பவர்களின் விசயத்தில் பார்த்தோமேயானால், அவர்களில் உடலில் இருந்து வரும் அலைக்கற்றைகள் (wave length & vibration) ஒன்றையொன்று ஈர்த்தே இருக்கும். அதனால்தான் அவர்களுக்குள் காதல் ஈர்ப்பே வருகிறது. எனவே கந்தர்வ விவாக கூடல்களில் கால நேரங்கள் அனிச்சையாகிறது. அனால் நாடக காதல்களில் முடிவு நன்றாக இருப்பதில்லை.  நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இவைகளையும் முன்கூட்டியே கணக்கிட்டு நிச்சயத்துவிட வேண்டும். மேற்கூறிய உடல் அலைகள் சேர்வதற்காக நிறைய சடங்குகளை பெரியவர்கள் விளையாட்டுக்கள் வாயிலாக நமக்கு அளித்திருக்கிறார்கள். குறைந்தது 7 நாட்களுக்கு முன்பிருந்தே மணமக்களுக்கு நல்ல உணவுகளை அளிக்க வேண்டும். அதனால் திசு உற்பத்தி நன்றாக இருக்கும். எளிதில் சீரணம் ஆகும் நல்ல சத்து நிறைந்த உணவுகளாக இவை இருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமணம் வரை உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. சாந்தி முகூர்த்த நேரமாக குறிப்பிட்டு தரும் முகூர்த்த வேளையில் உணவு ஏதும் அருந்தக்கூடாது. அதற்கு முன்போ பின்போ சாப்பிட தடை இல்லை. கலவி நேரத்தில் பேசவும் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. இல்லை எனில் பிறக்கும் குழந்தையின் பேச்சுத்திறன் மற்றும் வாதத்திறனில் குறை இருக்கும்.

சாந்தி முகூர்த்த மனம் மற்றும் உடல் ஒற்றுமைகளை பொருத்தம் பார்க்கும் சமயமே (வேதை பொருத்தம்) கண்டுகொள்ள முடியும். தேர்ந்த ஜோதிடர் இதை எளிதில் கண்டு விடுவார். பொருத்தம் பார்க்கும் சமயத்தில் சில பொருத்தங்கள் இல்லை எனில் அதமம் என ஒதுக்கிவிடுவர். அதில் ரச்சு மற்றும் வேதை முக்கியம்.

அதே போல சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணிக் கணக்கிட்டு எத்தனை எண் வருகிறதோ அதே எண் அளவு பூராட நட்சத்திரத்தில் இருந்து எந்த நட்சத்திரத்தில் முடிகிறதோ அதே எண் தான் லாடம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது வாழ் நாள் முழுவது விலக்க வேண்டிய நட்சத்திரம் ஆகும். எளிதில் விளங்க, ஒருவனின் ஜாதகத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கணக்கிட்டால் பூச நட்சத்திரத்தில் இருந்து 12வது நட்சத்திரமாக மூலம் வரும். அதன் பிறகு பூராட நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் 12வது  நட்சத்திரமாக ரோஹிணி வரும். இந்த நட்சத்திரமே அந்த ஜாதகருக்கு லாடம் ஆகும். இந்த நட்சத்திர தினத்தை எப்பொழுது நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இது பின் வரும் கணவன் மனைவி சேர்க்கைக்கும் பொருந்தும். அவரவர்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலையை பாதசார நிலையில் காண  முடியும். குழப்பம் இருப்பவர்கள் தேர்ந்த ஜோதிடரிடம் தெரிந்து கொள்ளவேண்டும்.

வேதனை என்னவெனில் மக்கள் தாங்கள் ஏற்கன்வே எடுத்துவிட்ட முடிவை ஜோதிடரின் வாயில் இருந்து வரவழைக்க நினைப்பதுதான். ஒரு விசயத்தினை செய்யக்கூடாது என சொன்னால் மக்கள் விடுவதில்லை. அப்படி செய்தால் என்ன விளையும் எனவும் அதற்கு பரிகாரங்கள் என்ன என்றும் ஜோதிடர்களை குடையக்கூடாது. அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை மனதில் கொள்ளவேண்டும். பணம் (தட்சனை) பெறுவதால் அவர் நமக்கு ஊழியர் அல்லர். தட்சனை என்பது அவரின் வாழ்க்கையை நடத்தத்தானே அன்றி உங்களின் கருத்துக்களை திணிக்க அல்ல. வேண்டாம் என்று சொல்லப்பட்டு விட்டால் விட்டுவிட வேண்டும். மாற்று வழிகளையே சிந்திக்க வேண்டும். காலண்டரில் நாட்களை கண்டு குறித்துக்கொண்டு பின் மண்டபத்திற்கு முன் தொகையும் அளித்துவிட்டு பிறகு ஜோதிடரிடம் வருவது தவறாகும். ஜோதிடரிடம் மணமக்களுக்கு பொருத்தமான நாட்களை கணித்து பெற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு மற்ற பணிகளை தொடங்குவதே சரி. திருமணத்தை அதற்குரிய முகூர்த்த நேரத்தில் தான் செய்யவேண்டும். பிரம்ம முகூர்த்தம் கூட சரி கிடையாது. மற்ற எந்த ஒரு வேலைக்காகவும் / நபருக்காகவும் முகூர்த்த நேரத்தினை மாற்றக்கூடாது. எந்த ஒரு மங்கல வேலையையும் ஆரம்பிக்கும் முன்பு கணபதியையும், குல தெய்வத்தினையும் மனதில் நன்றாக வணங்கிக்கொள்ள வேண்டும்.

அமாவாசையின் கடைசி நேரத்தில் பிரதமையின் முதல் பகுதியில் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தில் விஷக்கடிகை வருமானால் அதை குருதோஷம் என சாஸ்திரம் கூறுகிறது, இதுவும் சாந்தி முகூர்த்தத்தில் தவிர்க்கவேண்டியதாகும். சூரியோதய முகூர்த்த வேளை 1½ மணி நேரம் பிராதகால முகூர்த்தம். மதியம் வருகிற முகூர்த்தம் அவிச்சின் முகூர்த்தம். ஆனால் அஸ்தமனத்தில் வரும் முகூர்த்தம் கோதாளி முகூர்த்தம் என குறிப்பிடப்படுகிறது. இந்த முகூர்த்தம் நல்ல முகூர்த்தம் கிடையாது. கோதாளி முகூர்த்தம் வரும் நாட்களிலும் சாந்தி முகூர்த்தம் விலக்க வேண்டும். அதே போல நாட்களில் சனி மற்றும் செவ்வாய்கிழமைகளை அசுப நாட்கள் என கொண்டு விலக்கி விடவேண்டும். கிழக்கு மேற்காக படுக்கலாம். தெற்கு இரண்டாம் பட்சமே. வடக்கு திசையில் தலைவைத்து படுக்கலாகாது. சாந்தி முகூர்த்தம் முடிந்த, விடியும் நேரத்தில் அமங்கலிகளை பார்க்கலாகாது. மணமக்களின் பெற்றோர்களை விட அத்தை மற்றும் அக்காமார்களே நலங்குகளை கவனிக்கவேண்டும். அதே போல தலை ஆடி மாதம் மணமக்கள் விலகி இருக்கவேண்டும்.

இன்னும் நிறைய விசயங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட முக்கிய விளக்கங்களை மட்டுமே அளித்திருக்கிறேன். எனவே முகூர்த்தம் குறிப்பதை விளையாட்டாக எண்ணாமல் வேதம், ஜோதிடம் பயின்றவர்களின் துணைகொண்டே நிர்ணயிக்கவேண்டும். நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நன்மையையே விளைவிக்கும்.

ஆசிகள்.


Friday, October 11, 2013

கிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்

உலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகையான வார்த்தை இல்லை என நினைக்கிறேன். இன்று இத்தனை பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் எனில் பார்க்க வைத்தவர் சச்சின்.

24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் சச்சின் எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராகவும் சதங்களை சாதாரணமாக விளாசியவர். உலகையே ஆட்டத்தில் மிரட்டியவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்றால் அவர்களை ஆட்டத்தில் மிரட்டியவர் சச்சின். இவரின் சம காலத்தில் அறிமுகமான இன்சமாம் உல் ஹக் மற்றும் பிரயன் லாரா ஆகியோர் போன்ற ஜாம்பவான் வீரர்களைக்கூட பின்னுக்கு தள்ளி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். குள்ளமான உருவம், மெலிந்த குரல் எனினும் வலுவான ஆக்ரோஷமான ஆட்டத்தில் தனது முத்திரையை பதித்தார். இவர் மைதானத்தில் இருக்கும் வரை வெற்றி என்பதை எதிர் அணியினர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இதை எல்லா அணித்தலைவர்களும் ஒப்புக்கொள்ளவே செய்தார்கள். பந்து வீச்சிலும் சிறந்தவர். சச்சின் சாதனைகளை டைப் செய்ய ஆரம்பித்தால் கையே வலி கண்டுவிடும். இவரின் சாதனைகளை ஒருவர் சமன் செய்யவேண்டும் எனில் அவர் 16 வயதில் ஆட வந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட வேண்டும். இது நடைமுறையில் சாத்யமில்லை.


பூஜ்ஜியத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து ராஜ்ஜியத்தையே வென்றார் சச்சின். எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வேதனைகள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிக்கொடி நாட்டியவர். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து மறுபடியும் அதே தெம்புடன் களம் கண்டார். இவரின் பயிற்சியாளர் ஆச்ரேகர் ஒரு பழக்கம் வைத்துள்ளார். என்னவெனில் வலை பயிற்சியில் ஒரு நாள் முழுவது யார் ஒருவர் அவுட் ஆகாமல் விளையாடுகிறாரோ அவருக்கு ஒரு ரூபாய் நாணயத்தினை வழங்குவார். அவரிடம் அதிகபட்சமாக (13) நாணயங்களை பரிசாக பெற்ற ஒரே சிஷ்யர் சச்சின். 

ரஞ்சி, இரானி மற்றும் துலிப் ட்ராபிகளின் அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து கணக்கினை தொடங்கிய ஒரே வீரரும் இவரே. டில்லியில் உள்ள பிரபல திகார் ஜெயிலில் ஒரு வார்டிற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், ராஜீவ் கேல் ரத்னா விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான படையில் கவுரவ பதவி, ராஜ்யசபையில் எம்.பி. பதவி போன்ற கவுரவ பதவிகளும் பெற்றவர். ஆஸ்திரேலியா அணியில் மட்டும் விளையாடும் வீரர்களில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ”ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா” விருது பெற்ற வெளி நாட்டு வீரர் இவர் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் மற்றும் 96 அரை சதம் என மொத்தம் 18426 ரன்களை குவித்த இயந்திர மனிதன் சச்சின். விளம்பர வருவாயை நீண்ட ஆண்டுகளாக அதிகம் பெற்ற இந்திய வீரரும் இவரே. ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு டாக்டர். மகன் அர்ஜுனும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக தயாராகி வருகிறார். சாரா என்ற மகளும் உண்டு. 


இந்திய அணிக்காக விளையாடப்போகும் கடைசி ஆட்டமாக இவரது 200 வது டெஸ்ட் அமைய உள்ளது. ஒய்விற்கு பிறகு இந்திய அணியில் ஆலோசனையாளராக வந்து அடுத்த தலைமுறைக்கு இவரது அனுபவத்தினை அளிக்க வேண்டும் என்பது அனைவரது ஆவல்.

உலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல. முற்றிலும் உண்மையே.

Friday, October 4, 2013

படித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்

படித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்
1.நீ தான் என் முதல் காதலி..!
2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!
3.காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!
4.ஐ மிஸ் யூ..!
5.பரவாயில்லை விடுங்க ..!
6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...!
7.நான் சாதி பார்பதில்லை ..!
8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!
9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!
10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...!
11.காவல்துறை உங்கள் நண்பன்
12.நான் தான் classலயே first
13.சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....
14.இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்
15.இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம்
16.சாமி கண்ண குத்திரும்
17."ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா"-
" சில்ர இல்லப்பா "
18.நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை
19.ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்
20.பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.

Sunday, August 25, 2013

பூரண கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி)

வரும் ஆகஸ்ட் 28ம் தேதிக்கு சரியான விஜய ஆண்டு ஆவணி மாதம் 12ம் தேதி புதன் கிழமை அன்று வரும் கிருஷ்ண ஜெயந்தி பூரண ஜெயந்தி ஆகும். அதாவது ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த பொழுது இருந்த திதி, நட்சத்திரம், லக்னம் மற்றும் யோகங்கள் துல்லியமாக பொருந்தி வருவதை குறிப்பிடுகிறேன். பகவான் பிறந்த அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரம், ரிஷப லக்னம் மற்றும் ஹர்சன யோகம் இவையனைத்தும் அன்றிரவு நிகழ இருக்கிறது. கிருஷ்ணன் இதே நள்ளிரவில் சிறையில் பிறந்து தனது தகப்பனாரால் இரவோடு இரவாக நந்தகிராமத்திற்கு யமுனையை கடந்து எடுத்து செல்லப்பட்டார். எனவே சரியாக பொருந்தி வரும் தினமான இந்த நல்ல நாளை அனைத்து தரப்பு மக்களும் போற்றி வணங்க வேண்டும். ஏனெனில் இது போன்றதொரு பூரண ஜெயந்தி நாள் வர பல்லாண்டுகள் ஆகலாம்.      


அதே போல வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினம் வருகிறது. குறிப்பாக முந்தய நாளான 8ம் தேதி மாலை 4:50க்கு தொடங்கி மறு நாள் ஞாயிறு 4:00 மணிக்கு முடிவடைகிறது. பகல் பொழுது அதிகமுள்ள திதியே சிறந்தது என்பதால் ஞாயிற்றுக்கிழமை பகல் 12:00 மணிக்கு மேல் கொண்டாட வேண்டும். காலை நேரம் பூஜைக்கு உரிய நேரமாக இல்லை என்பதை மனதில் கொள்ளவும். சதுர்த்தி விரதம் மதியம் 12 மணிக்கு மேல் விடவும்.

Wednesday, August 21, 2013

நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்

கீழ்கண்ட ஸ்தலங்களில் அவரவர்கள் தங்களுக்குரிய நட்சத்திரங்களின் அடிப்படையில் ஆயுளின் ஒரு முறையேனும் சென்று தரிசித்து அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.


அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவரகள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: சனிஸ்வரர் குச்சனூர் மதுரை
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கா
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கா
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜாகொடுமுடி , கரூர்
 சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜாதிருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர்காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்திதிருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர்ஓமாம்புலியூர்

Friday, July 19, 2013

வாலி – ஒரு ச(சா)காப்தம்

திரையுலகில் மிக நீண்ட காலம் தனக்கென ஒரு தளத்தினை தக்கவைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் நேற்று (18/07/2013) காலமானார். அவருக்கு வயது 82.

திருச்சி – கரூர் செல்லும் சாலையில் உள்ள திருப்பராய்த்துறை தான் இவரது சொந்த ஊராகும். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த இவரின் இயற்பெயர் ரங்கராஜன். இளமையில் பல நாடகங்கள், கவிதைகள், ஓவியங்கள் என வாழ்ந்து கொண்டிருந்த வாலிக்கு திரைப்படத்தில் பாடல் எழுதும் துறையே சிறந்த தளமானது. மாலி என்றொரு ஓவியர் இருந்த காலத்தில் அவரை விட சிறப்பாக வரவேண்டும் என்று அவர் நண்பர்தான் வாலி என இவருக்கு பெயர் சூட்டினார். அகில இந்திய வானொலியில் பணியை துவங்கிய இவர் சென்னை வந்து திரைப்படத்துறையில் கால் பதிக்க பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஸ்ரீரங்கத்தில் இவரின் சமகால நண்பர் சுஜாதா ஆவார். பி.பி.ஸ்ரீனிவாஸ் மூலமாக திரையுலக வாழ்க்கையை துவங்கிய இவர் கற்பகம் திரைப்படதிற்கு பிறகு பிரபலமானார். எம்ஜியாரின் ஆஸ்தான பாடலாசிரியராக திகழ்ந்தார். நாடே எம்ஜியாரை ஆண்டவரே என்றழைத்த நேரத்தில் எம்ஜியாரால் ஆண்டவரே என்றழைக்கப்பட்டவர் வாலி. சிவாஜிக்கு ”வாத்தியார்”

கண்ணதாசனின் சமகாலத்தில் அவருக்கு போட்டியாக அறியப்பட்டார். அதே கண்ணதாசனே தனது இசை வாரிசாக இவரை மேடையில் அறிவித்தது சங்கல்பம். பல தலைமுறைகள் கடந்து இவரின் பாடல் இயற்றும் திறன் குறையவே இல்லை. தரைமேல் பிறக்க வைத்தான் போன்ற தத்துவ பாடல்களாயினும் சரி, முன்பே வா என் அன்பே வா என காதலில் குழைந்த போதும் சரி வாலி வாலிதான். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார். அழகிய சிங்கர் தொகுப்பினை சமீபத்தில் அளித்தவர். 2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.

ஜோதிடத்தில் கூறப்பட்ட சில சிக்கலான விசயங்களை பாடல்களில் எளிமையாக தந்தவர். உதாரணம் ஒருவனின் அல்லது ஒருத்தியின் அழகை (அக அழகு மற்றும் புற அழகு) அவனது கடக வீட்டு அதிபதியான சந்திரனே தீர்மானிக்கிறான். அதை எளிமையாக “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ” என சொல்லிவிட்டார். அதே பாடலில் ”மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகியென்பேன்” என முடித்திருப்பார். அது சாமுத்திரிகாவில் வரும் முக்கிய அமைப்பாகும்.

காதலித்து மணம் புரிந்த இவர் தன் காதல் மனைவியின் பிரிவிற்கு பிறகு உடல் நலம் குன்றினார். எத்தனையோ காலத்தை வென்ற பாடல்களை கொடுத்த இவர் மறைவு நமக்கு எல்லாம் மிகப்பெரிய இழப்புதான்.

என் தகப்பனாரின் நினைவு தினமான ஜூலை 18ல் இவரும் மறைந்ததால் இவரின் நினைவு நாளை என்னாளும் என்னால் மறக்க இயலாது.


Monday, July 8, 2013

இந்துக் கடவுளை எப்படி வழிபடுவது?

வணக்கம் நண்பர்களே!
உங்களுக்கு கண்டிப்பாக உபயோகப்படுமென்று தந்துள்ளேன். இணையத்தில் இருந்து இணைந்தது. இந்துக்களுக்கு மிக இயைந்தது.

1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

5. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசியால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.

6. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

7. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

8. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

9. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

10. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.

11. வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.

12. சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

13. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

14. துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.

15. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

16. திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

17. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

18. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
1. 

Friday, March 29, 2013

விஜய ஆண்டில் நடக்கப்போவது என்ன?



சென்ற வருடம் நந்தன ஆண்டின் துவக்கத்தில் அந்த வருடத்திற்குரிய பலன்களை அளித்திருந்தேன். அதே போல இந்த ஆண்டிற்கான பலன்களையும் தொகுத்தளித்திருக்கிறேன். படித்து பயனடையவும்.

பஞ்சாங்க கணிதம்: அனைத்து கணக்கு முறைகளும் ஆற்காடு கா.வெ.சீதாராமைய்யர் சுத்த வாக்கிய கணித முறையில் கணிதம் செய்யப்பட்டதாகும்.

நவக்கிரக ஆதிபத்யங்களின்படி 13.04.2013 சனிக்கிழமை அன்று சுக்லபஷம் சதுர்த்தி திதியில் கிருத்திகை நட்சத்திரம் 4ம் பாதத்தில் அமிர்த யோகத்தில் இரவு 11.52க்கு தணுசு லக்கினத்தில் ரிஷப ராசியில் சூரியன் ஓரையில் சூரிய தசை செவ்வாய் புத்தியில் புதன் அந்தரத்தில் விஜய வருடம் இனிதே ஆரம்பிக்கிறது. உலக ஜாதகத்தின்படி வர்க்கோத்திர யோகமும் சஷ்டாஷ்டக தோஷமும் லக்கின சுகாதிபதியான தேவகுரு 6ல் மறைந்து குருச்சந்திர யோகமும் கஜகேசரி யோகமும் தனக்கும் சனிக்கும் சஷ்டாஷ்டக தோஷமும் தனாதிபதி சனி உச்ச பலம் பெற்றும் மேகாதிபதியாகவும் உலக ஜாதக திசா நாயகனாகிய ராஜ கிரஹமாகிய சூரியன் பலமாக இருப்பதனாலும் இவ்வருடம் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். சென்ற ஆண்டில் ஏமாற்றிய பருவ மழை இந்த ஆண்டு குறையின்றி பெய்யும்.

இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு வருமானங்கள் குறைந்து புதிய வரிகள் விதிக்கப்படலாம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் நன்றாக இயங்கும். சரிந்திருந்த ரியல் எஸ்டேட் தொழிலும் விருத்தி காணும். பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்கள் விலை உச்சம் காணும். அரிசி, சர்க்கரை, பருப்பு விலை அதிகரிக்கும். அக்டோபர் கடைசி வாரம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை பூமிக்கு நல்ல நேரம் இல்லை. பூகம்பங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இரயில் விபத்துகளும் ஏற்படலாம். வாசனை திரவியங்கள் விலை ஏறும். காற்றாலை மின்சாரம் தடைபடலாம். மின் பற்றாக்குறை குறைய வாய்ப்பில்லை. இந்த ஆண்டு ஞாயிறு அன்று வேலைகள் துவங்க நன்மை விளையும்.

இந்த ஆண்டு பஞ்சு நூல் விலை குறையும். ஏலக்காய், முந்திரி, திராட்சை விலை ஏறாது. பூண்டு, வெங்காயம் விலை ஏறும். மஞ்சள் விலையில் அரசு தலையிட்டு நிலையில்லா வியாபாரமாக இருக்கும். எரிவாயு விலை மிக அதிகமாக ஏறும். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழியும். எள்ளு, எண்ணை வித்துக்கள் விலை ஏறும். வங்கிகள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும்.

இந்த ஆண்டு சனி, ராகு & கேது பெயர்ச்சிகள் இல்லை. குருப்பெயர்ச்சி மே மாதம் 28 ம் தேதி செவ்வாய் கிழமை அன்று இருக்கிறது. குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு வைகாசி 14 அன்று இரவு 9:15 மணிக்கு பிரவேசிக்கிறார்.

மேஷம், கடகம், விருச்சிகத்திற்கு யோகமான பலன்களும், தனுசு, மீனத்திற்கு மத்திம பலன்களும், சிம்மத்திற்கு சம பலனும் ஏற்படும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பத்திற்கு நஷ்ட பலன்களே!

இந்த ஆண்டின் மொத்த ஆதாயம் 53. மொத்த விரையம் 56. எனவே நஷ்டம் 3 வருவதால் அரசாங்கம் கடனில் கஷ்டப்படும்.

கந்தாய பலன்களை பார்க்கலாம்.
அஸ்வினிக்கு முதல் 4 மாதங்கள் கஷ்ட பலன்களும், கிருத்திகை, திருவாதிரை, ஸ்வாதி, கேட்டை, உத்திராடம், சதயம் முதலான நட்சத்திரகாரர்களுக்கு இரண்டாம் 4 மாதங்கள் கஷ்ட பலன்களும், பரணி, புனர்பூசம், திருவோணம், உத்திரட்டாதிக்கு கடைசி 4 மாதங்கள் கஷ்ட பலன்களும் இருக்கும். உத்திரம், ரேவதிக்கு கடைசி 8 மாதங்களும், ஆயில்யத்திற்கு முதல் 8 மாதங்களும் கஷ்ட பலன்களாகும். ரோகிணி, மிருகசீரிடம், பூசம், மகம், பூரம், ஹஸ்தம், சித்திரை, விசாகம், மூலம், பூராடம், அவிட்டம் முதலான நட்சத்திரக்காரர்களுக்கு ஆண்டு முழுவது சுக பலன்கள் என அறியவும்.

மொத்தத்தில் கடந்த ஆண்டைவிட மழைப்பொழிவு திருப்தியாக இருந்தாலும், விலைவாசி அதிகம் ஆகும் என இதன் மூலம் அறிய முடிகிறது.



Wednesday, March 20, 2013

வீரப்பூர் வேடபரி


இந்த முறை வீரப்பூர் வேடபரி அன்று அன்னதானத்திற்கு சென்ற சமயம் 2 வீடியோ எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு.

தொடர்ந்து 19 வருடங்களாக அண்ணன்மார் அன்னதானக்குழு வழங்கிவரும் அன்னதானம் இம்முறையும் சிறப்பாக நடைபெற்றது.