Thursday, September 20, 2012

14 மணி நேரம் பவர்கட்

ஒரு நாள் என்பதே 24 மணி நேரம்தான். அதில் பாதிக்கும் மேல் மின்சாரம் இல்லாமல் வாழ பழகி இருக்கிறோம். நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்ளலாம். காற்றடித்தால் கரண்ட் வரும். மழை பெய்தால் கரண்ட் வரும். அதெல்லாம் சரி காற்றும் மழையும் எப்பொழுது வரும்? விடையில்லா கேள்வி. என்னதான் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு படுத்தாலும் கடிக்கும் கொசுவிற்கு பதில் சொல்லி மாள முடிவதில்லை. நம் இரத்தத்தை தினமும் ருசி பார்க்கும் கொசு கூட சொல்கிறது… பீகாரிலிருந்து எல்லா கொசுவும் தமிழ் நாட்டிற்கு வந்து விட்டது என்று. பத்து வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட பீகார் இன்று பளிச்சிடுகிறது. ஆனால் மின்மிகை மாநிலமாக இருந்த நம் தமிழ்நாடு இன்று இருளில் தத்தளிக்கிறது. அம்மாவை கேட்டால் அய்யாவை கேள் என்பார். அய்யாவை கேட்டால் அம்மாவை போய் பார் என்பார். நாதியற்று போனோம் நாம்.

ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திற்கு மேல் மின் துண்டிப்பு இருக்காது என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கும் செய்தி. கொசுவர்த்தி விற்பவன் கூட யோசிப்பது இல்லை. கரண்ட் இல்லாத பொழுது பேட்டரியில் இயங்கும் வண்ணம் ஒரு வர்த்தி தயாரிக்கலாமே என. அப்படி ஒரு சாதனம் வருமெனில் அவன் விரைவில் கோடீஸ்வரன் ஆவான்.





நம் ஊரில் மிகையாக கிடைப்பது வெயில் மட்டும்தான். அந்த வெயிலிலும் மின்சாரம் தயாரிக்க இயலும். ஆனால் அப்படி ஒரு மின் நிலையம் கூட இதுவரையில் உருவாக்கப்படாமல் இருப்பதும் குறைந்த பட்சம் இனிமேலாவது ஒரு மின் நிலையம் என்கிற பேச்சும் இல்லாமல் இருப்பதும் நம் துரதிருஷ்டம். குஜராத்தில் மோடியால் சாதிக்க இயன்றதை நம்மால் ஏன் முடியாது???

Friday, September 7, 2012

சிவகாசி விபத்து – ஒரு தொடர்கதை

சிறுகதைகளுக்கு சீக்கிரம் முடிவு வரும். தொடர்கதைகளோ முடிவு இல்லாமல் நீளும். பிரச்சனைகளில் கூட இது போல சிறுகதைகளும் உண்டு தொடர்கதைகளும் உண்டு. சிவகாசி வெடி விபத்தும் தொடர்கதையினை போன்றதுதான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கமான ஒரு மதிய நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 35க்கும் அதிகமான மக்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். சிவகாசிக்கும் இது போன்ற விபத்துக்களுக்கும் பத்தோடு பதினொன்றாக போய்விட்டது. ஒவ்வொரு ஆண்டும் சிறியதும் பெரியதுமாக இது போன்ற விபத்துக்கள் அங்கு நடப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இம்முறை விபத்தில் சிறு வித்யாசம். என்னவெனில் பணியாளர்கள் வெறும் 3 பேர்தான் இறந்துள்ளனர். காப்பாற்ற சென்றவர்களில்தான் பலி எண்ணிக்கை முப்பதை தாண்டிவிட்டது.


தீபாவளி வர இன்னும் கொஞ்சம் நாட்களே இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம். மேலும் இந்த ஆலைக்கு உரிமம் கெடு முடிந்து விட்டதால் ஆலையை மூடச்சொல்லி அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் இரவு பகலாக பணி நடந்துள்ளதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட அதிக வட இந்தியர்களை குறைந்த கூலிக்கு ஆசைப்பட்டு பணியில் அமர்த்தி வேலை வாங்கியதாகவும் அவர்களுக்கு இந்த பட்டாசு பணியின் நுணுக்கங்கள் அறியாமையாலும் விபத்து நேர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன, குறைந்த பட்ச பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லாமல் வெற்றுடம்புடன் வேலை செய்யும் இவர்களுக்கு இறந்த பின்பு இழப்பீடு அளித்து என்ன பயன்? ISO போன்ற தரச்சான்றிதழ்கள் இது போன்ற ஆலைகளுக்கு கட்டாயம் எனவும் வருடத்திற்கு இரு முறை அல்லது மும்முறை தணிக்கைகள் செய்யப்பட வேண்டும் எனவும் சட்டம் கொண்டுவந்தால் குறந்த பட்சம் இந்த மாதிரி விபத்துக்களை குறைக்க இயலும்.

ஆலைக்கு உரிமம் வழங்குவதற்கு முன் அதிகாரிகள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஆய்வுகளை நடத்தினால் மட்டுமே உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.

Wednesday, September 5, 2012

I AM BACK

சிறிது நாட்களாக வலைப்பக்கம் வர இயலாமல் சென்றமைக்கு வருந்துகிறேன். இனி தொடர்ச்சியாக பதிவுகளை எதிர்பார்க்கலாம். நன்றி நண்பர்களே..