Thursday, February 27, 2014

மாற்றங்கள் நிகழ்ந்த நகரம் – கரூர்


கரூர் ஒரு தொழில் நகரம். இங்கிருக்கும் முக்கால்வாசி மக்களும் ஜவுளி, கொசுவலை உற்பத்தி, பஸ் கட்டுமானம் போன்ற தொழிலில் சார்ந்தே வாழ்கின்றனர். இந்த தொழில் நன்றாக இருந்தால்தான் ஹோட்டல் போன்ற இதனை சார்ந்த தொழில்களும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நகரத்திற்கென பல பிரச்சனைகள் இருந்துகொண்டே இருந்தன.

திருச்சியில் இருந்து கரூருக்கு ரயில் சேவை இருப்பதால் குளித்தலை, பெட்டவாய்த்தலை, லாலாபேட்டை, மாயனூர் போன்ற சிறு நகரத்து மக்களும் தினசரி கரூர் வந்து வேலை பார்த்து பிழைக்கின்றனர். ஆனால் கரூரில் இருந்து திண்டுக்கல் மார்க்கத்தில் ரயில் சேவை இருந்தும் பயணிகள் ரயில் இல்லாததால் பேருந்தை நம்பியே வாழ்க்கை ஓடுகிறது. கோவைக்கு ரயிலில் போவதாக இருந்தால் ஈரோடு, திருப்பூர் வழிதான். வெள்ளகோவில் மற்றும் காங்கயத்திற்கென தண்டவாளமே இல்லை. சேலத்துக்கு தனி வழி இன்றி ஈரோடு வழியாகவே இயங்கி வந்த ரயில் சேவை தற்சமயம் தனி வழியாக (நாமக்கல் வழி) இருப்பு பாதை பல வருட கிடப்பில் இருந்து தற்சமயம் துரிதப்படுத்தப்பட்டு சேவையும் துவங்கப்பட்டுள்ளது. விளைவு யாதெனில் கரூருக்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைத்தது. பழனியிலிருந்து சென்னை செண்ட்ரலுக்கு சேலம் வழியாக தினசரி விரைவு ரயில் கிடைத்தது. இது நாள் வரை சென்னைக்கு செல்லவேண்டுமெனில் இரவில் வரும் மங்களூர் வண்டிதான் அதுவும் எக்மோர் வரைதான். இந்த புதிய பாதை பிற்காலங்களில் கரூருக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதென்னவோ உண்மை.

சாலை வசதிகளும் சமீப காலங்களில் நகருக்குள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மண்மங்கலம் என்னும் புதிய தாலுக்கா பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பேருந்து நிலையம் கவலைக்கிடமாக இருந்த நிலையில் முற்றிலும் செப்பனிடப்பட்டு புதிய முறையில் தயாராகி வருகிறது. மேலும் விளையாட்டு அரங்கம் (ஸ்டேடியம்) பூங்கா என நகரின் பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பசுபதி பாளையம் செல்ல இருந்த ஒரே ஒரு தரைப்பாலம் தற்சமயம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை மின்வெட்டு என்பது அனைத்து தொழில் அமைப்புகளயும் பாதித்திருந்த நிலையில் தற்சமயம் மின்வெட்டு இல்லாத நிலை நிலவி வருகிறது. இது சிறு குறு தொழில்களை காப்பாற்றி வருகிறது.

மேலும் இதுபோன்ற நற்பணிகள் தொடர வேண்டும் என நம்பிக்கையாக உள்ளது.



Thursday, February 6, 2014

நாய்

கடந்த பொங்கல் அன்று இரவில் வித்யாசமாக ஒரு சத்தம் வரவே வெளியில் சென்று பார்த்தேன். அப்பொழுது கருப்பும் பழுப்புமாக இரண்டு நாய்க்குட்டிகள் பனி / பசி தாங்காமல் கத்திக்கொண்டிருந்தன. பிறந்து சில நாட்களே ஆகி இருந்த சூழ் நிலையில் பெண் குட்டிகள் என்பதால் யாரோ வளர்க்க சங்கடப்பட்டு தெருவில் விட்டு விட்டனர். பாவமாக இருந்ததால் அந்த குட்டிகளுக்கு அந்த நேரத்தில் சிறிது பாலை ஒரு டப்பாவில் வைத்து கொடுத்தேன். குடித்த இரு குட்டிகளும் வீட்டு வாசலிலேயே படுத்துக்கொண்டு விட்டன.

அடுத்த நாளில் இருந்து அந்த இரு குட்டிகளும் தெருவில் உள்ள குழந்தைகளின் செல்லப்பிராணிகளாயின. பிஸ்கட், பிரட், பால் என ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குழந்தைகளால் கொடுக்கப்பட்டு கொழு கொழுவென வளர துவங்கின. இதில் கருப்பு நாய் (ப்ளாக்கி) நாட்டு நாய் ஆகும். பழுப்பு நாயான பிரவுனி ஏதோ ஜாதி நாயின் வழித்தோன்றல். தெருவில் இருந்த ஒரே ஒரு நபர் மட்டும், இது பெட்டை நாய்கள். எனவே வளர்ப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. கடுவனாக இருந்தால் நன்றாக வளர்க்கலாம். எங்காவது கொண்டு சென்று விட்டு விடுங்கள் என்றார்.



ஆனால் வீட்டிற்கு வந்த வெளி நண்பர்களில் சிலர் நாயின் கால் நகங்களை பார்த்துவிட்டு இது அதிர்ஷ்டம் என்றும் மேலும் இது தானாக வந்துள்ளன. எனவே வளருங்கள் என்றனர். அதிலும் ஒரு நண்பர் இப்படி வரும் நாய்களை எங்காவது கொண்டு சென்று விட்டால் நமது வீட்டில் செல்வம் குறையும் என்று கூட பயமுறுத்தி விட்டார். நான் படிக்கிற காலத்தில் என் குருநாதர் ஒரு முறை சொன்னது என் நியாபகத்தில் வந்தது. அது என்னவெனில் போன ஜென்மத்தில் நமக்கு யாரேனும் துரோகம் விளைவித்திருந்தால் அவர்கள் மறு ஜென்மத்தில் நாயாக பிறந்து விசுவாசமாக இருந்து கடனை கழிக்கும் என்று. அது போல ஒரு ஜென்ம தொடர்போ என என்னை சிந்திக்க வைத்தது. எது எப்படியோ சிவராத்திரி முடிந்து விட்டால் குளிர் பனி இருக்காது. அதற்கப்புறம் இதை வளர்க்கலாமா அல்லது எங்காவது உணவுகள் கிடைக்கும் இடத்தில் (கோவில் மாதிரி) விட்டு விடலாமா என்பதை முடிவெடுக்கலாம் என்று விட்டுவிட்டேன். இதற்கிடையில் அந்த குட்டிகள் மிகுந்த பாசத்துடன் எனது அன்னையுடன் வாக்கிங், எங்களுடன் விளையாட்டு என நன்கு ஒட்டிக்கொண்டது. பக்கத்து வீட்டுக்காரரும் ஒரு பாதுகாப்பிற்காக இதனை வீதியிலேயே இருக்கும்படி வளர்க்கலாம் என்றார்.

இந்த சூழ் நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு மணி சுமார் 2 அளவில் திடீரென்று இரு குட்டிகளும் குரைக்க தொடங்கிவிட்டன. எனக்கு உடன் முழிப்பும் தட்டிவிட்டது. எனினும் ஏதேனும் எலி, பூனையை பார்த்திருக்கும் என சமாதானமாகி தூங்க எத்தனித்த வேளையில் ஒரு குட்டி குரைப்பது நின்றுவிட்டது. மனதில் ஏதோ பட வெளியில் வந்து பார்த்தால் பிரவுனியை காணவில்லை. ப்ளாக்கி பயத்துடன் என் காலை பின்னிக்கொள்ள எனக்கு விளங்கியது. யாரோ ஜாதி நாய் என்பதால் அதை மட்டும் லவட்டி விட்டனர் என்று. நேற்றெல்லாம் மனது பிசைய ஆரம்பித்து விட்டது. எனினும் வளர்ப்பதற்கு தானே யாரோ திருடியிருக்கிறார்கள். எனவே நல்ல முறையில் அது வளர்க்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையானேன்.


எங்கிருந்தாலும் வாழ்க பிரவுனி………… தெரு நாய் என்றால் திரிஷாவிற்கு மட்டும்தான் பாசம் வருமா என்ன?