Monday, January 10, 2011

புகையில்லா போகி

தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பாய், தலையணை உள்ளிட்ட உபயோகப்படுத்திய பழைய பொருட்களை சுருட்டி வாரி மொத்தமாக வைத்து அதனை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.

ஆனால் சமீப ஆண்டுகளாக டயர்களையும் ப்ளாஸ்டிக் பொருட்களையும் போட்டுக் கொளுத்த ஆரம்பித்ததால் சுற்றுச்சூழல் மாசு பட ஆரம்பித்தது

போகி பண்டிகையில் பாலிதீன், பிளாஸ்டிக் உட்பட கழிவுகளை எரித்து, காற்றில் நச்சு கலப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் "புகையில்லா போகி' கொண்டாட சபதம் ஏற்று, நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

புகை நமக்கு பகை: டயர், பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் நச்சு புகை உருவாகும். பாலிதீன் கழிவிலிருந்து "கார்பன் டை ஆக்சைடு', பிளாஸ்டிக் கழிவிலிருந்து "கார்பன் மோனாக்சைடு' வெளியேறும். இதை சுவாசிப்பதால் மூச்சு திணறல் ஏற்படும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் "டையாசின்', "ப்யூரான்' போன்ற விஷ வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. அக்காற்றை சுவாசிக்கும் மனிதர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது

இருமல், தும்மல் ஏற்பட்டு தொண்டை வலி வரும். கண்ணில் எரிச்சல், நீர் வடிந்து பாதிப்பை ஏற்படுத்தும். வாகன விபத்துக்களும் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டியது நமது கடமை.

சபதம்: நாம் பொங்கலையும், போகியையும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்; இயற்கை காற்றில் நச்சு புகை கலக்காமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. பிளாஸ்டிக், பாலிதீன் கழிவை எரிக்காமல் இயற்கை அன்னையை பாதுகாப்போம் என்ற கொள்கையை, பொங்கல் சபதமாக ஏற்போம். நம்மால் இயன்ற வரை மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம்.

1 comment:

  1. கார்த்திகேயன்January 13, 2011 at 7:12 PM

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete