Sunday, January 8, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்



இந்த வலைப்பூவிற்கு வருகை தந்தருளும் அனைவருக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் முதலில் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் என்பது சூரியப்பொங்கல் என்று நாம் குறிப்பிடுகிறோம். வட இந்தியர்கள் மகர சங்கராந்தி என சொல்லுகிறார்கள். சூரியன் மகர ராசிக்கு பெயர்வது அதாவது சங்கமமாவது மகர சங்கராந்தி ஆகும். மொத்தத்தில் இந்துக்கள் அனைவருக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் இனிப்பான பண்டிகை இது.

நான் சிறுவனாக இருந்த பொழுது பொங்கல் என்றதும் ஒரு வாரத்திற்கு முன்பே கடைக்கு சென்று பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பேன். நம்மில் அனேகருக்கும் அந்த பழக்கம் இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த பழக்கம் காலாவதியாகிவிட்டது. செல்போன் வந்ததும் இந்த பழக்கம் அழிந்து விட்டது. அதேபோல பொங்கலுக்கு ஒரு பத்து நாட்களுக்கும் முன்பாகவே கரும்புகள் சுவைக்கத்தொடங்கிவிடுவோம். இன்று... பொங்கல் அன்று கரும்பு தின்பது கூட அனைவருக்கும் களைப்பை தருகிறது. வெளி நாடு வாழ் நண்பர்களுக்கு ஆசை இருப்பினும் கரும்பு கிடைப்பதில்லை.

அட்டை வாழ்த்திற்கு மாற்றாக மின்னஞ்சல் வாழ்த்து வந்தது. கரும்புக்கு மாற்றாக கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ளவேண்டியதுதான். மாட்டுப்பொங்கல் கொண்டாட மாடே இல்லாத நிலையில் இந்த பொங்கல் அடுத்த தலைமுறைக்கு எட்டாது. உழவு என்பது அடுத்த தலைமுறை செய்யத்தயங்கும் தொழிலாக மாறி வருவதால் இந்த பொங்கலுக்கும் ஆபத்து இருக்கிறது. இன்றைய சூழ் நிலையில் பொங்கல் விடுமுறையில் ஒரே ஒரு கரும்பை கடித்து கேஸ் அடுப்பில் சமைத்த பொங்கலில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சியில் ஒரு சினிமா பார்த்துவிட்டால் பொங்கல் ஓவர்.

இந்த நிலை மாறவேண்டும். அடுத்த தலைமுறைக்கு பண்டிகைகளும் அதன் வழக்கங்களும் சேரவேண்டும் என்பது என் அவா. ஆசை நிறைவேறுமா?? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment