Tuesday, February 8, 2011

ஒழுக்கமே உயரிய கல்வி






இந்த தலைப்புல ஒரு கட்டுரை படிக்க ஆரம்பிக்கும் நண்பர்களே.. இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள கல்வி அல்ல. ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஒழுக்கத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கல்வியை புகட்டுகிறார்கள். எங்கே? கோவையில். நான் படித்த ஜி.டி.நாயுடு சாரிடீஸில்தான். நம்ம ஊரில் இருந்து சில பேர் எனக்கு முன்னரே அங்கு படித்த அனுபவம் கொண்டவர்கள்தான்.

நான் 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் அங்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி அடைந்து படிக்க சேர்ந்தேன். என்னுடம் 300க்கும் அதிகமான பேர் தேர்வு எழுதி 75 பேர் மட்டும் தேர்வானார்கள். அப்படி என்றால் தேர்வு எவ்வளவு கடினம் என யோசித்துக்கொள்ளுங்கள்.

பயிற்சியில் சேருவதற்கு முன்பு அவர்கள் நம்மிடம் ஒரு லிஸ்ட் கொடுத்து விடுவார்கள். அதில் என்ன என்ன எடுத்து வரவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுவார்கள். கேமரா, ரேடியோ, படிப்பிற்கு அவசியமில்லாத எந்த ஒரு புத்தகமும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. உள்ளே போய்விட்டால் மிலிட்டரி வாழ்க்கைதான்.

சரியாக 3 மாதம் அங்குதான் தங்கி இருக்க வேண்டும். காலை 6 மணிக்கு மணி அடிக்கும். அதை மீறி தூங்க முடியாது. எழுந்து காலைக்கடன் முடித்து குளித்து முடித்து காத்திருக்க வேண்டும். பிறகு காலை சிற்றுண்டிக்கு ஒரு மணி அடிக்கும். எல்லோரும் தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று உணவு வாங்கி இருக்கையில் அமர்ந்து உண்ண வேண்டும். தட்டு கழுவும் இடத்தில் வார்டன் நிற்பார். சாப்பிடக்கூடிய உணவுகள் எதுவும் வேஸ்ட் செய்தால் அடுத்த வேளை உணவு கட் கறிவேப்பிலை, மிளகாய் மட்டுமே குப்பையில் கொட்ட அனுமதி. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம். உணவும் தரமானதாகவே இருக்கும்.

அதற்கு பிறகு வரிசையில் நின்று மணி அடித்ததும் பயிற்சிக்கு செல்லவேண்டும். மதியம் வரை தியரி கிளாஸ். மதிய உணவிற்கு பிறகு பிராக்டிகல் கிளாஸ். இங்கு ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிஸ் என இரு படிப்புகள் இருக்கிறது. நான் ஆட்டோமொபைல்தான் படித்தேன். இரு பேட்ச் மாணவர்களும் சந்தித்துக்கொள்ள முடியாது. ஆனால் ஒரே ஹாஸ்டல்தான். ஒவ்வொரு ரூமிற்கும் 8 பேர்கள் தங்கலாம். ஒரு அறையில் இருக்கும் 8 பேரும் வெவ்வேறு வாழ்க்கை முறை கொண்டவர்களாக இருக்கும்படி பிரித்திருப்பார்கள். என் ரூமில் நான், ஒரு மலையாளி, டெல்லி சிங் ஒருவன், கோவைக்காரன் ஒருவன், சேலத்துக்காரன் ஒருவன் என கலவைதான். இதே மாதிரிதான் எல்லா அறையிலும்.

அனாவசியமாக சிரித்துகூட பேச முடியாது. வெளியில் இருந்து வரும் எவரையும் பார்க்க அனுமதி இல்லை. உடல் நிலை சரியில்லை எனினும் மருத்துவர் நம்மை தேடி வருவாரே ஒழிய மருத்துவமனைக்கு நாம் செல்ல மாட்டோம். தபால் எல்லாம் அறைக்கு தணிக்கைக்குபின்பே வரும். ஞாயிறு மட்டும் மதியம் 3 மணி முதல் 6 மணிவரை வெளியில் சேல்ல அனுமதி உண்டு. அதிலும் முடிவெட்ட, போன் பேச என சரியாகவே இருக்கும். இந்த 3 மாதங்களில் வெளி உலகில் என்ன நடக்கிறது என்பது சுத்தமாக நமக்கு தெரியாது. செய்திகள் கிடையாது, லீவ் கிடையாது. டிவி கிடையாது. பாட்டு, சினிமா கிடையாது. பத்திரிக்கைகள் கிடையாது. நினைத்த பொழுது நொறுக்கு தீனிகள் கிடையாது. எங்கும் ஒழுக்கம். எதிலும் ஒழுக்கம். டாய்லட் போனபின்பு சரியாக தண்ணீர் ஊற்றவில்லை எனில் அனைத்து கழிவறையையும் நாம்தான் சுத்தம் செய்யவேண்டும். பாட நேரத்தில் நமக்கு சம்பந்தல் இல்லாத இடத்தில் நாம் இருந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்.

15 பேர் கொண்டது ஒரு குழு. குழுவிற்கு ஒரு தலைவன். அவன் தரும் கட்டளைகளை பிடிக்கிறதோ இல்லையோ கடைபிடிக்க வேண்டும். தலைவனும் நினைத்த மாதிரி கட்டளை இட முடியாது. எல்லா இடத்திலும் ஒரு செக்பாயிண்ட் இருக்கும். அடித்து சொல்வேன் அங்கு போன்று எங்குமே ஒழுக்கமாக நல்ல கல்வியை கற்க முடியாது. இங்கு 3 மாதங்கள் முழுமையாக தங்கி படிக்கும் ஒரு நபர் உலகின் எந்த சூழலிலும் பணிபுரிய தகுதி உடையவர் ஆவது நிச்சயம். கண்டிப்பாக கட்டளைக்கு கீழ்படியும் குணம் வந்து விடும். தியரி, பிராக்டிகல், விசுவல் கிளாஸ், மாணவர்களே கிளாஸ் எடுத்தல் என அனைத்திலும் ஒழுக்கம் நிறைந்து இருக்கும். முழுமையான தரமான கல்வியை மிகக்குறைந்த கட்டணத்தில் படிக்கலாம். கிட்டத்தட்ட ஜெயில் வாழ்க்கைதான். விளையாட்டு மற்றும் கேளிக்கைகளுக்கு இடமே கிடையாது. ரெக்கார்ட் நோட் எழுதியே கைவிரல் தேயும். இங்கு 3ம் வகுப்பில் பாஸ் ஆனாலே பெரிய புத்திசாலி என கொள்ளலாம். 75 பேர்களில் 20 பேர் 3ம் வகுப்பிலும் 5 பேர் 2ம் வகுப்பிலும் 2 பேர் முதல் வகுப்பிலும் தேறுவர். நான் இரண்டாம் வகுப்பில் தேறி அங்கேயே பணிபுரியும் வாய்ப்பினையும் பெற்றேன். 8 மாதம் வரை அங்கு பணிபுரிந்தேன்.

வருடத்திற்கு 3 பேட்ச் வீதம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்வியை அளித்து வருகிறார்கள். வீட்டிற்கு அடங்காத பிள்ளைகள் கூட ஒழுக்க சீலர்களாவது கண்கூடான ஒன்று. டிவிஎஸ், பஜாஜ், ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்கள் இங்கு வந்து கேம்பஸ் மூலம் ஆட்களை தேர்வு செய்கிறார்கள் எனில் கல்வியின் தரத்தினை எண்ணிபபாருங்கள்!

4 comments:

  1. Hi saravana

    I had tried with mozilla and it is working for photo upload.

    ReplyDelete
  2. ம‌ல‌ரும் நினைவுக‌ளா! ம்ம்ம்ம்....
    it reminds my school days at Vivekananda..
    anyway u look so handsome in the pictures da..

    good to know about GD Naidus institute..

    ReplyDelete
  3. கார்த்திகேயன்February 9, 2011 at 8:10 AM

    நான் தலையில் முடியுடன் இருக்கும் வெகு சில படங்களில் இதுதான் மிச்சம்.

    நமது நண்பர் குண்டு செந்தில் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் வரும் 16ம் தேதி சுப்பிரமணியப்பிள்ளையூரில் நடக்கிறது. அனைவருக்கும் தெரிவித்துவிட சொன்னார்.

    ReplyDelete
  4. ohh..nice..just pass my regards to him..
    i guess all of our other friends also will come there..mmm ensosssoyyyyy....

    ReplyDelete