Tuesday, October 4, 2011

வாகை சூட வா – விமர்சனம்



1966ம் வருடம் புதுக்கோட்டை மாவட்டம் என ஆரம்பித்ததும்... அட! நம்ம ஊர் கதைக்களமா என நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. (எனது பூர்வீகமும் புதுகைதான்).

ஒரு டூரிங் டாக்கீஸில் எம்ஜிஆரை அடிக்கும் நம்பியாரை பார்த்துவிட்டு பொங்கி எழும் ஒரு குறவர் தனது துப்பாக்கியால் திரையை நோக்கி சுடும்போது மக்களின் அறிவின்மையை ஒரு காட்சியில் கொண்டு வருகிறார் இயக்குனர் சற்குணம். பாராட்டுக்கள். களவாணியில் சிக்சர் அடித்தவர்.. இந்த படத்தில் ஃபோர் அடிக்க முயற்சித்திருக்கிறார்.

கதை நாயகனாக விமல். நாயகியாக இனியா. அறிமுகமாம்.. ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை. பாரதிராஜாவின் அறிமுகம் போல அதகளம். முகத்தில் உணர்ச்சிகளை எளிதில் கொண்டுவந்து மாற்றிக்காண்பிக்கிறார். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பாட்டு. இருந்தாலும் எல்லாமே சின்ன சின்ன பாட்டாக வருகிறது. இசை அமைப்பாளரும் அறிமுகமே.. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. தமிழ் சினிமாவில் புதுமை. ஒளிப்பதிவு படத்தின் உயிரோட்டத்திற்கு முக்கிய காரணம். செம்மண் பூமி கதை என்பதால் விஷுவலில் ஒரு வித்யாசத்தினை காட்டி இருக்கிறார்கள். பீரியட் படம் என்பதை விஷுவல் புரிய வைக்கிறது. படத்தில் வரும் சிறுவர்களும் அவர்களது நக்கல்களும் கலகலப்பு.

விமலை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. உணர்ச்சிகள் இல்லாத அந்த முகத்தினை தொடர்ந்து பார்க்க அலுப்பு வந்து விடுகிறது. கமலஹாசனின் கால்சீட் கிடைக்கததால்தான் தமிழ் சினிமாவிற்கு மோகன் என்றொரு ஹீரோ வந்தார். அதுபோல அஜீத், விஜய் எல்லோரும் கலக்கல் சினிமா கான்செப்ட்டிற்கு போய்விட எதார்த்த சினிமாவிற்கு நாயகனாக விமல் நம்பிக்கை அளிக்கிறார்.

டூனாலெட்டு என்னும் கேரக்டர் தம்பி ராமையா பொருந்திப்போகிறார். மற்ற கதை மாந்தர்களும் பொருத்தம் தான்.. ஆனால் எதற்காக கதையை 45 வருடங்களுக்கு முன்பு நடந்தது போல காட்ட வேண்டும்? சம காலத்திய படமாகவே காட்டி இருக்கலாமே? மேலும் படத்தில் அப்பா கேரக்டராக வரும் பாக்யராஜிற்கு அதிகம் வேலை இல்லை. கிடைத்த இடத்தில் முத்திரை பதிக்கிறார். 1966லேயே அரசு வேலை கிடைக்க கஷ்டம் என்பது போல காட்டியிருக்கிறார்கள். அந்த காலத்தில் அது எளிதுதானே? அது காமராசர் ஆட்சிக்காலம் ஆச்சே! வாத்தியார் உத்தியோகம் எளிதில் கிடைத்ததே..! சரி.. பாக்யராஜ் படித்தவர் தானே.. அதுவும் சுதந்திரம் கிடைத்த காலத்திலேயே..! அவருக்கு கூடவா அரசு வேலை கிடைக்கவில்லை??! அதே போல 1950 களிலேயே முடிவுக்கு வந்து விட்ட “ஆண்டே” (ஜமீன்தார்களின் திவான்கள்) கேரக்டர்களை 1966 கதைக்களத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.. நெருடல்.

நான் 90களின் ஆரம்பத்தில் பாலிடெக்னிக் படிக்க செட்டிநாட்டில் இருந்த சமயம் இந்த படத்தில் வரும் டூனாலெட்டு கேரக்டர் போல் ஒருவர் இருந்தார். இப்படித்தான் புரியாத வகையில் கேள்விகள் மூலம் கணக்கு போட்டு “படிச்ச பசங்களா இதுக்கு பதில் சொல்லுங்க” என்பார். நாமதான் ஸ்கூல்ல படிக்கிறப்பவே அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட்ஸ் (கணக்கு பீரியட்ல கிளாஸ்க்கு வெளியே அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட்ஸ்) ஆச்சே.. எப்படி சொல்ல முடியும்? அவரை கண்டாலே ஓட்டம்தான். கடைசி ஆண்டு படிக்கும் போதுதான் அவரின் பல கணக்குளை ஆராய்ந்து விடை தெரியாமல் அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டோம். பார்க்க பைத்தியக்காரன் போல இருந்த அவர் அந்தக்கால இண்டர்மீடியேட் வரை படித்தவர் என்பதும் விளங்கியது. பர்மாவில் சம்பாத்யம் செய்து வசதியாக இருந்த அவர் அங்கே கலவரத்தில் சொத்துக்களை இழந்து பூர்வீக பூமிக்கு வந்து பிரமை பிடித்தவர் போல ஆகிவிட்டாராம். ஆனால் பேச்சில் மிகவும் தெளிவு இருக்கும்.

கதைக்கு வருவோம்.. இடைவேளை வரை ஜவ்வு மிட்டாய் போல காட்சிகள் நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் வேகமாக பயணிக்கிறது. கண்டிப்பாக இந்த படம் 20 நாட்களுக்கு அதிகமாக ஓடாது. ஆனாலும் பரவாயில்லை அந்த ஓட்டமே தயாரிப்பாளருக்கு இலாபத்தினை அளித்திருக்கும்.

ஒரு முறை பார்க்கலாம்.

3 comments:

  1. நல்ல விமர்சனம் ஸார் ... எனக்கு படம் பிடித்திருந்தது .. ஆனால் ஓடுவது கொஞ்சம் கஷ்டம்தான்...

    ReplyDelete
  2. Thanks for your feedback raja..

    ReplyDelete
  3. புதுகை-யின் மண்வாசம் இங்கே பிரதிபலிக்கிறது.வாசனை பிறலா பதிவு.

    ReplyDelete