Wednesday, October 21, 2009

தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்

தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்

ஹலோ ஃப்ரெண்ட்ஸ்.. எப்படி இருக்கீங்க? நலம்தானே? ரொம்ப நாள் ஆச்சு கடிதம் எழுதி. அதான்.. கிளம்பிட்டேன். ஒரு வித்யாசமாக இருக்கட்டுமே என்று இந்த கடிதத்திற்கு ஒரு தலைப்பு வைத்தேன். தலைப்பும் கூட மிக பொருத்தமாக அமைந்து விட்டது. தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்.. என் மனதில் எளிதில் தோன்றிய வாசகம்.

ஆலம்பாடி மைன்ஸ் போஸ்ட்.. அனேகமாக நம்மில் அனைவருக்கும் இது தான் ஆரம்ப விலாசம். (இப்ப இல்லை). நம்ம லைஃப்ல ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்த எவ்வளோ நல்லா இருக்கும். ஆனாலும் அந்த ரீவைண்ட் பட்டன் நம்ம மனசுக்கு இருக்கு. நான் சொல்வது சரிதானே? என் மனசில இருக்கும் பட்டனை நான் ஆன் பண்ணிட்டேன். கூடவே நீங்களும்தான்.

நால்ரோட்டில் இருக்கும் அந்த ஆர்ச்சை தாண்டி உள்ள வந்தா ஒரு 3 கி.மீ தூரத்தில ஒரு தனி உலகம். சீதை நகர்ன்னு பேர் இருந்தாலும் கூட குவாரிசைட்ன்னு சொன்னா பட்டுன்னு ஞாபகம் வந்துடும். இடையில உக்குவார்பட்டி, பண்டிதகாரனூர் பிரிவுன்னு ரெண்டு ஸ்டாப் வேற. அப்படியே பஸ் வந்து குவாரிக்குள்ளே வந்ததும் இருக்குற ரெண்டு யூனியன் ஆபீஸை சுத்தி வந்தா ஸ்டாப் வந்தாச்சு. (அந்த யூனியன் ஆபீஸில் எந்த ஒரு மீட்டிங்கும் நடந்ததா எனக்கும் நினைவில்லை). மொத்தம் 3 பில்டிங்ஸ் இருந்தாலும் 2 பில்டிங்தான் அதிக அளவில் நம்மால் கையாளப்பட்டிருந்தது. அப்படியே ஊருக்குள்ளே வந்தா சந்தைப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய பள்ளி, ஸ்டோர்கடை, டார்மெண்ட்ரி, கிளப் வளாகம்னு அப்படியே காலணி வந்துடும். அனேகமா சரவணன் வீடுதான் முதல்ல வரும். சுப்பன் வீடு அடுத்து.. இப்படி நம்ம உலகம் விரியும். 1985 ல இருந்து கொஞ்சம் பின்னோக்கி வருவோமா? இந்த டைம்ல ஒரு குரூப் புறத்தாக்குடில படிச்சிகிட்டு இருந்தப்போ ஒரு குரூப் குவாரி பஞ்சாயத்து ஸ்கூல்லயே படிச்சாங்க. ரெண்டாவது குரூப்தான் நான். செல்வபெருமாள் வாத்தியார், தர்மராஜ் வாத்தியார், கமலா டீச்சர் (மத்தவங்க பேரு மறந்து போச்சே) இப்படி எல்லாரும் ட்ரில் குடுத்து நம்ம ஆரம்ப லைஃப் இனிதே தொடங்கியது. ஸ்கூலுக்கு முன்னாடி ரெண்டு யூக்கலிப்டஸ் மரம் கூட இருக்கும். இப்ப இருக்கான்னு தெரியலை. அப்படி இப்படின்னு 5ம் கிளாஸ் தாண்டினதும் நம்ம இராணி மெய்யம்மை ஸ்கூல் லைஃப். கொஞ்சம் கார சாரமாத்தான் ஆரம்பிச்சது. முதல் மாற்றம் யூனிஃபார்ம் அடுத்தது உக்காரத்துக்கு பென்ச் சிஸ்டம். முதல்ல மஞ்சள் கலர் சட்டை. அப்புறம் பெரிய கட்டம் போட்ட சட்டை. அப்புறம் சின்ன கட்டம். இவ்வளோதான் ட்ரஸ் மாற்றங்கள். எக்ஸ்ட்ராவாக ஒரு டையும், ஷூவும். கவுண்டர் கடைல தான் எல்லா மிட்டாய் பர்ச்சேஸும். லேபிள் கலெக்சன் பண்றது பெரிய ஹாபி. நிறைய புத்தகங்கள், நோட்டுக்கள். எல்லாமே நமக்கு புதுசு. அதே மாதிரி டீச்சர்ன்னு கூப்பிட்டுகிட்ட இருந்த நாம மிஸ்ன்னு கூப்பிட ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல கிளப்ல நடந்துகிட்ட இருந்த ஸ்கூல் நான் ஏழாம் கிளாஸ் முடிக்கிற நேரத்தில புது கட்டடத்துக்கு மாற ஆரம்பிச்சது. இந்த பீரியட்ல மறக்க முடியாத வாத்தியார் வீரமலை. வாய்ப்பாடு ரவுண்ட் முடியறதுக்குள்ள அவனவனுக்கு ஒன்னுக்கு போயிடும். அடி பின்னிடுவார். காலைல அவர் டிவிஎஸ்ல ஸ்கூல் கிராஸ் பண்ணி எலிமெண்ட்ரி ஸ்கூல் போகும்போதே கலக்க ஆரம்பிச்சிடும். ஆனா அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் நம்ம எல்லாரையும் இன்னைக்கு நிமிர்ந்து உக்கார வைச்சிருக்கு. கோவிந்தசாமி வாத்தியாரை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. மினிமம் 4 குச்சி உடைச்சிட்டுதான் ஹிஸ்ட்ரியே ஆரம்பிப்பார். ஆனால் இன்னைக்கு யோசிச்சு பாத்தா ஹிஸ்ட்ரிக்கு இவ்வளோ அடி அதிகமோன்னு தோணுது.

வெள்ளிக்கிழமை இரவு வந்துட்டா எப்படிடா ஏமாத்திட்டு சினிமா பாக்குறதுன்னு ஒரு குரூப் டிஸ்கஸ் நடக்கும். நம்ம களவானித்தனமா யோசிக்கும்போது கோவிந்தசாமி வாத்தியார் நம்மளைவிட யோசிச்சு பிடிச்சிறுவார். முத்துலக்‌ஷ்மி டீச்சர், பாத்திமா, ரத்னா, கலவாதி, லலிதா மிஸ் இப்படி எல்லாருமே நாம நல்லா இருக்கனும்னு மனப்பூர்வமா நினைச்சு உழைச்சாங்க. அந்த வயசில நமக்கு வில்லனா தெரிஞ்ச அவுங்கள்ளாம் இப்ப நம்ம மனசில ஹீரோவாயிட்டாங்க. ராஜூன்னு ஒரு பி.டி.வாத்தியார் இருந்தார். அனேகமாக அவர்தான் நமக்கு சரிசமமாக பழகியவர். அப்புறம் தி கிரேட் புண்ணியமூர்த்தி வாத்தியார். எல்லருக்கும் இவர் பேர் தெரியாதுன்னு நினைக்கிறேன். தமிழ் அய்யான்னு சொன்னா போதுமே! இவர் கிளாஸ் ஜாலியா போகுமா.. இல்லை களேபரமான்னு யாரலையும் சொல்லவே முடியாது. அன்பு, அடி.. இவருக்கு மிஞ்சின ஆளு இல்லை. என் அண்ணா, நான், என் தம்பி என எலலாருக்கும் கிளாஸ் எடுத்தவர். போர்ட்ல ரொம்ப வேகமாக எழுதக்கூடியவர். ஓரளவுக்கு சோதிடமும் தெரிஞ்சவர்ன்னு ரொம்ப நாள் கழிச்சி நான் தெரிஞ்சிக்கிட்டேன். கடைசியா சௌந்தர்ராஜன்னு ஒரு பி,டி.வாத்தியார் இருந்தார். அவரும் நல்லவரே.

வாரத்தில் ஒரு சினிமா மட்டுமே சாத்தியம் என்று இருந்த நிலையில் கேபிள் டி.வி. கொண்டு வந்த மாற்றம் மிகப்பெரியது. முதலில் குண்டு செந்திலால் நிர்வகிக்கப்பட்ட கேபிள் பிறகு நாகராஜ் கையில் மாறியது. மதியம் 2 மணிக்கு ஒரு காட்சி. இரவு 8 மணிக்கு ஒரு காட்சி என சினிமா காண்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நிலை வெகு நாள் நீடிக்கவில்லை. 1994ல் வந்த சன் டிவி வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. ஆனால் சாயங்காலம் 6 முதல் இரவு 8 மணி வரை இருந்த டிவி வாழ்க்கையை ராஜ் டிவி (முதன் முதலில் 24 மணி நேர சேனல்) முற்றிலும் மாற்றியது. பிறகு வந்த விஜய், ஸ்டார், கே டிவி என சேனல்கள் கூடிக்கொண்டே போய் இப்ப அனேகமாக 21 தமிழ் சேனல்கள் தெரிகிறது.

ஸ்ரீராம் வீட்டு கொல்லையில் விளையாடப்பட்ட பேந்தா, அனல் வீட்டு சைட் ரோடில் கிரிக்கெட், செவன்ஸ்டோன், இராம்குமார் வீட்டு எதிரில் கிரிக்கெட், அனல் வீட்டு மாமர அடியில் அனிபுல், பல வீட்டு திண்ணையில் விளையாடப்பட்ட ரம்மி இப்படி நினைவில் நின்றவை நிறைய. இதையெல்லாம் விட சுவராசியமானது மீன் பிடித்தல். அதில் கருவாயன், ப்ளாக்கன் இருவரும் ஸ்பெசலிஸ்ட். அனேகமாக குவாரி பறவைகளான நாம் அனைவருமே தூண்டில் பிடித்து இருக்கிறோம். ஒரு முறை ஒரு செட்டாக மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது யாருக்குமே மீன் கிடைக்கவில்லை. அப்போது பைராம்கான் தான் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீனை யாருக்குமே தெரியாமல் மீண்டும் கொக்கியில் மாட்டி தண்ணியில் போட்டுவிட்டு பிறகு எல்லாரும் பார்க்கிறமாதிரி எடுத்த போது இருந்த மீனும் போய்விட்டது. இப்படி மறக்க இயலாத காமெடிகள் அதிகம்.

இப்படி அருகருகே இருந்த வீட்டு உறவுகள் இன்று எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை. குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க இயலாத நிலையில் ஒரு வாழ்க்கை. எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் தன்னிறைவை அடைந்து விட்டாலும் குவாரியில் கொண்டாடிய தீபாவளியை போல இன்னும் ஒருமுறை கொண்டாட முடியாதா என மனம் ஏங்குவதை அறிய முடிகிறது. 100 ரூபாய்க்கு குஜிலியம்பாறையில் பட்டாசு வாங்கி ஒரு கூடை நிறைய என் அண்ணா கொண்டுவந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று 1000 ரூபாய் கொடுத்தாலும் கூட ஓலை பட்டாசு வாங்க முடிவது இல்லை. தீபாவளி என்றதும் ஸ்ரீராம் நினைவில் வந்து போகிறான்.

இரவு நேரங்களில் செந்திலுடன் சேர்ந்து கொண்டு ஏர்கன்னில் மைனா சுட்டது, அரை பரீட்சை லீவில் பொன் வண்டு பிடித்து முட்டை போட வைத்தது, கோவிந்தசாமி வாத்தியார் வீட்டு நைட் ஸ்டடி, வாலிபால் விளையாட்டுக்கள், தீபாவளிக்கு ஊர் சுற்றல் என மனதில் மட்டுமே நினைவில் வாழ்கிற பல விசயங்கள். அந்த சமயம் நம்மில் யாரிடமும் காமிரா இல்லாததால் விட்டுப்போன காட்சிகள் பல.
குறைந்த பட்சம் நமது இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் புகைப்படங்கள் ஆறுதல் அளிப்பவை. நண்பர்களே! இன்னும் நிறைய படங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்வோம். வாரம் ஒருமுறையாவது குறைந்த பட்சம் இணையத்தில் கருத்துப்பரிமாற்றத்தை கண்டிப்பாக மேற்கொள்வோம் என உறுதி எடுப்போம். நம் சக்திக்கு மீறி நாம் பிரிக்கப்பட்டுவிட்டோம். ஆனால் நம் சக்திக்குட்பட்ட இணையத்தில் ஒன்றிணைவோம்.

வாழ்க வளமுடன்.

மிக்க அன்புடன்.
கார்த்திகேயன்.

6 comments:

  1. // karthi said:
    கோவிந்தசாமி வாத்தியாரை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. மினிமம் 4 குச்சி உடைச்சிட்டுதான் ஹிஸ்ட்ரியே ஆரம்பிப்பார். ஆனால் இன்னைக்கு யோசிச்சு பாத்தா ஹிஸ்ட்ரிக்கு இவ்வளோ அடி அதிகமோன்னு தோணுது.
    //

    ha ha ha..very nicely said..laugh out loud...
    now i dont hv time..will read later tonight..

    by the way excellent post!

    take care

    ReplyDelete
  2. ஹாய்!! கார்த்தி சூப்ப‌ர் போஸ்ட்...ரொம்ப‌ ர‌சிச்சு ப‌டிச்சேன்...ரொம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்க‌...
    என‌க்கும் பிடிச்ச‌ த‌லைப்பு...."தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்"..........
    அப்ப‌டியே என‌க்கு ந‌ம்ம‌ளோட‌ 6th to 10th life - revind ஆச்சு....

    நான் மிக‌வும் ர‌சித்து ப‌டித்த‌ வ‌ரிக‌ள்..


    //
    நால்ரோட்டில் இருக்கும் அந்த ஆர்ச்சை தாண்டி உள்ள வந்தா ஒரு 3 கி.மீ தூரத்தில ஒரு தனி உலகம். சீதை நகர்ன்னு பேர் இருந்தாலும் கூட குவாரிசைட்ன்னு சொன்னா பட்டுன்னு ஞாபகம் வந்துடும்
    //
    //
    இந்த பீரியட்ல மறக்க முடியாத வாத்தியார் வீரமலை. வாய்ப்பாடு ரவுண்ட் முடியறதுக்குள்ள அவனவனுக்கு ஒன்னுக்கு போயிடும். அடி பின்னிடுவார். காலைல அவர் டிவிஎஸ்ல ஸ்கூல் கிராஸ் பண்ணி எலிமெண்ட்ரி ஸ்கூல் போகும்போதே கலக்க ஆரம்பிச்சிடும்.
    //
    //
    கோவிந்தசாமி வாத்தியாரை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. மினிமம் 4 குச்சி உடைச்சிட்டுதான் ஹிஸ்ட்ரியே ஆரம்பிப்பார். ஆனால் இன்னைக்கு யோசிச்சு பாத்தா ஹிஸ்ட்ரிக்கு இவ்வளோ அடி அதிகமோன்னு தோணுது.
    //
    //
    வெள்ளிக்கிழமை இரவு வந்துட்டா எப்படிடா ஏமாத்திட்டு சினிமா பாக்குறதுன்னு ஒரு குரூப் டிஸ்கஸ் நடக்கும். நம்ம களவானித்தனமா யோசிக்கும்போது கோவிந்தசாமி வாத்தியார் நம்மளைவிட யோசிச்சு பிடிச்சிறுவார்
    //
    //
    அனேகமாக குவாரி பறவைகளான நாம் அனைவருமே தூண்டில் பிடித்து இருக்கிறோம். ஒரு முறை ஒரு செட்டாக மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது யாருக்குமே மீன் கிடைக்கவில்லை. அப்போது பைராம்கான் தான் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீனை யாருக்குமே தெரியாமல் மீண்டும் கொக்கியில் மாட்டி தண்ணியில் போட்டுவிட்டு பிறகு எல்லாரும் பார்க்கிறமாதிரி எடுத்த போது இருந்த மீனும் போய்விட்டது. இப்படி மறக்க இயலாத காமெடிகள் அதிகம்
    //
    //
    அந்த சமயம் நம்மில் யாரிடமும் காமிரா இல்லாததால் விட்டுப்போன காட்சிகள் பல.
    குறைந்த பட்சம் நமது இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் புகைப்படங்கள் ஆறுதல் அளிப்பவை.
    //

    ReplyDelete
  3. கார்த்திகேயன்October 26, 2009 at 11:23 AM

    ஆமாம் சரவணா.. டைட்டானிக் கிழவி கிளைமாக்ஸில் சொன்ன டயலாக் நமக்கும் பொருந்தும். கப்பலில் 1912ல் நடந்த சம்பவங்கள் யாவும் என் மனதில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லும். அதே மாதிரி குவாரி வாழ்க்கை நமது மனதில் மட்டுமே இருக்கிறது. இன்னும் நிறைய பேர் இந்த கட்டுரையில் மிஸ்ஸாகிவிட்டார்கள். உதாரணமாக அம்சகோயா, சங்கர், கிரி அண்ணா, அம்பி, மனோகரன், விப்பி, ஜாய், வி.டி.ஆர், பன்னீர், ஸ்கூல் ப்யூன்ஸ் பழனி & முத்துச்சாமி அண்ணா, மாசி இப்படி நிறைய. இன்னும் அடுத்த அடுத்த கடிதங்களில் இவர்களின் குவாரி பங்களிப்பையும் இணைக்கிறேன். நேரம் தான் பிரச்சனை. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி போஸ்ட் செய்வேன்.

    சங்கர் போன் செய்து கட்டுரை மிக நன்றாக வந்துள்ளது என வாழ்த்தினார்.

    இன்னும் நிறைய நண்பர்களது பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. கார்த்திகேயன்October 26, 2009 at 11:25 AM

    அன்பு நண்பர்களே! நமது குவாரி டீக்கடை குருசாமி மாமா மகன் மதியழகன் 2 நாட்களுக்கு முன்பு எனது மெயில் விலாசத்திற்கு புகைப்படங்கள் அனுப்பி இருந்தான். அவனது மெயிலை அனைவருக்கும் அனுப்பி உள்ளேன். பார்த்துவிட்டு தொடர்பில் வைப்போம்.

    ReplyDelete
  5. கார்த்திகேயன்October 26, 2009 at 11:36 AM

    அதே மாதிரி கணக்குல டேன் தீட்டா, காஸ் தீட்டா, மேட்ரிக்ஸ், ட்ரிக்ணாமெண்ட்ரி இப்படி கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்த எவையுமே இதுவரைக்கும் எனக்கு உபயோகம் ஆகலை. குறிப்பா பிதாகரஸ் தேற்றம். என்னடா படிப்பு இது. இப்ப நினைச்சா காமெடியா இருக்கு. இந்த படிப்புகள் தேவை இல்லைன்னு நான் சொல்ல வரலை. இதெல்லாம் கல்லூரிப்படிப்பிலே இருந்தாலே போதுமானது. அப்புறம் சிவிக்ஸ். சொல்லவே தேவை இல்லை. தமிழ்ல நிறைய பாடங்கள். மனப்பாடப்பகுதின்னு தனியா வேற. கஷ்டகாலம்.

    ReplyDelete
  6. கார்த்திகேயன்October 26, 2009 at 11:40 AM

    கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெலியிய நட்பின் மயிலியற் செறியற் அறிவை அறியவும் உளவோ நீ அறியும் பூவே. இந்த செய்யுளை மனப்பாடம் செய்தது இன்னும் என் நினைவில் இருக்கு. ஆனா இது எந்த அளவுக்கு எனக்கு உபயோகம் ஆச்சுன்னு பாத்தா சிரிப்பா இருக்கு.

    ReplyDelete