Monday, April 9, 2012

விஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை



இன்று அரசியலில் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசவே இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே ஆகும்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த் ஆவார். சினிமாவிற்குண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும் கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம்.



நெடிய போராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை” என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்) தான் ரஜினியும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.



இயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான்.



இவரின் நிர்வாகத்திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது.

அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதிலும் காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை. இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்ஜியார் போல எம்ஜியாருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது. இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம்.





இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார். இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாட மாட்டேன் எனவும் மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர்.

விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை.

5 comments:

  1. எம்‌ஜி‌ஆர் அவர்களுக்கு பிறகு திரைதுறையில் இருந்து கருணாநிதியை எதிர்க்கும் தைரியம் கொண்ட ஒரே ஆள் இவர்தான்

    என்னதான் ஊடகங்களும் ,சில படித்த கணினி மேதாவிகளும் அவரை காமடியனாக காட்ட முயற்சித்தாலும் தென்மாவட்டங்களின் கிராமபுரங்களில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு என்றும் சரியாது ...

    ReplyDelete
  2. தமிழ்நாடு முழுக்கவே இவருக்கு பரவலாக ஓட்டு வங்கி உள்ளது. சென்னை முதல் கன்யாகுமரி மாவட்டம் வரை இவருடைய கட்சி ஜெயித்துள்ளது. இவர் பிற்காலங்களில் அசைக்க முடியாதவராக வருவார். பண்ருட்டி ராமச்சந்திரன் போல இன்னும் இரண்டு நபர்கள் இவருக்கு துணையாக இருந்தால் எதிர்காலம் பிரகாசம்.

    கருத்துக்கு நன்றி ராஜா..

    ReplyDelete
  3. ஹலோ சார், தெளிவா சொல்லி இருகிங்க .

    ReplyDelete
  4. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரமேஷ் மணி..

    ReplyDelete
  5. இந்த பதிவின் சில பத்திகள் குமுதம் ரிப்போர்ட்டரில் இன்று வெளிவந்துள்ளது... நன்றி

    ReplyDelete